தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இனிக்
கூட்டணிகள் பற்றிய ஊகங்கள், கணக்கீடுகள், அறிவுரைகள். ஆலோசனைகள் என உள்ளுர் டீக்கடை பெஞ்சுகளில் துவங்கி உலகளாவிய தொலைக்காட்சி பெஞ்சுகள்
வரை தொடரும். யார் யாருடன்
சேரலாம், யார் யாருடன் சேரக்கூடாது, யார்
யாருடன் கூட்டணியமைப்பதால் யார் வெற்றி பெறுவார் யார் யாருடன் சேர்ந்தால் மற்றவர் தோல்வியடைவார்
உள்ளிட்ட கணக்கீடுகள் தினவாழ்வை நகர்த்த போதுமான உரையாடல் தளமாக அமைந்துவிடும்.
இந்தியா போன்ற உரிமைகள் மறுக்கப்பட்ட, ஏழ்மை அதிகம்
உள்ள நாட்டில் குடிமகன் என்ற உரிமையை நினைவூட்டும் நாள் என்பதால் தேர்தல் ஒருவகையான
தேசியத் திருவிழாவாக நிகழ்கிறது. அதிலும்பார்க்க ஜனநாயகம் என்ற
ஒன்றை மக்கள் அறியவும், அனுபவிக்கவும், உரிமையை உணரவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அரசியல் நிகழ்வு. அதன் உள்ளுறைந்திருப்பதோ விளையாட்டில் கிடைக்கும் வெற்றித் தோல்வி மனோபாவமும்,
பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்டத்தில் உள்ள மகிழ்ச்சியுமே.
மேலும், ஒவ்வொரு அய்ந்தாண்டிற்கு ஒருமுறை
புதிய அரசியல் சக்திகளை உருவாக்கும் ஒரு எந்திரமாகவும் இத்திருவிழா செயல்படுகிறது.
சாமான்ய மனிதன் தேர்தலில் ஈடுபடும் குழுக்கள் வழியாக தன்னையொரு சார்பான அரசியல்
சக்தியாக உருவாக்கிக் கொள்கிறான். வாக்குரிமை பெறும் இளந்தலைமுறையினர் இப்படியாக
அரசியல் சக்தியாக வார்ப்பதற்கான ஒரு சடங்காக நிகழ்வதே இத்தேர்தல்.
ஒரு அரசாங்கத்தை அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை
மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், அது அவர்களது சமூக வாழ்வை அடுத்த அய்ந்தாண்டுகளுக்கு
பாதிக்கக்கூடிய ஒன்று என்ற ஓர்மையின்றிதான் வாக்களித்தல் நிகழ்கிறது. சமூகவாழ்வு என்பது ஒரு உடலுக்கு அது வாழும் சமூகத்தினால் தரப்படும் தினவாழ்வு
என்ற வாழ்க்கை. ஒரு மனித உடல் தினமும் என்ன பேசவேண்டும்?
எதைப்பற்றி சிந்திக்க வேண்டும்? எதை நோக்கி நகரவேண்டும்?
எதற்காக ஆசைப்படவேண்டும்? உள்ளிட்ட அனைத்தும் அன்றைய
அரசியலால், ஆதிக்கச் சக்கதிகளால், முதலாளிய
உறவுகளால் தீர்மாணிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு தேர்தலிலும்
வாக்களிக்கும் மக்கள் இந்த சமூக உறவால் தீர்மாணிக்கப்பட்ட நிலையில்தான் தனது வேட்பாளரை,
கட்சியை, அரசியலை தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஜனநாயக அரசியல் இந்த தேர்ந்தெடுக்கும் உரிமையை
வேளிப்படையாக வழங்கினாலும், உள்ளுக்குள் எதை தேர்ந்தெடுப்பது என்பதை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.
தேர்தலை அரசு நடத்தினாலும் (அரசாங்கம் தேர்தலை
நடத்துவதில்லை காரணம் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்குத்தான் தேர்தல் என்பதால் மக்கள்
நேரடியாக அரசை உணர்வது தேர்தலில்தான்) அதன் வாக்காளர்களை,
கட்சிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் அதிகார சக்திகளிடமே உள்ளது.
அல்லது அந்தந்த கட்சிகளின் பின்னால் அதற்கான அதிகார சக்திகள் மறைமூகமாகவும்,
பங்குதாரர்களாகவும், பயன்படுத்துபவர்களாகவும்,
இயக்குபவர்களாகவும் உள்ளனர்.
இத்தகைய மறைமுக சக்திகளின் கட்டுப்பாடுகள்
நிலவினாலும் ஜனநாயகம் என்கிற மக்கள் பிரிதிநித்துவ அரசியலில் தேர்தல் என்பது மட்டுமே
அடிப்படையான அரசியல் உரிமையாக உள்ளது என்பதை மறுத்துவிட முடியாது. உண்மையில் இது
மக்களைத்தான் பிரதிநிதித்துவப் படுத்துகிறதா? என்றால் இல்லை.
மக்கள் பிரதிநிதியாக உருவாக்கப்பட்ட அரசியல் தலைவர்களும் அவர்களது பின்னின்று
இயக்கும் சக்திகளையுமே. ஒர் உருவகமாகச் சொன்னால் அய்ந்தாண்டுகளுக்கு
ஒருமுறை அதிகாரம் என்கிற உறைவாளுக்கு உறையாக யார் இருப்பது என்பதை தேர்ந்தெடுப்பதே
தேர்தல்முறை. உறையுள் உள்ள வாளை தேர்ந்தெடுப்பது அல்ல.
அதிகாரம் என்கிற கத்திக்கான உறையை தேர்ந்தெடுப்பதே. உறைவாள் எப்பொழுதும் யாரைக் காக்க உருவாக்கப்பட்டதோ அந்த பணியை சரியாகச் செய்துகொண்டிருக்கும்.
வாளே அரசு. உறையே அரசாங்கம்.
இந்த உறையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை
சந்திக்கத்தான் அரசியல் கட்சிகள் மக்களை சந்திப்பதற்கு முன்பாக கூட்டணித் தலைவரை
சந்திக்கின்றன. கூட்டணி என்பது வெறும் எண்ணிக்கை சார்ந்த கூடுதல் அல்ல. அது
கட்சிசாராத பொதுவாக்காளர் மனநிலையை தீர்மாணிக்கும் ஒரு உளவியல் ஆயுதம். அதனால்தான்
இந்திய அரசியலில் தேர்தல் கூட்டணி என்பது எப்பொழுதும் கொள்கைக் கூட்டணியாக
இருப்பதில்லை. காரணம் அரசியலற்ற பொதுமக்கள் தன்னை பாதுகாக்கக் கூடியதான ஒரு
பாதுகாப்பு அமைப்பாக அரசாங்கத்தை உருவாக்க, வெற்றிபெறக்கூடிய கட்சி என்ற ஒரு
கருத்துநிலையை கவனிக்கிறார்கள். குடியாண்மை சார்ந்த மக்களின் குடிமைநிலையில்
இத்தகைய பாதுகாப்பும், தான் வாக்களிக்கும் கட்சி வெற்றிபெறவேண்டும் என்கிற பந்தய மகிழ்ச்சியுமே
தேர்தலில் பங்குபெறும் மக்களின் மனநிலை. அதனால் வெற்றிபெறக்கூடிய கூட்டணி என்பது
இந்த கட்சிசாரா அரசியலற்ற பொதுமக்களை குறிவைத்து உருவாக்கப்படுகிறது.
பொதுவாக இன்றைய அரசியல் கட்சிகளே
கொள்கைரீதியான கட்சிகள் அல்ல. எல்லா கட்சிகளுக்கும் வேறுபாடின்றி இருப்பது ஒரே
கொள்கைதான். அதிகாரம் பெறுவது, அள்ளிக் குவிப்பது, அடுத்த தேர்தலை சந்திக்க
குவித்ததில் கொஞ்சம் செலவழிப்பது. தங்களது கொள்ளையிட்ட பணத்தில் தேர்தல் வழியாக
மக்களையும் பங்காளியாக ஆக்கிவிடுவது. ஊழலை, கையூட்டுப் பெறுவதை, லஞ்சத்தை சாமானிய மக்களுக்கும்
பழக்குவதன்மூலம் ஊழலை தேசியமயமாக்குவது. ஊழலை எதிர்த்து பேசமுடியாத குற்ற உணர்விற்கு
மக்களை பழக்குவது. கறைபடிந்த மக்களை உருவாக்குவதன் வழியாக கறைபடிந்த
அரசியலை நியாயமானதாக்கிவிடுவது. அதன்மூலம் ஊழலை நிறுவனமயப்படுத்திவிடுவது.
இதுதான் இன்றைய தேர்தல் முறையின் ஆகப்பெறும் வளர்ச்சி.
அதாவது, அரசியல் உரிமையை விற்பனைப் பண்டமாக
மாற்றியுள்ளது இன்றைய தேர்தல்முறை. தினமும் உழைப்பை விற்பதைப்போல் அய்ந்தாண்டுகளுக்கு
ஒருமுறை உரிமையை விற்கிறார்கள். உழைப்பை விற்பது நேரடியாகவும்,
உரிமையை விற்பது மறைமுகமாகவும் நடத்தப்படுகிறது. தேர்தல் தற்பொழுது அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூடும் கிராம சந்தைபோல ஆகிவிட்டது.
சந்தைப் பெருளாதாரத்தில் எல்லாம் பண்டமயமாகியுள்ளது. அதில் வாக்கும் ஒன்று. அதிக விலை தரும் அரசியல் கட்சியே
அதிக பண்டத்தை வாங்கமுடியும் என்பது எழுதாவிதியாக உள்ளது. வாக்கிற்கு
வழங்கப்படும் பணம் திரும்ப வெற்றிபெற்ற கட்சியின் அரசாங்கத்தால் பல ஊழல்களின் வழிப்
பெறப்படுகிறது. இது ஒரு மீள்சுற்று.
இந்த அரசியல் உரிமைப் பண்ட விற்பனையில்
புழங்கும் பணப்புழக்கத்தை அரசே தேர்தல் ஆணையம் மூலமாக கட்டுப்படுத்தும் அளவிற்கு
இந்திய தேர்தல்முறை அபார வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதே தேர்தல்களின்
சுயாட்சித் தன்மையை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. அரசியல் கட்சிகளின்
பெருமுதலாளிகளின் கள்ளப்பணத்தை (கருப்பு என்பதை இதுபோன்ற கீழ்மைகளுக்கு
பயன்படுத்துவதை தவிர்ப்பது ஒரு நிறஅரசியல் நிலைபாடு என்பதால் கள்ளப்பணம் என்று
சொல்வதே சரியானது.) நல்லப்பணமாக (அதாவது வெள்ளை என்பதே நல்லது என்பதும் அதே நிறஅரசியல்
நிலைபாடு சார்ந்ததே) மாற்றுவதன் வழியாக கள்ளப்பணம் என்கிற தேசவிரோத செயலில் மக்களை
ஈடுபடுத்தி ஒட்டுமொத்த மக்களையும் தேசவிரோதியாக மாற்றுகிறது.
இதைதவிர சிறியகட்சிகள் மற்றும் சாதியக்கட்சிகள்
பெருங்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலுக்கு முன்பே அடுத்த அய்ந்தாண்டுகள்
கட்சி நடத்துவதற்கான பொருளியல் பலத்தைப் பெறுகின்றன. அதாவது கள்ளப்பணத்தை பெட்டிகள்வழி
(சூட்கேஸ்கள்) பகிர்ந்து கொள்வது. சீட்டுபேரமும், ஓட்டுபேரமும் அடிப்படையில்
பணமதிப்பில் நிகழ்த்தப்படுவதே கூட்டணிகளின் அரசியல். சாதியக் கட்சிகளின் தலைவர்கள்
தங்கள் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டே தங்களின் பேரமதிப்பை பெறுகிறார்கள்.
ஆக, கள்ளப்பணத்தின் சுற்றுவட்டத்தை
அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை உருவாக்குவதே இன்றைய தேர்தல்முறையின் அடிப்படையாக
மாறியுள்ளது. கள்ளப்பணம்-நல்லப்பணம்-கள்ளப்பணம் என்ற முடிவற்ற தொடர் விளையாட்டே
இதில் நிகழ்வது. கள்ளப்பணத்திற்கும் நல்லப்பணத்திற்கும் இடையில் உள்ள முக்கிய
வேறுபாடே, அது அரசாங்கத்தின் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு, சட்டவிதிமுறைகளை மீறி
அல்லது அதை ஏமாற்றிச் சேர்த்த பணம் என்பதே. ஆக, அரசாங்கத்தை ஏய்த்தவர்கள்தான்
அரசாங்கத்தை அமைக்க இந்த திருவிழாவை கோலாகலமாக்குகிறார்கள். வழக்கம்போல்
ஆடுகளத்தில் மக்கள் ஆட்டக்காய்களாக உள்ளனர். இதுதான் இந்த ஆட்டத்தில் மிகவும்
சுவராஸ்யம் தரக்கூடியது.
மக்கள் கட்சிகளாக, குழுக்களாக, சாதிகளாக
திரள்வதன் வழியாக உருவாகும் அரசியல் நிறுவனங்களாக கட்சிகள் மாறியுள்ளன. கட்சி
என்பது வர்க்க உணர்வுபெற்ற முன்னணிப்படை என்றார் லெனின். பாட்டாளிகள்,
உழைப்பாளிகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்க உணர்வுப்பெற்ற முன்னணிப்
படைகளைத் தவிர மற்ற ஒடுக்கும் வர்க்கத்தின் முன்னணிப்படைகள் களத்தில் நின்று
அதிகாரத்தைப்பெற நடத்தப்படும் தேர்தல் திருவிழாவில் கவனிக்க வேண்டிய ஒன்றுதான் இந்த
கூட்டணிகள். வெற்றிப் பெருவதற்கான வாய்ப்புள்ள கட்சிகளை கவிழ்ப்பதற்கும் தோல்வியடையக்கூடிய
கட்சிகளை வெற்றிப்பெறச் செய்வதற்கும்கூட கூட்டணிகள் உருவாக்கப்படுகிறது. இது ஒரு
புது அரசியல்பாணி அல்லது புதுவகை தேர்தல் அரசியல் ஆடுகள விளையாட்டு.
இவ்விளையாட்டில் முதன்மை அணி, இரண்டாம்
அணி என்பதாக பல அணிகள் உருவாக்கப்படுகிறது. அதாவது விளையாட்டுகளில் வெல்ல தனது
அணியை முதன்மைச் சுற்றிற்கு கொண்டுவர தனக்கு சாதகமான அணிகளை உருவாக்கும் உத்தி
இதிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கூட்டணி உத்தி இரண்டுவகையானது ஒன்று
கலையும் கூட்டணி மற்றது கலக்கும் கூட்டணி. மற்ற எல்லாக் கூட்டணிகளும் தேர்தலுக்கு முன்னும்
பின்னும் தொண்டர் கூட்டத்தை கலைக்காமல் தன் பின்னால் கூட்டிச் சென்றுவிடக்கூடிய
வெறும் தேர்தல் கூட்டணிகள்தான். ஆனால், பா.ஜ.க. கூட்டணி என்பது ஒரு ஆக்டோபஸ்
கூட்டணி. அதாவது கலையும் கூட்டணியல்ல, கலக்கும் கூட்டணி. தனது கூட்டணி கட்சிகளின்
தொண்டர்களை அப்படியே உறிந்துவிடும் அக்கட்சி. ஒவ்வொரு கூட்டணிக்கு பின்னும்
அக்கட்சி தமிழகத்தில் அதிக வாக்குகளைப் பெறுவதை ஆராய்ந்தால் இந்த உண்மை
புரியக்கூடும்.
காரணம் ப.ஜ.க. கூட்டணி தேர்தல் கூட்டணி
அல்ல. தேர்தல்களில் கூட்டணி வைப்பதன்மூலம் மாநிலக்கட்சிகளின் வேர்க்கால்மட்ட
மதஉணர்வுக்கொண்ட கட்சித் தொண்டர்களை அப்படியே கபளீகரம் செய்துவிடும் ஒரு ஆக்டோபஸ் இயக்கம்
பா.ஜ.க. காரணம் அதன் கருத்தியலும் பொய்யான பரப்புரைகளும், எற்படுத்தும் ஆசைகளும்,
உருவாக்கும் வேட்கைகளும் அதற்கு தீணி போடும் விதமுமாக அக்கட்சி தனது அடித்தளத்தை
பரப்பிவிடுகிறது. அதனால்தான் அது வெற்றி தோல்விபற்றிய கவலையில்லாமல் எல்லா
கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொள்கிறது. இரண்டு சீட்டுகள் மட்டுமே கொண்டிருந்த
பா.ஜ.க. பின் ஜனதாதளக் கூட்டணியில் 85 இடங்கள் பெற்றது. தொடர்ந்து இன்றுவரை கூட்டணிகள்
அமைப்பதும் அதன் பின் தனது சீட்டு எண்ணிக்கையை அதிகரிப்பதுமாக இருக்கிறது. அதோடு
கூட்டணி வைத்த கட்சிகள் அதன்பின் தங்கள் பலத்தை இழந்து நிற்பதும் இதோடு இணைந்து
நோக்கத்தக்கது. இது இந்துத்துவத்தை வேர்க்கால் மட்டத்தில் கொண்டு செல்வதற்கான அதன்
உத்தியே தவிர தேர்தல் மற்றும் ஜனநாயகம் போன்ற அமைப்புகளில் அக்கட்சிக்
கொண்டிருக்கும் நிலைப்பாடு அனைவரும் அறிந்ததே.
பா.ஜ.க. மற்றக்கட்சிகளைப்போன்ற ஒரு அரசயில்கட்சி அல்ல. அதனால்
பா.ஜ.க. கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல, தனது இந்துத்துவ தொண்டர்களை தேடும் கூட்டணி
திரட்டும் கூட்டணி என்பதால் அதோடு கூட்டணி அமைக்கும் கட்சிகள் எச்சரிக்கை கொள்வது
அவசியம். ஊரில் ஒரு கதைசொல்வார்கள். ”நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டுவருகிறேன்
இருவரும் ஊதி ஊதி தின்போம்” என்று. இப்போது அரசியோடு யார் வருவார்கள் என உமியுடன்
காத்திருக்கிறது என்ற எச்சரிக்கையை கையில் ஒன்றிரண்டு அரிசி வைத்துள்ள கட்சிகள்
கவனத்தில் கொள்வது நல்லது.
-ஜமாலன் (06-03-2016) - மின்னம்பலம் இணைய இதழில் வெளிவந்தது.
x
மொழி ஒரு கூட்டத்தின் பொது
நினைவுகளை பெருக்குவதன் மூலம் வரலாற்றை உருவாக்கியும், மறத்தலின் மூலம்
அழித்தும் எழுதுகிறது.
வரலாறு என்பது நினைவுகளின் வாக்கியத் தொடர்ச்சிகளாக
உற்பத்தி செய்யப்படுவதே.
தொடர்ச்சியற்ற வாக்கியத் தொடர்களை தங்களது பேச்சாக கொண்டவர்களை, பழைய சமூகம்
மந்திரவாதி,
சித்தர் என்று குறிநிலைப்படுத்தி உள்ளது.
இவர்கள் வரலாற்றிற்கு வெளியேயான அதன் ஒழுங்கமைப்பை அச்சுறுத்தும் நினைவுகளைக்
கொண்டவர்கள்.
நினைவுருவாக்கம், வரலாற்றுக்
கதைகளை பதியவைப்பதுடன்,
ஒவ்வொரு காலத்திற்கும், அதிகாரமானது
வரலாற்று நினைவை தனது மறுகதையாடல் மூலம் புதிய குறி அமைப்புகளுக்குள் புகுத்தி, அன்றைக்கான
உடல்களை அரைத்து கலக்கும் அரசியலை நிகழ்த்தி விடுகிறது.
உனக்கு நம் சமூகத்தில் நடந்த அதிகார பெருமத வரலாற்று
எந்திரத்தால் உடல்கள் அரைத்துக் கலக்கப்பட்ட ஒரு கதையைக் கூறுகிறேன் கேள்.
இந்திய வரலாறு ராமாயணம் என்கிற
வண்ணத் தொலைக்காட்சி தொடர்மூலம் மதநினைவுடன் மீள்-உருவாக்கம் செய்யப்பட்டதின் விளைவாக பாபர்-மசூதி இடிக்கப்பட்ட
கதைதான் அது. ராமாயணம்
என்கிற பெருங்கதையாடல் அரசுத் தொலைக்காட்சியின் மூலம் ‘prime-time’–ல் பரவலாக்கப்படுகிறது. இந்த
ராமாயணத்தைப் பார்க்கச் செய்வதற்காக பல பத்திரிக்கைகள் உருவாக்கிய கதையாடல்கள்
ஏராளம். இதற்காக
அறுவை சிகிச்சைகள்கூட மாற்றி
வைக்கப்பட்டன. ஒளி
பரப்பப்படும், அந்த
குறிப்பிட்ட நேரம் நாடே உறைந்து போன ஒரு அமைதி–போர்த் தயாரிப்புகளில் நிலவுவதைப்போன்று. ராமாயணத் தொடர்
முடிந்த பிறகு, அதன்
கதாபாத்திரங்கள், சமகால
அரசியலுக்குள் வருகிறார்கள் தேர்தல் வேட்பாளர்களாக. பின், நாடெங்கும்
‘கரசேவை’-க்கான கல் சேகரிப்பு இயக்கம். ‘பாரத வரலாறு’ மக்களிடம்
பரவலாக்கப்பட்டு, கல்லின்
வழியாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
சாதரண ‘கல்’ ஒரு வலிமையான
குறியீடாகி, ராமர்
கோவில் கட்டப்படும் ‘தேசியப்
பணியில்’ மக்கள்
அனைவரும் பங்குபெறவும்,
அதற்கான பொறுப்பை ஏற்கவும் மக்களது மனநிலையை தயார் செய்ய முயன்றது. இக்’கற்கள்’ ஒவ்வொரு
குடிமகனையும், பாரத
வரலாற்றின்(ஊ) கட்டிடக்
கற்களாக,
வரலாற்றுத் தன்னிலைகளாக மாற்றியது.
இவ் ஊர்வலம் மூலம்,
தேசிய எல்லைப்பரப்பையும், ஒரு
சுற்றுவட்டம் இடப்பட்டு, பல்வேற
இன, மொழி, சிறு கலாச்சார
அடையாளங்கள் ‘பாரதவாசி’ என்கிற ஒற்றை
குறிக்குள் சுருக்கப்படுகிறது. இதன் இன்னொரு பலன் வலிமையாக ஆளப்படுவதற்கான தயாரிப்பு
மக்களின் மனப்பரப்பிற்குள் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறாக ‘நவீன-ராமயாணத்திற்கான’ அல்லது, வரலாற்றின் ‘திரும்பவரலுக்கான’ அரங்கம்
உருவாக்கப்பட்டது.
(ஊ) ‘இந்திய வரலாறு’ என்பது ஆங்கிலேயக்
காலனி நினைவுகளையும், ‘பாரத
வரலாறு’ என்பது
இந்துப் பெருமத நினைவுகளையயும் கொண்டு எழுதப்பட்டவை. இரண்டும்
இரண்டு வேறுபட்ட சிந்தனை மற்றும் தொன்மங்களை அடிப்படையாகக் கொண்டவை. ‘இந்துக்களை, ஒரு
அமைப்பிற்குள் கொண்டு வந்து,
அவர்களை இராணுவமயமாக்கலுக்காக (militarization) இந்து தேசியவாதிகளால்
புதிதாக பயன்படுத்தப்பட்ட ஒரு ஒழுங்குமுறையே (discipline) ‘வரலாறு’. இவர்களது ‘இந்திய நாகரிகம்’ என்பது, பல ‘காப்பிய
கலாச்சார’ தொன்மங்களால்
கட்டமைக்கப்பட்டது. இவர்கள்
எல்லாவற்றையும் வரலாற்றைக் கொண்டும்,
முடியாத இடங்களில் தொன்மங்களை/புராணங்களைக் கொண்டு நியாயப்படுத்துவதையும்
வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
‘வரலாறு’ என்பது
காலனியத்தால் உருவாக்கப்பட்டது மட்டுமல்ல, காலனியக்
கட்டுமானத்துடன் உறவுடையதாகும்’
என்பதை நினைவுகொள்வது அவசியம்.
(விரிவான விளக்கத்திற்கு Creating A Nationality (CAN)–Chapter
III Page: 56-69 - Oxford India Paperbacks, 1997 – Ashis Nandy, Shikha Trivedy,
Shail Mayaram & Achyut Yagnik.)
கடைசி காட்சியை அறங்கேற்றும்
முகமாக,
ரதயாத்திரை சோமநாதபுரத்தில் துவக்கப்பட்டது. சோமநாதபுரம் என்றவுடன் நமக்கு இந்திய வரலாற்றுப்
பாடத்திட்டத்தில் மிகச் சிறுவயது முதல் சொல்லப்பட்டு வந்திருக்கும், கஜனி முகம்மது
என்கிற ‘முஸ்லிம்’ அரசனால் பலமுறை
படையெடுக்கப்பட்டு, அங்குள்ள
கோவிலின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது நினைவிற்கு கொண்டுவரப்பட்டது(*). ரதயாத்திரையில்
பயன்படுத்தப்பட்ட ரதத்தின்(ச) சாரதி (‘தேரோட்டி’) ஒரு ‘முஸ்லிம்’ (இவர் இந்துவாக இருந்து
ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து,
அதனால் முஸ்லிமாக மாறி திருமணம் செய்து கொண்டவர். ஆனால், ஒரு ‘முஸ்லிம்’ என்பது மட்டுமே, பிரபலமாக்கப்பட்டது.)
இதற்கு பின் உள்ள சொல்லப்படாத கதை ‘கஜனி’ அல்லது முஸ்லிம்களால்
ஏற்பட்ட அவமானத்திற்கான பழி உணர்ச்சி என்பதுதான். இதில் கவனத்தில் நிறுத்த வேண்டியவை,
1.
‘கஜனி’ முகம்மதை
முன்வைத்து அனைத்து பாமர முஸ்லிம்களையும், குற்ற
உணர்வு உள்ளவர்களாக மாற்றுவது.
இதன் நீட்சியாக, பாபர்
மசூதி இடிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்வதற்கான முன்தயாரிப்பு செய்யப்படுகிறது.
2.
இக் குற்ற உணர்வில் இருந்து விடுபட,
அல்லது ‘மன்னிப்பு‘ வழங்கும்
முகமாக,
ரதத்தை ஓட்டிய ‘முஸ்லிமை’-ப்போல, எல்லா முஸ்லிம்களும்
தங்களது ‘வரலாற்றுத் தவறை’
பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவதன் மூலம் சரி செய்து கொள்வதற்கான
வாய்பு வழங்கப்படுகிறது.
3.
முஸ்லிம் அனைவரும் ஒரேவகை உணர்வுகளில் இல்லை என இரண்டாக பிரிக்கும், அதாவது, முஸ்லிம்
மற்றும் இந்து-முஸ்லிம்
என்பதாக,
அரசியல் தந்திரம் செயல்படுத்தப் பட்டது. இதுவே
‘முஸ்லிம்கள் தங்களது கடவுளாக ராமனை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்கிற கூற்றாக
வடிவம் பெற்றது. இதன்மூலம்
ராமன் - இந்திய
தேசியத்தின் கடவுளாக மாற்றப்படுகிறான்(எ).
(*) கஜணி முகம்மதுவின் சோமநாதபுர படையெடுப்பு பற்றி
ரொமிலா தாப்பர் முன்வைக்கும் வரலாற்றுத் தகவல்கள் வரலாற்று உருவாக்கத்தில்
கதையாடலின் (narrations) அரசியலை
வெளிப்படுத்துகிறது. இப்படையெடுப்பு குறித்து ஐந்துவகை கதையாடல்கள் உள்ளன என்கிறார்
தாப்பர்.
1. துருக்கிய-பார்சிய
கதையாடல் - தென்மேற்கு
ஆசிய வரலாற்றில் அரேபிய -
பார்சிய அதிகார உருவாக்கம், இஸ்லாத்துடன்
உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டே உருவாகுகிறது. கஜனி
முகம்மதுவின் சோமநாதபுர படையெடுப்பு,
பார்சிய கதையாடலில்,
கஜனியை ஒரு இஸ்லாமிய வீரனாக’
(champion of Islam)
காட்டுவதன் மூலம், அரேபிய
இஸ்லாமின் மீது ஆதிக்கம் வகிக்கும் வாய்ப்பை அளிக்கிறது.
அதாவது, குரானில்
சொல்லப்பட்ட அரேபிய சமூகத்திற்கு முந்தைய லாட் (Lat), உஸ்ஸா
(Uzza) மற்றும் மனாத் (Manat) என்கிற மூண்று
கடவுள் சிலைகள் உடைக்கப்பட
வேண்டியவையாக இஸ்லாமை உருவாக்கிய முகம்மதுவால் முன்வைக்கப்பட்டன.
அவற்றில் இரண்டு முகம்மது காலத்திலேயே உடைக்கப்பட்டது.
பிறிதொன்றான மனாத் (சோமனாத்
என்பதை Su-Manat மனாத்தின் இடம் என்கிற அரபி சொல்லாக கூறப்படுகிறது. இது லிங்க
வடிவை ஒத்ததாக சொல்லப்படுகிறது.)
சோமநாத புரத்தில் இருப்பதாக நம்பப்பட்டு அதனை உடைக்கும் ஒரு புனிதப் போராக
வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் பார்சி-துருக்கிய
ஆதிக்கம் இஸ்லாதத்திற்குள் நிறுவப்படுவதற்கான முயற்சியை உணரலாம்.
தென்மேற்கு ஆசியாவில், அரேபிய, துருக்கிய, பாரசீக வரலாறு
என்பது இஸ்லாமின் வளர்ச்சி வீழ்ச்சியுடனே தொடர்பு கொண்டதாக இருந்ததை, அவ்வரலாற்றை
படிப்பவர்கள் காண முடியும் (பார்க்க
‘தென்மேற்கு
ஆசிய வரலாறு’- க. அசதுல்லா-த.பா.நி.).
2. ஜைன/சைவ
முரண்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கதையாடல்.
சிவனைவிட மகாவீரர் சக்தி வாய்ந்தவர் என்பதால் அவரது சிலைகள்
உடைக்கப்பட வில்லை என்பதைப்போல இப்பிரச்சனையை ஜைன/சைவ முரணாக விளக்குகின்றன.
3. சமஸ்கிருத
கல்வெட்டுகள் சோமநாதபுரம் கோவில் தாக்கி அழிக்கப்பட்டதைப் பற்றி அதிகமாகவும்,
முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்புகளைக் கொண்டிருக்கவில்லை. 12-ஆம் நூற்றாண்டில்
அக்கோவிலுக்கு செல்லும் யாத்ரீகர்களை தாக்குவதும், திருடுவதும் அருகில் இருந்த இந்து மன்னர்களால் தொடர்ந்து
நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. சோமநாதபுரத்தில் மசூதி ஒன்று கட்டப்படுவதற்காக, அங்கு குடியேறியிருந்த
அரேபிய முஸ்லிம்களுக்கு நிலம் ஒன்று விற்கப்பட்டதற்கான பத்திரம் அன்றே அரேபி-சமஸ்கிருதத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து, சோமநாதபுரத்தின்
மீது படையெடுத்த துருக்கிய சுல்தான்களுக்கு எதிராக, சோமநாதபுரத்தைச் சேர்ந்து அரேபிய முஸ்லிம்களும் போராடி
உள்ளனர். அப்போராட்டத்தில்
இறந்து போன பரித் என்கிற முஸ்லிமின் நினைவாக ஒரு கல்வெட்டு வெளியிடப்பட்டுள்ளது.
4. பிரிட்டிஷ் House of
Comman-ல் இப்பிரச்சனை
இந்து-முஸ்லிம்
பிரச்சனையாக விவாதிக்கப்பட்டு,
இந்துக்களின் உணர்வுற்கு மதிப்பளிப்பதாக கூறி கொள்ளையடிக்கப்பட்டதாக
நம்பப்பட்ட இரண்டு சோமநாதபுரம் வாயிற்கதவுகளை, ஆங்கிலேயப்படை பாரசீகத்திலிருந்து மீட்டு வந்தது. ஆனால், அவ்விரண்டு
கதவுகளும், இந்தியாவிலிருந்து
கொள்ளையடிக்கப்பட்டதில்லை (அது
எகிப்திய வேலைப்பாடுகளைக்
கொண்டிருப்பதால்) என நிரூபணம்
ஆனவுடன்,
ஆக்ராவில் ஒரு கோட்டைக்குள் அதனை தூக்கிப்போட்டுவிட்டனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியமே
முதன் முதலாக இந்த பிரச்சனையின் வகுபுவாத விதையை ஊன்றி, நீருற்றி
வளர்த்தது.
5. K.M. முன்சி
என்பவரால் முன்வைக்கப்பட்ட ‘இந்துக்களின்
ஆழ் மனதிற்குள்ளான அவமான உணர்வு‘
துடைத்தெறியப்படவேண்டும் என்பதான வகுபுவாத கதையாடல். இது விரிவாக பேசப்பட
வேண்டியது. (Somanatha and Mahmud - Romila Thapar -
Frontline, April 23, 1999)
ஆக, ஒரு வரலாற்று
நிகழ்வு என்பது பல்வேறு கதையாடல்மூலம் அரசியல் நிகழ்வுகளாக மாற்றப்பட்டு, மக்களினத்தின்
வாழ்வுடன் பங்கு பெறுவதாகிறது. ஒவ்வொரு சமூகமும்,
வரலாற்றை வாசிப்பதன் மூலம்,
தனதுகால அரசியல் வரலாற்றாக அதனை மாற்றிவிடுகிறது. கஜனி
முகமதுவின் சோமநாதபுர படையெடுப்பு
இந்திய வகுபுவாத சக்திகளின் கையில் நிகழ்கால வரலாறாக மாற்றப்பட்டுள்ளது.
அது முன்சி கூறியதுபோல ‘இந்துக்களின் ஆழ்மனதில் ஒருவகை ‘அவமான உணர்வாக’ இறக்கப்பட்டதாக
கூறி அதனை கிளறிவிடுவதாக இன்றைக்கான அரசியல் நிகழ்வுகள் வரலாற்றை உருவாக்கிக்
கொண்டுள்ளன.
(ச) ராமாயணத்தில்
ராமருக்கு ரதம் இல்லை. ராவணன் மட்டுமே, ரதம் போன்ற
முன்னேறிய போர்த் தொழில்நுட்பங்
களைக்
கொண்டிருந்தான் (வால்மீகி
மற்றும் துளிசிதாஸ் ராமயணம் - quoted from CAN பக். 40). கிருக்ஷ்ணர்
மட்டுமே ரதம் வைத்திருந்தவர்.
குறிப்பாய் மகாபாரத கிருக்ஷ்ணர் (ச-1). ரத
யாத்திரைக்கான ரதமும்,
கிருக்ஷ்ண ரதம் போன்றே
(இது மகாபாரதத் டி.வி.த் தொடாில்
வரும் ரத அமைப்பை ஒட்டியது.
பரவலாக,
கிருக்ஷ்ண ரதமாக படங்களில் பார்க்க கூடியது), விலை
உயர்ந்த பழைய மாடல் அமேரிக்க செவர்லெட்’
காரின் மீது (இது, சுதேசியம், விதேசியம் இணைந்த
ஒரு கலவை ரதம்), அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது ராம-கிருக்ஷ்ணக்
கலாச்சாரம் இணைந்த ஒன்று (CAN பக்.40).
(ச-1) மகாபாரத
கிருக்ஷ்ணக் கலாச்சாரம், 19-ஆம் நூற்றாண்டிற்கு
பிறகு உருவாக்கப்பட்ட ஒன்று. கிருக்ஷ்ணர்,
மகாபாரதத்தின் (கீதையின்
கிருக்ஷ்ணர்) மூலமும், பாகவத புராணங்கள்
(கோபிகா
கிருக்ஷ்ணர் - யாதவரின்
கடவுள்) மூலமும்
அறியப்படும், இரண்டு
வேறுபட்ட கலாச்சாரங்கள் இருப்பதாக அறிஞர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. கிருக்ஷ்ணர் 19-ஆம் நூற்றாண்டில்
சிறுதெய்வ வழிபாட்டிலிருந்து பெருந்தெய்வ வழிபாட்டிற்கு மாற்றப்படுகிறார். (ஐராவதி கார்வே- யுகாந்தா, P.T.S. அய்யங்கார்
- History
of Tamils, டி.டி. கொசாம்பி – பண்டைய இந்தியா
மற்றும் Creating a Nationality.)
இதில் பக்தி கலாச்சாரம் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளது எனலாம்.
(எ) இந்தியாவின்
சில மாநிலங்களில் 1920-வரை
இந்து-முஸ்லிம்
இருவரும் எதிரெதிரே சந்தித்துக் கொண்டால் ‘ஜெய்
ராம்ஜி’ என்றும்,
1991-வரை ‘ஜெய்
ராம்ஜி கி’, ‘ஜெய் சீதா
ராம்’ என்றும் வணங்கிக் கொள்ளும் பழக்கம் இருந்து வந்துள்ளது. (CAN, பக்.-4) ‘ராமன் இந்திய
மக்களால் ‘புருஷோத்தம்’ என்று ஏற்றுக்
கொள்ளப்பட்டவன் என்றும்,
கவிஞர் முகமது இக்பாலால் ’
Immam-e-Hind’ (இந்திய
இமாம்) எனவும்
ஏற்றுக் கொள்ளப்பட்டவர் என்றும்,
வைக்ஷ்ணவரின் வணக்கத்திற்கு உரியவராக,
அவதாரமாகக் கருதப்படும் ராமன்,
வைக்ஷ்ணவர்களால்,
300-400 ஆண்டுகளாக,
‘ராம் ஜென்மஸ்தான் மந்திர்’
என்ற பெயரில் அயோத்தியில் வேறு கோவில் ஒன்றில் வணங்கப்பட்டு வருவதாகவும், இந்த இயக்கம்
வைக்ஷ்ணவர்கள் அல்லாத, ராம
வணக்கத்திற்கு எதிராக முன்பு
பேசிவந்த ஆரிய சமாஜ் மற்றும் தாந்ரீகர்களால் வழி நடத்தப்படும், அரசியல்
ஆசைகொண்ட இயக்கம்’ என்பதாக
சையத் சகாபுதீனால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது (CAN,பக்.-40). அயோத்தியின்
சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ராமர் கோவிலில் பூசை நடத்தும் தலைமை அர்ச்சகர்
லால்தாஸ் கூறியவை சிந்திக்கத்தக்கவை –
‘சைவர்கள் ராமனை ஒரு அரசன் என்கிற மனிதனாக கருதுபவர்கள், ஆனால், வைக்ஷ்ணவர்கள்
ராமனை ‘பிரம்மமாகக்
கருதுபவர்கள்’(CAN, பக்.-47) (பிரம்மத்திற்கு
பிறப்பிடம் கிடையாது) ‘இந்தக்
கோவிலில் நடக்கும் உண்மைகளைத் தெரிந்து கொண்டால், நீங்கள் நாத்திகராக மாறிவிடுவீர்கள்’ (CAN, பக்.-49). மத
நம்பிக்கைகளைவிட அரசியலே பிரதானமாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார் லால்தாஸ்
பல்வேறு உதாரணங்களால்.
(இவர் 1993-ஆம்
ஆண்டு கொலை செய்யப்பட்டார்(CAN
முன்னுரை பக்.-x)). இஸ்லாமிய
அடிப்படைவாத மற்றும் இந்து மீட்புவாத அரசியலின் விளைவே பாபர் மசூதி தகர்ப்பு ஆகும்.
இவ்வாறாக, முஸ்லிம்
எதிர்பு என்கிற ‘கருத்து
வலயத்தை’ உருவாக்குவதன்
மூலம், முஸ்லிம்கள்
குறித்து ஒரு சொல்லாடல்களத்தை கட்டமைக்கிறது.
இச்சொல்லாடலில், இந்திய
முஸ்லிம்கள் ‘பிறர்’களாக (others)(ஒ) மாற்றப்படுகிறார்கள்.
அவர்களது, இந்திய
மண்ணுடன் ஆன அனைத்து வரலாற்று நினைவுகளையும்,
அவர்கள் அல்லாத பிறரின் நினைவிலிருந்து ஒட்டுமொத்தமாக அழித்து வேறு ஒரு வரலாறு, ‘புண்ணிய பூமி’ என்கிற
நிலப்பரப்பினைக் கொண்டதாக எழுதப்படுகிறது.
இப்புண்ணிய பூமியின் ஆத்மாவாகவும்,
இதன் அரசமைப்பிற்குள் ஆட்சி செலுத்தும் மன்னனின் உடலாகவும் ராமன் மாற்றப்படுகிறான். இந்த ராமன், பல்வேறு ராமயணங்கள்
முன்வைக்கும் ராமன் அல்ல.
இந்திய மதவாத சக்திகளால்,
TV-ன் ‘prime time-ல் வந்து உலவிய
ஒளிர்திரை ராமன்,
என்பதுதான் முக்கியம். இது
வெறும் தகவல்தொடர்பு சாதனத்தின் வெற்றி மட்டுமல்ல, வரலாற்று நினைவை மறு உருவாக்கம் செய்வதும், அதனை அழித்து புதிய
வரலாற்றை எழுதுவதும்,
அதற்கான பரப்பாக பாமர உடல்-தளங்களும், மன-தளங்களும்
உருவமைக்கப்பட்டதுமே.
(ஒ) இந்த பிறர்களாக
மாற்றப்படுவதற்கான ஒரு தன்னிலையாக்கம்,
வரலாற்றின் வழியாக, ஒரு
குறிப்பிட்ட மண்ணிற்கு சொந்தம்Xசொந்தமின்மை
அல்லது உள்ளே இருப்பவர்கள்
(பூர்வீகம்), வெளியில் இருந்து
வந்தவர்கள் (குடியேறிகள்) என்பதாக
மக்களினம் அவர்களது மொழி,
இன, மத, கலாச்சாரத்
தனித்தன்மைகள் வழியாக அடையாளப்படுத்தப்படுகிறது. வரலாறு எழுதவேண்டிய தேவையே, ஒரு நிலப்பகுதிக்கு உள்ளேXவெளியே என்கிற இரட்டை முரண்களின் (binary) (அதாவது Same X
Other) வழியாகத்தான்
எழுகிறது. வரலாறு என்பது ஒரே வகையான (Same) மக்கள்
கூட்டத்தையும்,
அம்மக்களை ஒரு வரலாற்றுத் தன்னிலைக்குள் அடைப்பதன் மூலம், நிலத்தை
மையமானதாகவும் கொண்டே அமைகிறது.
இந்திய வரலாறு குறிப்பாக ‘இந்துத்துவா
(ஒ-1) வரலாறு’
முஸ்லிம்கள், சீக்கியர்கள்
மற்றும் சிறுமத, சிறு
கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் கூட்டத்தை ‘பிறர்’களாக
மாற்றப்படுவதன் மூலமே எழுதப்பட முடியும். ‘இந்துத்துவா’ என்பது முஸ்லிம்
மற்றும் சிறுபாண்மையினரை மட்டுமின்றி எல்லாவித தொல்குடி மற்றும் சிறு கலாச்சாரங்கள், சிறு மதங்கள், சிறு மொழிகள்
ஆகியவற்றினையும் கூட வெளித்தள்ளக் கூடியதாக உள்ளது. இலங்கை
சிங்கள பேரினவாத வரலாறு என்பதும்,
இப்படித்தான்,
தமிழர்களை வெளியிலிருந்த வந்த ‘இந்திய
வம்சா வழியினர்’ என்கிற
‘பிறர்’-களாக மாற்றி போினவாத
அரசியலாக வடிவெடுத்தது.
(ஒ-1) இந்துத்துவா
என்பது பிரிட்டீஷ் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்து
மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட, இந்து மத மேலாண்மையைக் கொண்ட இந்தியா என்பது
பாரதம் என்ற ஒரு பாரம்பரிய நிலப்பரப்பு என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு
உருவாக்கப்பட்ட வாதம். இந்து மதம் என்பதே
இந்திய என்ற நிலப்பரப்பிற்கான மதம் என்றும், இந்தியா என்பது பல் தேசியங்கள்
கொண்டதல்ல மாறாக, இந்து என்ற கலாச்சாரத்தால் ஒருங்கிணகை்கப்பட்ட நிலம் என்றும்,
இந்திய தேசியம் என்பது ஒரு காலாச்சார தேசியம் என்றும் முன்வைக்கும் ஒரு கோட்பாடு.
இதன் மற்றொரு பரிமாணம், தொலைக்காட்சி
ராமாயணம் ராமனைவிட சீதையை பிரதானப்படுத்தியதன் மூலம், இந்திய பெண்களை
மரபுரீதியாக மறுவரையறைக்கு உட்படுத்தியது. அயோத்தி என்கிற ‘புண்ணிய
பூமி’-யின்
புகழை நினைவூட்டும் ராமாயணம் ஒரு பக்கம்,
‘ராமன்’ ‘சீதை’-க்கு எதிராக
பிரச்சாரம் செய்தும், ‘சீதை’ M.P.-ஆனதை தடுக்க இயலாமல்
போனது மறுபக்கம். இதில்
சீதையாக நடித்த நடிகை, தான்
சீதையாக நடிக்க ஆரம்பித்த பிறகு வெளிப்படையாக புகைபிடிக்க முடியாமல்
வருத்தப்பட்டதும், போகுமிடமெல்லாம், அவர்
வணக்குத்திற்கு உரியவராக மதிக்கப்பட்டதும்,
வேறுகதை. (N.T.R.-ன் தாிசனத்திற்கு காத்திருந்த மக்கள் கூட்டத்தையும், M.G.R.-ன் ‘doubles’-ஐ படத்தில் மட்டுமின்றி
வாழ்க்கையிலும் ஏற்றுக்கொண்டு, அவரை
கிராம தேவதையாக வணங்கி வழிப்பட்டது இப்படி நவீன தொன்மங்களின் புனைவியல் பரப்பை
பற்றியது பிறிதொரு ஆய்வாகும்).
JNU (Jawharlal
Nehru University, Delhi)-யைச் சேர்ந்த
இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று அறிஞர்கள், ‘இன்றைய அயோத்தியும், இராமயண
அயோத்தியும் ஒன்றல்ல, அங்கு
ராமர் கோவில் இருந்ததற்கான சான்று எதுவும் இல்லை’ என்று கூட்டறிக்கை விட்ட பிறகும் (‘The Political
Abuse of History (1989 & 1992, JNU).
(மேலும், இராமர்
கோவில் இடிபக்கப்பட்டதாக கூறி முன்வைக்கப்பட்ட தொல்லியல் பொருட்களையும், ஆவணங்களையும் பரிசோதித்து, ‘மசூதிக்கு கீழே இடிக்கப்பட்ட கோவிலுக்கான
எந்த தடயமும் இல்லை’ என
முடிவினை வெளியிட்டுள்ளார் பேராசிரியர் D. Mandal என்கிற
தொல்பொருள் ஆய்வாளர். (Ayodhya
– Archaeology After Demolition’, Orient Longman, 1994)) இந்தியாவின்
வெகுஜன ஆதரவைப் பெற்று பாபர் மசூதி தகர்பு ஒரு ‘மக்கள்-எழுச்சியாக’(ஏ) மாற்றப்பட்ட கதையானது, தொன்மங்களால்,
கதைகளால்,
நினைவுகளில் எழுதப்பட்டுள்ள வரலாறுதான்(ஐ) என்பதை
உணர்த்துகிறது. மொத்த இந்திய
முஸ்லிம் வரலாற்றையும், அந்த
ஒற்றை நிகழ்விற்குள் அடைத்து, முஸ்லிம்
அல்லாத பிறரிடம் ‘முஸ்லிம்
எதிர்ப்பு‘ என்கிற
‘வினைத்திறப்புச்
சொல்’ இவ்வாறுதான்
மறு கட்டமைபு செய்யப்பட்டது.
வரலாறு என்பது, ஆவணக்காப்பகங்களில்
இல்லை, அது
ஒவ்வொரு உடலுக்குள்ளும் நினைவாக செறிந்துள்ளது. அதன் வழியாகவே உடலரசியல் என்பதன் இயக்கம் நடைபெறுகிறது
என்பதையே இவை நமக்கு காட்டுகிறது.
- இது 1995-98 இடைப்பட்ட காலங்களில் எழுதிய உடலரசியல் என்ற கட்டுரையின் ஒரு பகுதி.
கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை அறிவித்த சார்ல்ஸ் டார்வின், மனதின் நுட்பத்தை கண்டறிவித்த உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட், பிரபஞ்ச ரகசியத்தின் புதிரை விடுவிப்பதற்கான சார்பியல் தத்துவத்தை அறிவித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின், இவர்களுக்கு நிகராக உலகின் சமூகவரலாறு பற்றிய அறிவியலை அறிவித்தவர் கார்ல் மார்க்ஸ். பிரபஞ்சம் அதில் வாழும் உயிர்கள், அதன் உயிரின வரலாறு, சமூகவரலாறு என ஒவ்வொரு தனிமனிதனின் உலகப்பார்வையை மாற்றியமைத்த முக்கிய சிந்தனையாளர்கள் இவர்கள். கார்ல் மார்க்ஸ் உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட பாட்டாளிகள், ஏழைகள் குறித்து தீவிரமாக சிந்தித்தவர். மனித உறவை ரொக்கப் பட்டுவாடா உறவாக முதலாளியம் மாற்றியமைத்ததுள்ளதை கண்ணடறிந்தவர். தனது தீவிர ஆய்வின்மூலம் பண்டம்/சரக்கு என்கிற முதலாளிய பொருளுற்பத்தியின் உயிர்நாடியை பகுப்பாய்வு செய்து அது மூலதனத்தை எப்படி ஓரிடத்தில் குவிக்கிறது என்ற தன்னிகரற்ற ஆய்வின்மூலம் மூலதனம் என்ற கம்யுனிஸ சிந்தனைக்கான ஆதாரநூலை முன்வைத்தவர். முதலாளியம் உழைப்பை அந்நியப்படுத்தி மனிதனை வெற்றாக மாற்றுகிறது என்பதையும், அது பாட்டாளிகளின் உழைப்பை சுரண்டி அவர்களது உபறியை உறிஞ்சி கொழிக்கிறது என்பதையும், சமனற்ற ஏற்றத்தாழ்வான பொருளுற்பத்தி முறையில் செயல்படுவதன் வழியாக அது தனக்குதானே சவக்கழியை தோண்டிக் கொள்ளும் என்பதையும் முரணியங்கியல் தர்க்கமுறையில் வெளிப்படுத்தி உலகின் எதிர்காலத்தை தீர்க்கதரிசனப்படுத்தியவர். முதலாளியம் உற்பத்தி செய்த பண்டங்களை விற்று உள்நாட்டு சந்தையை நிறைத்தபின், சந்தை தேடி அலைந்து அமேரிக்க, இந்திய, ஆப்பரிக்க கண்டங்களை கண்டுபிடித்த வரலாற்றையே கடல்வழிப்பயண வரலாறாக கூறுகிறது. இவ்வரலாற்றின், அதாவது காலனியத்தின், அறிவியலை தனது பொருளியில் பகுப்பாய்வில் வெளிப்படுத்தியவர் மார்க்ஸ். பொருளாதாராத்தின் அரசியலை வெளிப்படுத்தியவர். ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் முதலாளியப் பொருளியல் நலன் இருப்பதை கட்டுடைத்துக்காட்டிய சிந்தனைமுறையே மார்க்சியம். இதுவரையிலான தத்துவவாதிகள் உலகை விளக்கினார்கள் பிரச்சனை அதை எப்படி மாற்றுவது என்பதுதான் என்று கடவுள், இயற்கை பேராற்றல், அப்பாலை சக்தி உள்ளிட்ட கருத்தியலான நம்பிக்கைகளை சிதைவாக்கம் செய்து அதற்குள் உறைந்திருப்பது உழைப்பைச் சுரண்டும் முதலாளிய லாபவெறியே என்பதை வெளிப்படுத்திக் காட்டியவர். உலகை மனிதர்கள் இத்தகைய கருத்தியலால் தலைகீழாக உணர்கிறார்கள் என்றார். கருத்தியல் என்ற ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்தது அவரது தத்துவார்த்த சிந்தனையில் தனிச்சிறப்பான ஒன்றாகும். கருத்தியல் என்ற சிந்தனைவழியாக எப்படி ஒவ்வொரு மனித உடலும் தனக்குள் தவறான பிரக்ஞையைக் உலகப்பார்வையாகக் கொள்கிறது என்பதை விவரித்தவர். மாற்றம் ஒன்றைத்தவிர மாறாதது உலகில் இல்லை என்று உலகின் இயங்கு சக்தி மனித உழைப்பும் அதனால் மாறிக் கொண்டே இருக்கும் உலகம் என்பதையும் தனது சிந்தனைகள் வழி மெய்ப்பித்துக் காட்டியவர். தனது வாழ்வு முழுவதையும் உலகப் பாட்டாளி வர்க்கம், ஏழைகள் மற்றும் சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒடுக்கப்பட்ட மனிதர்கள்பற்றி மட்டுமே சிந்தித்தவர். உணர்வு ஒருவரது வாழ்நிலையை தீர்மாணிப்பதில்லை, வாழ்நிலையே உணர்வை தீரமாணிக்கிறது என்று புற உலகும் அதன் பொருளாயுத உறவுகளுமே மனித உணர்வை, சிந்தனையை தீர்மாணிக்கிறது என்பதை தனது சிந்தனைகளின் விதையாக முன்வைத்தவர். சிந்தனையும், உணர்வும் யதார்த்தத்தை படைத்துக் காட்டுகிறது என்கிற அகநோக்கிலான கருத்துமுதல்வாதத்தை அடித்து நொறுக்கி, வாழும் சூழல்தான் ஒருவரது உணர்வை, சிந்தனையை தீர்மாணிக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டினார். சமூகப்புரட்சி அதன் உள்ளார்ந்த பொருளியல் முரண்களால் தீர்மாணிக்கப்படுகிறது என்ற அவரது கருத்தாக்கம் ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளின் புரட்சிகர வரலாற்றால் நிரூபிக்கப்பட்டது. மார்க்ஸின் வாழ்க்கை முட்செடிகள் நிறைந்த ஒருவேளை உணவிற்கும் வழியற்றதான வறுமை நிறைந்த வாழ்க்கை மட்டுமல்ல தொடர்ந்து ஓரிடத்தில் தங்கமுடியாது அதிகாரத்தால் தடைசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நாடோடி வாழ்க்கை. உலக வறுமையைப்போக்க சொந்த வாழ்வை வறுமையாக்கிக் கொண்டவர். அவரது மனைவி ஜென்னி மார்க்ஸ் தனது குழந்தை ஒன்று இறந்தபோது நண்பர் ஒருவருக்கு கடிதம் எழுதினார் ”இப்பிள்ளை பிறந்தபோது தொட்டில் வாங்க பணம் இல்லை இறந்தபோதோ சவப்பெட்டி வாங்க பணம் இல்லை” என்று. இத்தனைக்கும் ஜென்னி மார்க்ஸ் ஜெர்மானிய பிரஷ்ய அரசாங்கத்தில் அமைச்சகத்தில் பணிபுரிந்தவரின் மகள். பிறப்பிலேயே செல்வந்தர். மார்க்ஸ் மீது கொண்ட காதலில் தனது கணவரின் அனைத்து துயரங்களையும் ஏற்று அவரோடு தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். மார்க்சியம் என்கிற கார்ல் மார்க்சின் தத்துவ சிந்தனையின் உருவாக்கத்திற்கு ஜென்னி மார்க்சின் அளப்பறிய தியாகம் முக்கியமானது. மார்க்ஸை அவரது சுதந்திர சிந்தனையோடு இறுதிவரை வறுமையில் போராடிக் காத்தவர் ஜென்னி. மார்க்ஸின் அளப்பறிய சிந்தனைவளத்தைக் கண்டுணர்ந்து இறுதிவரை தனது நட்பின் வழியாக அவரது எழுத்துக்களுக்கு பலமாகவும், அவரது குடும்ப வறுமைக்கு உதவியாளராகவும் இருந்து மார்க்சியத்தை உருவாக்கிய ஏங்கல்ஸ் நட்பிற்கு ஒரு இலக்கணமாக இருந்தவர். மார்க்சிய சிந்தனையில் குடும்பம், அரசு, பெண்நிலை, அறிவியல், மதம் போன்ற கருத்தியல்கள் குறித்த பகுப்பாய்வை மார்க்சிய வழியில் நின்று எழுதிக்காட்டி அச்சிந்தனைமுறையை வளப்படுத்தியவர் ஏங்கல்ஸ். மார்க்சிய சிந்தனை என்பது இவ்விரட்டையர்களின் ஒரு பிரிக்கவியலா கலவையில் உருவான சிந்தனையே. மார்க்சியம் என்பது இன்று உலகளாவிய ஒரு சிந்தனையாக சமூக மொழியில் சிந்தனையில் ஆழ்தளத்தில் இறங்கியுள்ளது. இன்றைய உலகின் எந்த மாற்றுச் சிந்தனையும் அல்லது புதிய சிந்தனையும் மார்க்சியத்துடன் ஒரு உரையாடல் இன்றி தன்னை முன்னகர்த்த முடியாது. மார்க்சியம் ஒரு அரசியல் நனவிலியாக, சமூக நனவிலியாக மாறியுள்ளது. அதனோடு நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ளாமல் எந்த சிந்தனையும் சாத்தியமில்லை. காரணம் மார்க்சியம் உலக மாற்றம், சமூக மாற்றம் என்பதை தனது அடிநாதமாகக் கொண்ட ஒரு சிந்தனைமுறை. புதியதொரு வாழ்வை அதற்கான சாத்தியங்களை திறந்துகாட்டிய சிந்தனைமுறை. உலகில் தேசம் இனம், மதம், சாதி, பால் என்பவை மனிதன் மற்றும் வரலாறு கட்டமைக்கும் மனிதமைய சாராம்சவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. மனிதனின் பெருந்துயரங்களுக்கு காரணமாக உள்ள இப்பல்வேறு அடையாளங்களின் கூறுபாடுகளிலிருந்து, மனிதனை ஒடுக்கப்பட்டவன், ஒடுக்குபவன் என்கிற சாராம்சமற்ற, வலைப்பின்னல்களில் உருவாகும் இணைந்தும், கலைந்தும் போகக்கூடிய நெகிழ்ச்சியான ஒரு அடையாளமாக மார்க்சியர்களால் முன்வைக்கப்பட்டதே “பாட்டாளி வர்க்கம்”. அது பிறப்பை அடிப்படையாகக்கொண்ட ஒரு அடையாளம் அல்ல. எளிமையாக ஏற்கவும், விலகவுமான ஒரு அடையாளம். வரலாற்றில் ஒரு புதிய மக்கள் தொகுதியை உருவாக்கிய அடையாளம். அதற்குள் மனித குலத்தோற்றத்திலிருந்து உருவாகிவந்ததான வரலாற்றுக் கதையாடலின் தொடர்ச்சியோ, அல்லது மனித உடலுக்குள் தங்கி உள்ளதாக சொல்லப்படும் மூலப்படிம உணர்வின் சாராம்சப் பண்போ இல்லை. மார்க்ஸ் கூறினார் “மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட ‘சூழ்நிலைமை‘களில் அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த காலத்திலிருந்து கைமாற்றித் தரப்பட்ட, குறிப்பிட்ட ‘சூழ்நிலைமை‘களில்தான் அதை உருவாக்குகிறார்கள். இறந்துபோன தலைமுறையினரின் மரபு, உயிருள்ளவர்களின் மூளையை ஒரு அமுக்கு பேய்போல அமுக்கிக் கொண்டிருக்கும்.” பாட்டாளி வர்க்க அடையாளம் என்பது மார்க்ஸ் மரபு என்கிற பழங்கதைகளை உருவகப்படுத்தி சொன்னதைப்போல, ஒரு அமுக்குப்பேய் அடையாளம் அல்ல. அது ஒருவர் உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் தன்னிலை சார்ந்த அடையாளம். அதாவது, பாட்டாளிவர்க்க அடையாளத்தில் சாராம்சம் இல்லை, இருப்பு அல்லது இருத்தல் மட்டுமே உள்ளது. நீங்கள் உணர்வுபூர்வமாக இயங்கும் சூழல் மற்றும் உங்கள் வாழ்நிலையில் அல்லது நீங்கள் இயங்கும் வலைப்பின்னல் அமைப்பில் தங்கியுள்ள ஒரு அடையாளம். உலகத் தொழிலாளிவர்க்கம் என்பது பிழைப்புவாத, தொழிற்சங்கவாத, கூலி-வாத சிந்தனைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு பல அரசியல், சாதி, மத, இன அடையாளங்களுக்குள் இறுகி இன்று ஒற்றுமையற்று எண்ணற்ற குழுக்களாக பகைகொண்ட அமைப்புகளாக மாறிவிட்டது. சமூகப் பொருளாதாரப் புரட்சியின் தலைமைச் சக்தியாக மார்க்ஸால் கணிக்கப்பட்ட பாட்டாளிவர்க்கம் இன்று தன்னை ஒரு சராசரி பிழைப்புவாத வர்க்கமாக மாற்றிக்கொண்டுவிட்டது. ஆனால், “மரம் ஓய்வை நாடினாலும் காற்று விடுவதில்லை“ என்பதைப்போல.. இன்றைய கடுமையான பொருளாதார நெருக்கடி மீ்ண்டும் பாட்டாளிவர்க்கத்தை ஒற்றுமைக்கு கொண்டு செல்லும். புரட்சி, விடுதலை என்பது மார்க்சியம் கண்ட ‘உன்னதக் கனவா‘? அல்லது பின்நவீனத்துவவாதியான லியோதார்த் கூறியதுபோல ‘உன்னதக் கதையாடலா‘ (Grand Narration)? என்பதை வரலாறு வெளிப்படுத்தும். வரலாறு என்பதை மனிதன் உருவாக்குவதில்லை. அது ஒரு அமைப்பின் கட்டமைப்பு. அதாவது சூழலின் தேர்வு. மனிதன் சூழலால் தீர்மாணிக்ப்பட்டு, சூழலால் கட்டுப்படுத்தப்பட்டு வரலாற்று இயக்கத்திற்குள் இழுத்துச் செல்லப்படுகிறான். மனிதர்கள் வரலாற்றை உருவாக்குவதில்லை. சமூக வரலாறுதான் மனிதர்களை உருவாக்குகிறது. எப்பொழுதும் மனித உடலானது சமூக வரலாற்றிற்குள் விதைக்கப்படுகிறது. சமூக வரலாற்றிற்குள் வளர்கிறது. முதலாளித்துவம் தனக்கான தேசஅரசை உருவாக்க பாட்டாளி வர்க்கம் என்பதற்கு எதிராக இனம் என்கிற கருத்தாடலை தனது வரலாற்றுக் கதையாடல்கள் மூலம் பெருக்கியப்படியே உள்ளது. இனம் என்பதை பிறப்பின் அடையாளமாக மாற்றுகிறது. அதற்கு ஒரு மூலப்படிம உணர்வு இருப்பதாக கதைகளை எடுத்துரைக்கிறது. அதற்கு வரலாறு என்கிற ஆணிவேர் ஆதார அடிப்படையிலான ஒரு அறிவியல் சார்ந்த பகுத்தறிவு விளக்கம் சொல்கிறது. மனிதனை அழிக்கும் வரலாற்றைவிட, மனித குலத்தை வாழவைக்கும் தொன்மங்கள் மேலானவையே. ஏனென்றால் தொன்மங்கள் அழித்ததைவிட வரலாறு அழித்தவை ஏராளம். அதனால்தான் தொன்மங்களை காட்டுமிராண்டிகளின் கதையாடல் என்கிறது. அறிவியல்பூர்வமாக, பகுத்தறிவின் அடிப்படையில் மனிதர்களை அவர்களது உடலை எண்ணி அளந்து அறுதியிட்டு இனம் என்பதாக பிரிக்கிறது. அதற்கு மொழியை மூலமாக ஆக்குகிறது. காரணம் மொழிதான் உலகை படைக்கிறது என்பதை நம்மைவிட அதிகாரம் மிகச்சிறப்பாக புரிந்துகொண்டுள்ளது. மொழியற்ற உடலால் இந்த உலகை உணரமுடியாது என்பதால் மொழிகளை பெருக்கி தனது ஊடகங்கள் வழியாக பரவலாக்கிக் கொண்டேயுள்ளது. ஆக, மொழி, இனம் போன்ற கூறுகளை சாராம்சமாக ஆக்குவதன்மூலம் மனிதர்களின் மண்டைக்குள் மரபு என்கிற வரலாற்றை ஒரு அமுக்குப்பேயாக உட்கார வைத்துள்ளது. இது இன்றைய புதிய வரலாற்றுவாதத்தினை முன் அனுமானிக்கும் ஒரு வாசகம் எனலாம். மார்க்ஸ் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை இதுபோன்ற எண்ணற்ற வாசகங்கள் வலியுறுத்துகின்றது. மார்க்ஸ்க்கு திரும்புதல் என்பது சமீபத்திய உலகளாவிய பொருளியல் நெருக்கடியின்போது உலகளவில் உருவான ஒரு கருத்தாக்கம். மீண்டும் உலகச்சிந்தனை மார்க்ஸியத்திற்கு திரும்பும் நிலை நோக்கி சமூக முரண் உந்தித்தள்ளுகிறது. நிதமூலதன ஆதிக்கத்திற்குள் சிக்கிவிட்ட இன்றை கார்ப்ரேட் என்கிற உலகமுதலாண்மை முதலாளித்துவம் தனது உள்நெருக்கடிகளில் சிக்கி வங்கிகள் திவாலாகி, கடன் அட்டை மற்றும் வங்கிக்கடன் பொருளாதார வலைப்பின்னலுக்குள் மனிதர்களையும், அரசுகளையும் சிக்கவைத்துள்ளது. தனது கார்பரேட்மயத்தை கிராமங்கள்வரை விரிவாக்கியுள்ளது. இதுதான் உலகமுதலாளியத்தின் முரண் முற்றும் நிலை. அல்லது மார்க்ஸ்-ஏங்கல்ஸ் தீர்க்கத்தரிசனமாக கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையில் அறிவித்த முதலாளியம் தனக்கான சவக்குழியை தோண்டிக்கொள்ளும் என்பதற்கான துவக்கம் எனலாம். - ஜமாலன் (jamalan.tamil@gmail.com) 13-03-2016. மின்னம்பலம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை
இழந்த நிலத்தை தனது சொற்களில் பதியும் ஒரு கவிதை உத்தி பாலஸ்தீனியக் கவிஞர் மக்மூத் தார்வீஸிடம் வாசிக்க முடியும். 83-களில் வெளியாக தமிழீழக் கவிதைகளிலும், அவர்களது ஈழ நிலத்தை சொற்களால் தங்க்ள கவிதைகளில் பதியமிட்டார்கள். நிஜமான தனது மூதாதைக் குடிகள் வாழ்ந்த அதில் விளைந்த குருத்துக்களான நமது கண்முன், அந்நிலம் பறிக்கப்பட்டு, இல்லாமல் ஆக்கப்படும்போது, அந்நிலத்தை தனது படைப்புகள் வழியாக பிராதியாக்குதல் என்பது நிலத்தோடு பிணந்த ஒரு உடலின் கலகச் செயல்பாடு. அச்செயல்பாட்டை பாலஸ்தீனியக் கவிதைகளுக்குப்பின் தந்தவை ஈழக்கவிதைகள். தமிழில் அந்த தளத்தை, தனது நிலம் களவாடப்படுவதை, தான் துரத்தப்படுவதை, ஒரு அகதியாதல் மனநிலையில் பாடும் கவிதைகள் இல்லை என்றே சொல்லலாம்.
ஆய்வாளரும், ஆசிரியரும், கவிஞருமான நண்பர் ஏர். மகாராசன் அவர்களது ”சொல் நிலம்” கவிதை நூலை அனுப்பியிருந்தார். அந்த தலைப்பு எனக்கு ஏற்படுத்திய பிம்பம், மேற்கண்ட, பாலஸ்தீன, ஈழக்கவிதைகளின் நினைவைக் கொண்டுவந்தன. தார்வீஸ் பற்றிய எனது கட்டுரை ஒன்றில் இதை விரிவாக விவரித்துள்ளேன். மகாராசனின் இக்கவிதைகள், நிலம் குறித்த ஏக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது என்றாலும், அகதியாதல் என்ற விரட்டப்பட்ட மனநிலையில் தனது நிலத்தின் கனவுகளை, ஏக்கங்களை பதியவைக்கவில்லை. ஆனாலும், அதற்கான முதன் முயற்சியாக தன் நிலம், வயல், உழவு, மக்கள்நிலை, திணை என கவிதையாக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
சிறிய நூல் என்றாலும் எளிமையான மொழியில் இயற்கையைப் பாடும், நேசிக்கும், மனித நேயத்தையும், அதற்கான ஒடுக்கப்பட்ட அரசியல் குரலையும் முன்வைக்கும் கவிதைகள். கூடுதலான அரசியல் உணர்வால் எழுதப்பட்ட உணர்ச்சி சார்ந்த கவிதைகள் என்பதால் அழகியல் வாசிப்பில் ஏற்படும் உணர்ச்சியாக மாறி வெளிப்படுவதாக உள்ளது.
”எல்லா நாளும்
பொழுதுகள் விடிந்தாலும்
இல்லாதவர் வாழ்வையே
கவ்விக் கொள்கிறது
இருள்.”
”நிழல் வனம்” என்ற தலைப்பில் இயற்கை, காடுகள் பற்றி எழுதப்பட்ட கவிதையில்..
“மனித
நிழல் போர்த்திய
நாடுதான்
வெயிலில்
வெந்து சாகிறது.
எட்டிய
காட்டுக்குள்ளிருக்கும்
மரங்களும் பூக்களும்
இப்போது
சிரித்துக் கொண்டிருக்கின்றன.”
தற்போதைய குரங்கணி நிகழ்வோடு இதனை ஒப்பிட்டு பார்க்கிறது வாசிப்பு. காடு நம்மை பார்த்து சிரிக்கிறது போலிருக்கிறது ”மரங்களோடு எரிந்தார்கள் மனிதர்களும்” என்று.
இவரது கவிதைகளில் சிலவரிகள் இயற்கை என்ற புலத்தை, தமிழ் என்ற திணைக்குடி நிலத்தோடு இணைத்து ஏங்கும் ஒரு தவிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. இயற்கை அழிவால் கூடுகள் சிதைந்த பறவைகளின் ஒப்பாரிக் குரல் கேட்பாரற்று ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த ஒப்பாரி ஒலி காட்சியாக மனதில் பதிகிறது இவரது கவிதை வரிகளில். ”ஒப்பாரி மகரந்தம்” என்ற ஒரு சொல்லாட்சி சுணாமி எனப்படும் ஆழிப்பேரலை பற்றிய கவிதை ஒன்றில். சூழ்கொண்டு துக்கத்தை பிரசவிக்கும் ஒரு மகரந்தப்பொடியாக மாறிய துயரத்தின் ஓலக்குரலை வெளிப்படுத்துவதாக உள்ளது.
”உரிமை பறிக்கும்
சாதித் திமிராய்
உயிர்கள் பறித்தது
கடல் திமிர்.”
என்று ஆழிப்பேரலை என்ற இயற்கை பேரிடருடன், சமூகப் பேரிடராக உள்ள சாதியத்தை இணைப்படுத்தி வாசிக்கிறார். இயற்கையும், சமூகமும் இல்லாதவனுக்கு பெருந்துயராக மாற்றப்பட்டுவிட்ட அவலத்தின் குரலாக ஒலிக்கிறது இவரது கவிதைகள்.
”வெண்மணி வயலின்
செந்நெல் மனிதர்கள்”
உடல் நிலமாகவும், நிலம் உடலாகவும் மாறுவதிலும், மாற்றுவதிலும் அதிகாரத்தின் ஆதிக்க வெறி எப்படி செயல்படுகிறது என்பதை இவரது பெரும்பாலான கவிதைகள் உணர்த்துவதாக உள்ளது. ”கூதிர் காலம்” என்ற கவிதை ஒரு சங்ககப்பாடல் காட்சியின் அக ஏக்கத்தை சொல்கிறது. ஒருவித பழமை ஏக்கம் என்பதுடன் இணைந்து இயற்கை நோக்கி திரும்புதலும், இழந்த நிலத்தை மீட்கும் திணைக்குடி மனமும் கவிதைகள் நெடுகிலும் ஒழுகியோடுகின்றன.
”செல்லாக்காசுகளின் ஒப்பாரி” என்ற கவிதை. பணமதிப்பிழப்பு என்ற மோடியின் செல்லாக்காசுத்திட்டத்தின் விளைவை சொல்லும் கவிதை.
”செல்லாமல் போனது
இழந்துபோன வாழ்வைப்
போர்த்திக் கிடக்கும்
சீவன்களும்தான்.”
என்று மனிதனே செல்லாக்காசாக மாற்றப்பட்டுவிட்ட அரசியல் அவலம் பற்றிய பதிவாக உள்ளது.
ராம்குமார் படுகொலையை சாதிய ஆணவப் படுகொலையாகவும், அதில் பார்ப்பனர், காவிகள், காவல்துறை உள்ளிட்டவற்றின் கூட்டதிகாரம் சாதிய முகத்தில் எப்படி ஒரு சாமாநியனைக் கொன்றது என்ற கருத்தை கவிதையாக முயன்றிருக்கிறார். கவிதையைவிட கருத்து ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோல; ”அறத்தீ மனிதர்கள்” என்ற கவிதையும் முல்லிவாய்க்கால் படுகொலையினால் சிதறுண்ட மனதின் வெளிப்பாடாக அரசியல் மீது காறி உமிழும் சொற்கோவையாக வெளிப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள நீர்-அரசியல் குறித்து பேசும் ”நீரின்றி அமையாது தமிழகம்” என்ற கவிதையின் இறுதிவரிகள் இன்றைய தமிழின அரசியலின் புள்ளியை சுட்டிச் சொல்கிறது இப்படி,
பூநூலால் கோா்க்கப்பட்ட
இந்திய வரைபடச் சாயங்களை
அவ்வப்போது
ஆறுகள் தான் அழிக்கின்றன.”
புரட்சிகரக் கவிமரபான இன்குலாப் கவிதைகளின உணர்ச்சிமிக்க சில வரிகளைப்போன்ற வரிகள், சொல்முறை சில கவிதைகளில் வெளிப்பாடு கொண்டுள்ளது. பழந்தமிழ் அறிவுடன், தமிழ் மரபிலும், தமிழின் அணியிலக்கன மறைபொருள் விளக்க உத்திமுறைகளான உள்ளுரை, உவமம், உருவகம், இறைச்சி போன்றவற்றைப் பயன்படுத்தி, கவிதை மொழியை ஒரு இணைமொழியாக்க உத்தியாக வெளிப்படுத்துவதற்கான மொழிப்புலம் கொண்ட மகராசன், மென்மேலம் சிறந்த கவிதைகளை எழுதமுடியும் என்பதை, கவிதை குறித்த அவரது அறிதலாக வெளிப்படும் கீழ்கண்ட வரிகள் சொல்லிச் செல்கின்றன.
”கவிதைகளில் இளைப்பாறுகின்றன
சுமைத்தாங்கிச் சொற்கள்”
”கவித்தனம் காட்டவே
எழுதி எழுதித் தீர்கின்றன
சொற்கள்.”
”ஈரம் கோதிய சொற்கள் தான்
வாழ்வின் தாகத்தை
இப்போது தணிக்கின்றன”
உணர்வுகள் கவிதைகளில் சொற்களாக மட்டுமே மிஞ்சாமல், அழகியல் சார்ந்த காட்சிகளாக எடுத்துரைக்கப்படும்போது வாசிப்பில் நினைவற்ற நிலையில் மொழித்துகளாக சேர்ந்துவிடும். கவிதையில் சொற்கள் இசைத்தன்மையுடன் இருக்க எதகைமோனை போன்ற உத்திகளை உருவாக்கியதன் பின்னணி என்பது இத்தகைய அழகுணர்ச்சியை இசைத்தலாக கவிதை வெளிப்படுத்தவும், வாசப்பில் அது இசைாயக மனதில் படியவுமே. மகராசனின் இகக்விதைகளில் அழகியல் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால், செய்நேர்த்திமிக்க கவிதைகளாக அவை வெளிப்படும் என்ற நம்பிக்கையை தரும் கவிதை தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
- ஜமாலன் 15-03-2018
நூல் குறிப்பு: ”சொல் நிலம்” – ஆசிரியர்: கவிஞர். மகாராசன் – டிச. 2017- பக். 88- ஆதி பதிப்பகம் – திருவண்ணாமலை - விலை: ரூ 100
1932-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டாகும். தலித்துகளின் அரசியல் தன்னுணர்வை உருவாக்கிய டாக்டர் பாபாசாகெப் அம்பேத்கர்
கலந்தகொண்ட, 1931-ல் லண்டனில் நடந்த, இரண்டாவது
வட்டமேசை மாநாட்டில் பிரித்தானிய காலனிய அரசு “தீண்டத்தகாதவர்களாக“
ஒதுக்கப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி தருவதற்கு ஒப்புக்கொண்டது. 1932-ல் புனாவின் எரவாடா சிறையில்
இருந்த மகாத்மா காந்தி இத்தனித் தொகுதி முறையை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிக்கிறார்.
இறுதியில் காந்தியின் உயிரை காப்பாற்றியது அன்று ஏற்பட்ட புனா-ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மூவரின் கையொப்பமே. அந்த
மூவரில் ஒருவர் அம்பேத்கர், மற்றொருவர் எம்.சி.ராஜா, மூன்றாமவர் பி.
பாலு. முதல் இருவரும் தலித் சமூக அரசியல் பணிகளில் நாடறிந்த தலைவர்கள். ஆனால், பல்வன்கர் பாலு எனப்படும் பி. பாலு எந்த சமூகப் பணிகளிலும், அரசியல் பணிகளிலும் அடையாளப்படுத்தப்
படாதவர். வரலாற்றில் யார் என்று சொல்லப்படாமல் விடுபட்டவரான இவர்
ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். “தாழ்த்தப்பட்ட ஒருவர் கிரிக்கெட்
பந்துவீச்சாளராக புகழ் அடைந்திருப்பதற்காக நான் பெருமை அடைகிறேன்” என்று அம்பேத்கரால் புகழப்பட்டவர்.
33 ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆட்டங்களில் 179 விக்கெட்களைப் பெற்று
இந்திய மக்களிடம் கிரிக்கெட்டில் நாயக அந்தஸ்து பெற்ற இவர், சாமர்
என்கிற சக்கிலிய இனத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர். ”இந்து கிரிக்கெட்”- அணியின் முதுகெலும்பாக இருந்து, பிரித்தானிய காலனிய அணியை
தோற்கடித்தவர். இந்திய மக்களிடம் காலனிய எதிர்ப்பிற்கான மனோபலத்தை
தந்தவர். வெள்ளையர்களை வீழ்த்த முடியும் என்று காட்டியவர்.
இவரது வெற்றியை அன்றைய பத்திரிக்கைகள் காந்தியின் சுயராஜ்யக் கொள்கையின்
வெற்றியாக விவரித்தன. தாழ்த்தப்படவர்களை ஒன்றிணைக்காமல் இந்திய
விடுதலை சாத்தியமில்லை என்பதற்கு ஒரு சான்றாக இந்த வெற்றி கொண்டாடப்பட்டது. இவரால் வெற்றியடைந்த இந்து அணி எனப்படும்
உயர்சாதி பார்ப்பனர்களைக் கொண்ட கிரிக்கெட் அணி. முதன்முறையாக
இந்திய மண்ணில் பெற்ற வெற்றி இது. அந்த வெற்றிக்கு காரணமான பாலு
இந்த இடத்தை அடைந்த கதைதான் இந்து உயர்சாதி தீண்டாமை வெறி உருவாக்கிய சோக வரலாறாகும்.
1875-ல் தார்வாட் என்ற ஊரில் பிறந்தார் பாலு. அவரது குடும்பம் புனாவிற்கு இடம்
பெயர்ந்த பிறகு அவரது இளமை வாழ்க்கை புனாவில் தொடர்ந்தது. அவரது
தந்தை காலனிய அரசின் இராணுவத்தில் துப்பாக்கிகளையும் அதன் காட்ரிட்ஜ்களையும் சுத்தம்
செய்யும் பணியை செய்து வந்தார். உயர்சாதியினர் தீட்டாக கருதி செய்ய மறுத்ததால், தனது
ஒதுக்கப்பட்ட சாதிய பின்புலத்தால் பாலுவின் தந்தை இப்பணியை செய்து வந்தார்.
வெள்ளைக்காரர்களால் விளையாடப்படும் கிரிக்கெட்டில் தோலால் செய்யப்பட்ட
பந்தை எடுத்துப்போடும் அந்த“ தீட்டா“-ன
பணியை பாலு செய்து வந்தபோதுதான் கிரிக்கெட் பந்துவீச்சில்அவர் சிறந்த பயிற்சியைப் பெற
முடிந்தது. ட்ரோஸ் என்கிற ஆங்கில அதிகாரிதான் பாலுவிற்கு
பந்தவீச்சைக் கற்றுக் கொடுத்தார். இவரது பந்துவீச்சில் பயிற்சி
பெற்றவரே ஜே. கிரீக் என்கிற புகழ்பெற்ற ஆங்கில பேட்ஸ்மென்.
ஆங்கிலேய கிரிக்கெட் வீரர்கள் பாலுவிற்கு இந்த பயிற்சிகளை தந்தாலும்
அவரை தங்களுடன் விளையாட அனுமதிக்கவில்லை, காரணம் காலனிய மேட்டிமைத்தனமே.
பிரித்தானிய
கிரிக்கெட் வீரர்களின் பயிற்சிகளில் பந்து வீச்சாளராக இருந்ததால், பரவலாக எல்லா கிரிக்கெட் அணிகளிடமும் ரசிகர்களிடமும் புகழடைந்தார்.
அவரை தங்களது அணியில் சேர்த்துக் கொள்ள பார்ப்பன உயர்சாதி அணி தயாராக
இல்லை என்றாலும் சில தெலுங்கு ஆட்டக்காரர்கள் தாங்கள் வெற்றிப்பெற அவர் அவசியம் என்றவகையில்
பேசி அவரை சேர்த்துக் கொண்டனர். ஆனாலும், கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு சடங்கான தேநீர் இடைவேளையின்
போது அவர் ஆட்ட மைதானத்திற்கு வெளியே போய்விடவேண்டும். உயர்சாதி
கிரிக்கெட் வீரர்களுடன் அவர் சேர்ந்து நிற்கக் கூடாது. அவருக்கு அருந்திவிட்டு உடனே எறிந்து
விடும் வண்ணம் மட்கலயத்தில் உணவும் தேநீரும் தரப்பட்டது. அதாவது
இன்றும் சில இடங்களில் வழங்கி வரும் இரட்டைக் குவளை முறைப்போல. ஒரு நட்சத்திர ஆட்ட நாயகனுக்கே சாதியம்
முன்வைக்கும் நிலை இதுதான்.
அதன்பின்
புனே அணியிலிருந்து, பம்பாய்
அணிக்கு அவரும், அவரது தம்பிகளான சிவ்ராம், கண்பத் மற்றும் விதால் ஆகியோரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பாலு சகோதரர்கள் என்கிற இந்த நான்கு தாழ்த்தப்பட்ட இளைஞர்களும் இந்திய கிரிக்கெட்டின்
புகழ் பெற்ற ஆட்டக்காரர்கள் ஆவார்கள்.
1906-ஆம் ஆண்டு நடந்த பிரித்தானியருக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில்
இச்சகோதரர்கள் முக்கிய பங்காற்றி இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். “இந்தியன் சொஷியல் ரிஃபார்மர்“-
என்கிற இதழ் இந்த வெற்றியை இந்தி தேசிய ஒற்றுமைக்கான சாதியத்தை மீறிய
சமவாய்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் ஒன்றாக எழுதியது. இதன் மற்றொரு விளைவாக இந்திய தேசியம்
எனும் வளர்ந்து வரும் கருத்தாக்கத்தின் ஒரு உதாரணமாக இது கொள்ளப்பட்டது. இந்திய தேசியத்தின் கட்டமைப்பில் மட்டுமல்ல அதை இன்றுவரை காத்துவரும்
பணியையும் செய்கிறது கிரிக்கெட். ஆனாலும், அன்றும் சாதி இந்துக்கள் தீண்டத்தகாதவர்களின் தலைமையில் ஆடுவதற்கு மட்டும்
தயாரில்லை. இன்று திறமைதான்
முக்கியம் என்று பேசும் உயர்சாதி பார்ப்பனர்கள், அன்று இத்தனை திறமை இருந்தும் பாலுவை
கேப்டனாக நியமிக்கத் தயாரில்லை. மற்ற ஆட்டங்களைவிட கிரிக்கெட்டிற்கு கேப்டனின் தலைமைப் பொறுப்பு ரொம்பவும்
முக்கியமானது. அப்பொறுப்பை தந்து தாழ்த்தப்பட்ட ஒருவரின் தலைமையின்கீழ்
விளையாடத் தயாராக இல்லை.
1910 முதல் 1920 வரை ஒவ்வொரு ஆண்டும் பாலுவை கேப்டனாக நியமிக்க
கோரி போராட்டம் நடந்தது. ஆனால் புதிதாக சேர்ந்த உயர்சாதி பார்ப்பனர்களுக்குக்கூட அந்த வாய்ப்பு வழங்கப்பட்டதே
ஒழிய அனுபவம் மிக்க திறமையான தாழ்த்தப்பட்ட ஆட்டக்காரர்களுக்குத் தரப்படவில்லை. ஒரு இளம் பார்ப்பனருக்கு கேப்டன்
பதவி வழங்கப்பட்டதை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து பாலு சகோதரர்கள் கிரிக்கெட்டை விட்டு
வெளியேறினார்கள். சாதியரீதியான
பாகுபாடு நிலவுவதையும் விளையாட்டுக்கான திறமைகள் பார்க்கப்படுவதில்லை என்பதையும் கண்டித்து
ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். வெகுமக்களிடம் ஓரளவு அவர்களுக்கு
ஆதரவு பெருகியது. அதன்பின் 1920-ல் காந்தி
இந்திய தேசியத்தின் தலைவராக ஆனபோது அவரது தீண்டாமை எதிர்ப்பின் விளைவாக திரும்பவும்
பாலு சகோதரர்கள் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டு பாலுவிற்கு முதலில் உதவி கேப்டன்
பதவியும், அவருக்கு பின் அவரது தம்பி விதால் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
இச்சகோதரர்களின் திறமையான நிர்வாகத்தால் கிரிக்கெட் அணி தொடர் வெற்றிகளைப்
பெற்று வந்தது. இந்த
கிரிக்கெட் வெற்றிகள் காந்தியின் சுயராஜ்ய கொள்கையின் நடப்பு உதாரணங்களாக கொள்ளப்பட்டன்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு சம அந்தஸ்து தந்தால் இந்தியா வெற்றிக்
கொள்வது நிச்சயம் என்பதை இவை மெய்ப்பிப்பதாக பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது.
பொதுமக்கள் ஒவ்வொரு கிரிக்கெட் வெற்றிக்குப் பிறகு ”கேப்டன் விதால் வாழ்க! இந்துக்களே சாதி ஏற்றத்தாழ்வை
மறப்போம்! மகாத்மா காந்திக்கு ஜே!” என்றும்
கோஷமிட்டு கொண்டாடினர். இது நமக்கு சொல்லும் செய்தி கிரிக்கெட்
அதன் ஆடுகளத்தையும் தாண்டி மக்களின் பொதுவெளியில் கட்டமைக்கும் மன அமைப்பையே.
அதிகாரம் நிரம்பிய காலனிய ஏகாதிபத்திய
வெள்ளையின அணியை எதிர்த்து கிடைத்த இந்த வெற்றி மக்களின் மனத்தளத்தில் ஏற்படுத்தியிருக்கம்
நம்பிக்கை என்பது எண்ணிப் பார்க்த்தக்கது.
பாலு சகொதரர்களின் கதை என்பது இந்திய கிரிக்கெட் மற்றும் தாழ்த்தப்பட்ட
மக்களின் வரலாற்றில் ஒரு மைல்கல் மட்டுமல்ல இந்திய தேசிய கட்டமைப்பின் வெகுசன உளவியலை
கட்டமைத்த ஒரு முன்மாதிரியும்கூட.
ஆனால் இத்தகைய
வரலாற்றின் குறிப்பிடத் தகுந்த வீரரான பாலு இந்துமகாசபையின் ஆதரவாளராக மாற்றப்பட்டு
பின்னாளில் இந்துமகாசபை மற்றும் காங்கிரஸின் கருத்தியலுக்கு பலியாகி புனா ஒப்பந்தம்
ஏற்பட வழிவகை செய்து அம்பேத்கருக்கு எதிராக மாறினார். 1933-ல் நடந்த தேர்தலில் இந்துமகாசபை பம்பாய் நகராட்சிக்கு இவரை வேட்பாளராக அறிவித்தது. ஆனால் எதிர்த்து நின்ற உயர்சாதி வேட்பாளரிடம்
தோற்றுப்போனார். இந்திய தேர்தலில் இந்துமகாசபையானலும் சரி எந்த
மகாசபையானாலும் சரி சாதி என்பது ஒரு தீர்மானகரமான காரணிதானே. அதன்பின் அம்பேத்கருக்கு எதிராக இவரை ஒரு தலித் உட்கட்சி தலைவராக காங்கிரஸ்
பயன்படுத்த துவங்கியது. 1937-ல் தாழ்த்தப்பட்வர்களுக்கான தனித்தொகுதியான பம்பாய் சட்டமன்றத் தொகுதியில்
அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸால் இவர் நிறுத்தப்பட்டார். அதில்
அம்பேத்கரால் தோற்கடிக்கப்பட்டார். எந்த உயர்சாதியால் எந்த மதத்தால்
புறக்கணிக்கப் பட்டாரோ அவர்களுக்கே இறுதியில் ஆயதமாக பயன்பட்டார் என்கிற இவரது வரலாற்றில்
உள்ள அந்த முரண், இன்றுவரையில் திரும்ப திரும்ப நிகழும் ஒரு தீர்க்க
இயலாத முரணாக நிலவி வருவது கண்கூடு.
18-ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான் கிரிக்கெட் இந்தியாவிற்கு பிரித்தானிய மாலுமிகளாலும்,
படைவீரர்களாலும் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்
இந்திய அணி பம்பாயில் பொருளியல் ஆதிக்கம் வகித்தவந்த படித்த மேட்டிமை வர்க்கத்தைச்
சேர்ந்த பார்சிகளால் உருவாக்கப்பட்டது. பார்சிகள் தங்களை பிரித்தானிய
குடியேறிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவும் தங்களது உயர் வர்க்க அடையாளத்தைக் காக்கவும்
முதன்முதலாக கிரிக்கெட்டைப் பயன்படுத்தினர். பார்சிகளுக்கு இயல்பிலேயே
இந்திய மண்ணில் "வந்தேறிகள்" என்கிற ஒரு அடையாள நெருக்கடி இருந்து வந்ததால் அவர்கள் இந்த புதிய அடையாளத்தை
கட்டமைக்க முயன்றனர். 30-ற்கும் மேற்பட்ட பார்சி கிளப்புகள் ரோமானிய கடவுளின் பெயரால்
1850-60 களில் உருவாக்கப்பட்டது. இதில் வெளிப்படையாகவே
தெரிவது பிரித்தானிய அடையாளத்தைப் பெறுவதற்கான முயற்சியே. பார்சிகள் கிரிக்கெட் வழியாக ஆங்கிலேய
உடைகளை உடுத்த துவங்கினர். அதன்பின் இந்துக்கள் தங்களுக்கான அணிகளையும், முஸ்லிம்கள்
தங்களுக்கான அணிகளையும் உருவாக்கினர். குஜராத்தி, மராத்தி, தெலுங்கு போன்ற இனரீதியான அணிகளும் உருவாயின.
ஆக, கிரிக்கெட் என்பதன் தொடக்கமே வகுப்புவாத தன்மை
கொண்டதாக இருந்தது. இவர்களை அணிகளாக மோதவிடுவதன்மூலம் சமூகத்திற்குள்
ஒரு வகுப்புப் பதற்றத்திற்கான மனநிலையை பிரித்தானிய காலனிய அரசாலும், மத அமைப்புகளாலும் கட்டமைக்க முடிந்தது.
இது 1930-ற்குப்பிறகு உச்சநிலையை அடைந்தது. இந்து அணி,
பார்சி அணி, சீக்கிய அணி, முஸ்லிம் அணி, கிறித்துவ அணி என்பதாக பிரிந்து இந்து
முஸ்லிம் மக்களிடையே இரு தேசக்கோட்பாடடிற்கு வலு சேர்ப்பதாக இந்திய வகுப்புவாத சக்திகளின்
கருத்தியலுக்குள் ஆட்பட்டது. இன்று இந்திய முதன்மை லீக் (IPL) ஆட்டத்தில் ஒரு அடிமை-வியபாரத்தைப் போல ஏலம் எடுக்கப்பட்ட ஆட்டக்காரர்களால் கலவையாக அமைக்கப்பட்ட
சென்னை அணி, மும்பாய் அணி என்கிற பிராந்திய
பெயர் கொண்ட அணிகள் எப்படி வெறும் பெயரைக் கொண்டே பிராந்திய வெறியை ஊட்டுகின்றனவோ
அதைப்போல ஒவ்வொரு கிரிக்கெட் வெற்றிக்குப் பிறகும் வகுப்பவாத அணிகாளால் வகுப்பு பதற்றங்களை
உருவாக்கி வகுப்புவாத உணர்வை ஆறாமல் காக்க முடிந்தது. இன்னொருபுறம் இது ஒரு குறிப்பிட்ட
வகுப்பினரை தேச அளவில் ஒருங்கிணைந்த அடையாளத்திற்குள் கொண்டு வந்தது. இன்று இந்தியா ஆடும்போது எல்லோரும்
இந்திய குடிமகன் என்கிற உணர்வு மீள்கட்டமைப்பு செய்யப்படுவதைப்போல, வகுப்பு ரீதியான அடையாளத்தை உருவாக்கி வகுப்பு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது. இது மத துருவமயமாதலுக்கு ஒரு காரணமாக
அமைந்தது.
கிரிக்கெட்டை
பிரித்தானிய ஏகாதிபத்தியம் அறிமுகப்படுத்தியதே குடியெறிகளுக்கும், குடிமக்களுக்கும் இடையில் ஒரு ஒற்றுமையை உருவாக்கவும், ஒரு கலப்பின அடையாளத்தை பேணவும்தான். இவ்வாறு ஒரு
கலப்பின வர்க்கமாக இந்திய மத்திதர வர்க்கத்தின் தோற்றத்திற்கான ஒரு பண்பாட்டு
அடையாளமாக கிரிக்கெட் இருந்தது. இன்று இந்த அடையாளம் மத்தியதரவர்க்கம்
தாண்டி அடிமட்ட அளவிலான மக்களிடமும் இறக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய
உணர்வாக அறியப்படுகிறது. கிரிக்கெட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது
அது கனவான்களின் ஆட்டமாகத்தான் அறிமுகமானது. இந்திய மக்களை காலனிய
குடிமக்களாக கட்டமைத்ததில் மெக்காலேயின் கல்விக்குப் பிறகு ஒரு கனிசமான பாத்திரத்தை
கிரிக்கெட் ஆற்றியது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது எல்லாக்
காலனி நாடுகளிலும் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியதின் நோக்கம் காலனிய உடலை கட்டமைக்கும்
ஒரு எந்திரமாக அது இருந்ததுதான். சான்றாக பிரித்தானிய காலனிய
நாடான ஆஸ்திரேலியாவில் ”ஆங்கிலத்தனம்” (englishness) என்கிற ஒரு குணாம்சத்தை கிரிக்கெட்தான் கட்டமைத்தது. கிரிக்கெட் என்பது பிரித்தானிய காலனிய எஜமானர்களைப் 'போலச் செய்யும்' (mimic) ஒரு பண்பை காலனிய குடிமக்களிடம்
உருவாக்கியது. அல்லது பிரித்தானிய பண்பாட்டை தனது காலனி
நாடுகளில் விதைத்தது. கிரிக்கெட்டின் உடை அமைப்பு என்பது இந்திய உடையமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
இன்றுவரை
கிரிக்கெட் இந்த காலனிய சேவையை மிகச்சிறப்பாக செய்துவருவது கண்கூடு. இன்றைய கிரிக்கெட் ஆட்டத்திலும் காலனிய
மேலாண்மை என்பது ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக உள்ளது.
சான்றாக, ஒரு பார்ப்பனக் குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவரும்,
இந்திய கிரிக்கெட்டை பரவலாக்கியவரும், உலக அளவில்
பெயர் வாங்கி தந்தவருமான சுனில் கவாஸ்கர் இந்தியா இங்கிலாந்துடன் ஆடும்போது அவர்களுக்கு
உயர்தரமான ஓய்வு அறையும், உணவுகளும், இந்தியர்களுக்கு
மோசமான ஓய்வு அறையும், உணவுகளும் தந்த காலனிய எஜமான மணோபாவத்தை
எதிர்த்து கேள்விக்கேட்டு இந்திய ஆட்டக்காரர்களுக்கு சம அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்
என்பது காலனிய மேலான்மை மனநிலையின் தற்கால நீட்சியையே காட்டுகிறது. காலனியத்தின் ஆதிக்க மணோபாவத்தை எதிர்த்து முதன்முதலாக குரல் எழுப்பியவர்
என்ற பெருமை கவாஸ்கருக்கு உண்டு. அதேபோல் இந்தியா இங்கிலாந்து
ஆடும் ஆட்டங்களில், இந்தியா பெறும் வெற்றியை இங்கிலாந்து மக்களால்
ஏற்க முடியாத மனநிலை வெளிப்படுவதைக் காணலாம். காலனிய மேலான்மையின்
எச்சமாக இன்றும் கிரிக்கெட்டில் நிலவிவரும் இந்த மனப்போக்கு கவனிக்கத்தக்கது.
கிரிக்கெட்டின்
அடிப்படையே காலனிய ஆளும் தன்னிலைகளும், ஆளப்படும் தன்னிலைகளும் ஒருங்கிணைவதற்கான ஒரு
புள்ளியை உருவாக்கி ஆளப்படும் தன்னிலைக்குள், ஆளும் தன்னிலையை
உயர்ந்ததாக கட்டமைக்கும் படிநிலைப் பண்புதான். அது ஒரு சக்திவாய்ந்த
ஒன்றினைக்கும் விசையாகவும், மேட்டிமையின் குறியீடாகவும் இருந்தது.
இநதியாவை ஒரு தேசமாக கட்டமைக்கும் முக்கிய காரணியாக இன்று செயல்படுவது
கிரிக்கெட்தான். இந்திய தேசியம் என்பது கிரிக்கெட்டின் ஆடுகளப்
பரப்பு தவிர வெறொன்றுமில்லை. இந்திய உடல்கள் கிரிக்கெட்டை காண்பதன்
மூலம் கலைப்பிரியர்களாகவும் பேசுவதன்மூலம் கனவான்களாகவும் குறியிடப்படுகிறது.
ஒரு கிரிக்கெட் வரலாற்றாளர் கூறியதுபோல கிரிக்கெட் எல்லா வர்க்கப் பார்வையாளர்களையும்
”கலைப்பிரியரான கனவான்களாக குறியிட்டது.” ("the mark of an amateur gentleman"
from any class). அந்த கனவான்களின் ஒரு உச்சக்கட்ட கொண்டாட்டமே இன்றைய
கிரிக்கெட்டில் வெளிப்படுகிறது.
கிரிக்கெட்
மிடில்-ஸ்டெம்ப் ஆண்குறி மற்றும் சாதிய மேலாண்மை -
சில குறிப்புகள்.
“இந்திய
விளையாட்டான கிரிக்கெட் விபத்தாக பிரிட்டனின் விளையாட்டாகிவிட்டது“ என்று கூறும் உளவியல்
அறிஞரான அஸிஸ் நந்தி தனது பேட்டி ஒன்றில் இந்திய மக்கள் கிரிக்கெட்டை விரும்ப 3 காரணங்களை சுட்டிக்
காட்டுகிறார். 1. முற்றிலும் நவீனமயமாகாத இந்தியாவில் கிரிக்கெட்டின்
கொண்டாட்ட மனநிலை என்பது தொழிற்சமூகத்திற்கு முந்தைய அதாவது நவீன சமூகத்திற்கு முந்தைய
மதிப்பீட்டைக் கொண்டதாக உள்ளது. 2. கிரிக்கெட் யாராலும் கட்டுப்படுத்த
முடியாத பல்வேறு காரணிகளை, எண்ணற்ற மாறிலிகளையும் கொண்டுள்ளது.
3. எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதாக உள்ளது. எண்ணற்ற மக்களால் கருத்து சொல்லக்கூடியதாக, அதாவது விதி
அல்லது தலையெழுத்து போன்ற மர்மத்தன்மைக் கொண்டதாக உள்ளது. உண்மையில்
கிரிக்கெட் விளையாடுபவர் எதிர் அணியுடன் விளையாடுவதில்லை தனது விதியுடன் அல்லது தலையெழுத்துடன்தான்
விளையாடுகிறார் என்கிறார் நந்தி. இந்த காரணங்களின் அடிப்படையாக
இருப்பது இந்திய மக்களின் கூட்டுமனநிலைக் கொண்டாட்டத்தை கிரிக்கெட் மீளுருவாக்கம்
செய்வதே. பண்டைய நிலவுடமை மதிப்பீடுகளான விதி அல்லது தலையெழுத்துப்
போன்ற எதிர்பாராதா நமக்கு வெளியே உள்ள சக்தியால் தீர்மாணிப்பது போன்ற ஒரு மர்மத்தன்மை
இதில் நிலவுகிறது.
அஸிஸ் நந்தியின்
மேற்கண்ட கருத்து கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டாக நிகழ்ந்ததை சொல்கிறது. ஆனால், தற்காலத்தி்ல்
கிரிக்கெட் விளையாட்டு என்கிற நிலையை தாண்டி ஆணாதிக்க தேசிய அரசியலை கட்டமைக்கும் ஒரு
ஊடகப்-புனைவு வெளியால் ஆடப்படுகிறது. 90-களுக்கு பிறகு தொலைக்காட்சியால்
கிரிக்கெட் கேட்கும் வெளியிலிருந்து (வாணொலியிலிருந்து)
பார்க்கும் வெளிக்கு (தொலைக்காட்சிக்கு)
மாற்றப்பட்டது. இம்மாற்றம் இந்திய அணி கபில்தேவ்
தலைமையில் கோப்பையை வென்ற 1983-ல் துவங்கியது. 90-களுக்குப்பிறகு செயற்கைக்கோள் மற்றும் கேபிள் நெட்வொர்க் ஆகியவற்றால் இந்தியாவெங்கும்
விரிக்கப்பட்டது,
சில வருடங்களுக்கு
முன்பு கிரிக்கெட் ஒரு சூதாட்டம் என்று உலகமே அறிந்து பரப்பரப்பானது. சூதாட்டத்தின் முன் ஆடுபவரின் தேசபக்தி சுருண்டு படுத்து விட்டதுடன் பார்த்தவர்களின்
தேசபக்தியும்கூட கேலிக்குட்படுத்தப்பட்டதாக உணரப்பட்டது.
இந்த சூதாட்டம் என்பத கிரிக்கெட் தோன்றி ஒரு பார்வையாளர் ஆட்டமாக மாறிய
1920-களிலேயே ஒரு கருப்புச் சந்தைக்கான பொருளாதாரத்தைக் கொண்டதாக மாறியது.
அன்றே பந்தயம் மற்றும் அனுமதிச் சீட்டில் போலி அனுமதிச்சீட்டுகளை வழங்குதல்
என்பதாக ஒரு சூதாட்டக்களமாக மாறியது.
அன்றே மரங்களில் ஏறியும், ஒரு சிறிய இடைவெளிக்கூட
இல்லாமல் அமர்ந்தும் பார்க்கும் அளவிற்கு ஒரு வெகுமக்கள் விளையாட்டாக மாற்றப்பட்டது. குறிப்பாக 90-களுக்குப் பிறகு இந்த ஆட்டம் பெரு வளர்சசிக் கண்டது. நகர மக்களின் பார்வைத் தளங்களிலிருந்து கிராம மக்களின் பார்வைத் தளத்திற்கு
விரிவடைந்தது. இன்று
அது ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக வளர்ந்து விட்டது. உலகக் கோப்பைக்
கிரிக்கெட் ஜீரம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரவி வந்தது.
அதற்கு இடையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையாக
20க்கு20 உலகக்கோப்பை நடத்தப்படுகிறது.
கிரிக்கெட்டில்
உருவாக்கப்படும் “தேசபக்தி“ போன்ற உணர்வுகள் உண்மையில் ஒருவகை
“தேசவெறி“-யையே கட்டமைக்கின்றன. இந்த தேசவெறி இன்றைய அரசியல் சூழலுக்கான தேவையை நிறைவு செய்கிறது. இன்னும் குறிப்பாகக் கூறினால் ஒருவன் தன்னை இந்தியனாக உணர்வதற்கான வெளியாக
இது கட்டமைக்கப்பட்டுள்ளது. தேசபக்தி போர்க்காலச் சூழலிலேயே
ஒரு குடிமகனுக்கு வெறியாக மாறும். கிரிக்கெட் என்பது ஒரு போராக
அதிலும் தொலைக்காட்சி கட்டமைக்கும் ஊடகவெளியில் நிகழும் ஒன்றாக மாறி உள்ளது.
உளவியல்ரீதியாக ஒரு போர்பதற்றமே இதனால் பரவலாக்கப்படுகிறது.
அதனால்தான் இந்தியாவின் தோல்வியை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளாது,
தனது நாட்டை இழந்த ஒருவரின் கையறு மனநிலையாக குடிமகனின் மனம் பதற்றமடைகிறது.
இவ்வாறாக, ஒரு எண்மவெளிப் போராக
(digitalized war) மாற்றப்பட்டுள்ள கிரிக்கெட் என்கிற விளையாட்டை ஏன்
இந்திய அரசும், ஊடகங்களும், கார்ப்பரேட்
நிறுவனங்களும் பிரதானப்படுத்துகின்றன என்பதற்கு முன்வைக்கப்படும் ஒரே வாதம் கிரிக்கெட்டை
எல்லோரும் பார்க்கிறார்கள் விரும்புகிறார்கள் என்பதுதான். இதனை
கொஞ்சம் தெளிவுபடுத்தி்க் கொள்வோம்.
உண்மையில்
எல்லோரும் பார்க்கிறார்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு எந்த புள்ளிவிபரங்களும் கிடையாது. பாப்புலராக உள்ளது என்பதன் பொருள் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்
என்பதல்ல. இது தகவல் தொழி்ல்நுட்பகாலம். இங்கு ஆதிக்கம் செய்வது தொலைக்காட்சி. பெர்ணாட்ஷாவின்
புகழ் பெற்ற இந்த வாசகம் நமக்குத் தெரியும் '11 முட்டாளகள் விளையாடுவதை
11,000 முட்டாள்கள் பார்க்கிறார்கள்.' அவர் இதோடு
இனைந்து மற்றொன்றையும் சொன்னார். அது தொலைக்காட்சி என்பது
'முட்டாள்கள் பெட்டி (இடியட் பாக்ஸ்
idiot box)' என்பதுதான். தொலைக்காட்சிதான் கிரிக்கெட்டை
பெரிய விளையாட்டாக மாற்றி அதன் விளையாட்டுத்தனத்தை எல்லாம் வியபார உத்தியாக்கி இதனை
ஒரு அரசியல் சார்ந்ததாக கட்டமைத்துள்ளது. இக்கட்டமைப்பிற்கு அடிப்படையாக
அமைந்தது அதன் சாதியச் சார்பு, பொருளாதார ஆதிக்கம், வெகுசன உளவியலில் ஆதிக்க கருத்தியலைக் கட்டமைத்தல் ஆகியனவாகும். கிரிக்கெட் துவங்கியதிலிருந்து இன்றுவரை ஆதிக்கம் செலுத்தும் சாதி பார்ப்பனர்கள்தான்.
இந்திய ஊடக உலகம் 80-சதவீதம் பார்ப்பனர்கள்
மற்றும் உயர்சாதிகள் (அதாவது நவ பார்ப்பனர்கள்) கையில் உள்ளது. இதுவே கிரிக்கெட்டை இன்று ஒரு ஆதிக்க
விளையாட்டாக கட்டமைத்துள்ளது.
மற்ற விளையாட்டுகளைப்போல
உடற்பயிற்சிக்காக கிரிக்கெட் ஆடப்படுவதில்லை. கிரிக்கெட்டே ஒரு ஸாப்ட் கேம் (மென் விளையாட்டு) எனப் பெயர் பெற்றது.
“கிரிக்கெட் உடலைத் தொட்டு விளையாடாத ஒரு விளையாட்டாகும் என்பதால்
இத பார்ப்பனியர்களை கவரும் விளையாட்டாக உள்ளது. மேலும்,
இதற்கு மிகையான உடல் வலு அவசியமில்லை” என்கிறார்
இந்திய கிரிக்கெட் வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹா. ஆக, இந்திய சமூகத்தில்
சிறுபான்மையாக உள்ள உடல் உழைப்பற்ற உயர்சாதிகள் எப்படி பெரும்பான்மையாக உள்ள பிறர்மீது
அதிகாரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அது அப்படியே கிரிக்கெட் அணியிலும்
அதைவிட கூடுதலாக பிரதிபலிக்கிறது. இங்கு எழும் கேள்வி விளையாட்டை
சாதி அடிப்படையில் பார்க்கலாமா? திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுவே
விளையாட்டுக்குத் தேவை? என்பதுவே. இதில்
'திறமை' என்கிற வழக்கமாக பயன்படுத்தப்படும் பார்ப்பன
மற்றும் உயர்சாதி மேலாதிக்க கருத்தியலே செயல்படுகிறது. மற்ற விளையாட்டுகளில்
திறமையானவர்கள் இருந்தாலும் அது கிரிக்கெட்டின் அளவிற்கு பிரபலமானதாக இல்லை.
அதற்கு அரசும் எந்தவித முக்கியத்துவம் தந்து ஊக்கப்படுத்தி முன்னேற்றுவதும்
இல்லை. இந்த 'திறமை' என்பது ஒரு சார்பியலான கருத்தாக்கமே. மேலும் இது சமூக
மதிப்பீட்டின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. தவிரவும்
'திறமை'-யானவர்கள் கண்டடைவதற்கான முயற்சிகள் கிரிக்கெட்டில்
கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வருவதன் விளைவுதான் இன்றுவரை அணியின்
பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட சாதியை அதுவும் பார்ப்பன மற்றம் உயர்சாதியை சேர்ந்தவராகவுமே
இருக்கின்றனர்.
கிரிக்கெட்
என்கிற விளையாட்டு அமைப்பே இந்தவகை உயர்சாதியின் 'திறமை' என்கிற கருத்தியல் ஆதிக்கத்திற்குள் சிக்கியிருப்பதையே இது காட்டுகிறது.
இங்கு அசாருதீன் மற்றும் கபில்தேவ் போன்ற சிலரை சுட்டிக்காட்டக்கூடும்.
இவை ஒரு தவிர்க்க இயலா நிகழ்வுகளாக விதிவிலக்காக அமைந்தவையே.
பெரும்பான்மை இன்றும்கூட உயர்சாதி மற்றும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில்
இருப்பதையே பார்க்கிறோம். இது ஒருபுறம் இருக்க கிரிக்கெட் என்கிற
ஆட்டம் மற்றும் அதன் அடிப்படையில் இயங்கும் கோட்பாடு் இன்று அது இந்திய மக்களை ஆட்கொண்டிருக்கும்விதம்
ஆகியவையே இங்கு நாம் அவதானிக்க வேண்டியதாக உள்ளது.
கிரிக்கெட்
விளையாட்டு என்கிற நிலை கடந்துவிட்டது அது ஒரு காட்சிகாண் மகிழ்வின் அரசியலாக மாறிவிட்டது. அதன் அடிப்படை இன்று மக்களை மந்தைகளாக மாற்றுவதுதான். இல்லாவிட்டால் சிறப்பு யாகம், பூஜை செய்வதும்,
தீக்குளிப்பதும், 'ஹார்ட் அட்டாக்'- வந்து சாவதும் எதனால்? தோல்லி அடைந்தால் கிரிகெட் விளையாடுபவர்களின் வீட்டை அடிப்பதும், வெற்றி பெற்றால் யானை மீதேறி கொண்டாடுவதும் எதனால்? சமூக நலலிணக்கத்திற்காக பாடுபடும் லலிதா ராமதாஸ் என்பரால் சுட்டிக்காட்டப்டும்
கருத்தாக்கம் கிரிக்கெட்டின் அரசியலை நமக்கு அம்பலுப்படுத்துவதாக உள்ளது. 2003-ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மார்ச், 1 2003-ல் இந்தியாவும்
பாகிஸ்தானும் ஆட இருந்தது. பிப்ரவரி 27- 2003-ல் கோத்ரா ரயில் எரிப்பும் அதை ஒட்டிய
கலவரமும் நடந்து ஒராண்டுகிறது. இறந்துபோன அப்பாவி முஸ்லிம்கள் பற்றியோ அவர்களது இறப்பு பற்றியோ எந்த பத்திரிக்கையும்
எழுதவில்லை, அதற்கு பதிலாக குஜராத் தினசரி ஒன்று நாளை நடக்க உள்ள
உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் விளையாடும் இந்திய வீரர்கள் கையில் மட்டைக்குப்
பதிலாக கலாஷ்னிகோவ் துப்பாக்கியுடன் பாகிஸ்தான் வீரர்களை எதிர்கொள்வது
போன்ற கனிப்பொறியில் வடிவமைக்கப்பட்ட படத்தை வெளியிட்டு மத மற்றும் தேச வெறியை தூண்டுகிறது.
இதுதான் ஊடகங்கள் கிரிக்கெட்டை முன்வைத்து நடத்த விரும்பும் அரசியல்.
இது ஒருவகை
பைத்திய நிலைக்கு மக்களை ஆழ்த்துகிறது. இதனால் பிற விளையாட்டுகள் வளர்ச்சியற்றதாக மாறி
உள்ளன. சமீபத்தில் உலக அளவில் ஒரு பொட்டியில் வெற்றி பெற்ற இந்திய
ஹாக்கி அணி அரசால் கண்டு கொள்ளப்படவில்லை என்பதால் அனைவரும் உண்ணாவிரதம் இருந்தனர்.
அதன்பின் அரசு அவர்களுக்கு சில உதவிகளை செய்தது. நாளையே மீடியாக்கள் கிரிகெட்டிற்கு பதிலாக கில்லியை தொடர்ந்து காட்டத் துவங்கினால்
அதையும் வாயைப் பிளந்த பார்த்துவிட்டு.. இப்படித்தான் அதன் கட்டமைப்பு
விதியால் வெறி கொண்டு திரிவோம். ஆக, இன்று
மீடியாக்கள்தான் உண்மைகளை உருவாக்கி மக்களை அதில் மூழ்கடித்துக் கொண்டுள்ளன.
20 வருடங்களுக்கு முன்பாக கிரிகெட் இத்தனை பிரபலம் அடையவில்லையே ஏன்?
காரணம், தொலைக்காட்சிகள் இந்த அளவிற்கு பரவலாக
ஆகவில்லை. இலவச பாடபுத்தகங்களுக்கு சமமாக இலவச தொலைக்காட்சிகள்
தரும் நிலைக்கு அரசானது இன்று தள்ளப்பட்டிருக்கிறது என்றால் தொலைக்காட்சியின் ஆதிக்கத்தை
உணரலாம். தொலைக்காட்சிகள் இன்றைய சராசரி வாழ்வை மாற்றி அதனால்
முன்வைக்கப்படும் ஒளிர்திரை வாழ்விற்கு சமூகத்தை தள்ளி உள்ளது. எது உண்மை? எது பொய்? என்பதெல்லாம்
அவற்றால்தான் கட்டமைக்கப் படுகிறது.
கிரிகெட்
கடந்த 20 ஆண்டுகாலமாக இப்படித்தான் ஒரு இந்திய மக்களின் பார்வையின்ப விளையாட்டாகவும்,
ஒரு உலக விளையாட்டாகவும் மாற்றப்பட்டுள்ளது. இன்றும்கூட
உலகை ஆளும் விளயாட்டு அல்லது உலக நாடுகள் அதிகம் பங்கு பெற்றுள்ள விளையாட்டு கால்பந்துதான்.
கிரிகெட் ஒரு உலக விளையாட்டு என்பதும் உலக கோப்பைக்கான விளையாட்டு என்பதும்
நமது எண்ணிக்கை சார்ந்த 'அதிக' நாடுகள்
கணக்கின்படி உலக விளையாட்டே அல்ல. எண்ணிக்கையில் அதிகமாக பார்க்ப்படுவதும்கூட
கால்பந்துதான். இருப்பினும் மினி தொடங்கி மெகாவரை பல உலகக்கோப்பைக்கான
ஆட்டங்கள் கிரிக்கெட்டில் நடத்துப்படுகிறது.
கிரிக்கெட்
இன்று ஒரு சின்ன இடம் கிடைத்தால்கூட கற்பனையாக ஆடுகளனை உருவாக்கி விளையாடப்படும் ஒன்றாக
மாறி உள்ளது. பள்ளிகளில் துவங்கி தெருக்கள் ஏன் சிறிய திண்ணைகளில்கூட விளையாடப்படுகிறது.
இங்கு பரவலாக கிரிக்கெட்டை மக்கள் விரும்பி ஏற்க காரணம் என்ன?
என்பது குறித்து கிரிக்கெட்டை பிராய்டிய உளவியலில் ஆய்வு செய்த ஆய்வாளர்
தி.கு. இரவிச்சந்திரன் சில விளக்கங்களை
அளிக்கிறார். பிராய்டிய உளவியல் என்பது இன்றைய அதிகார அமைப்புகளுக்கான
ஆதிக்க தன்னிலையை கட்டமைப்பதற்கான தொழில்நுட்ப சொல்லாடலாக மாறியுள்ளது மற்றும் அதன்
ஓடிபல் உறவு குறித்த சொல்லாடல் இன்று விமர்சனத்திற்கு உள்ளாக்கப் பட்டுள்ளது என்றபோதிலும்
கிரிக்கெட்டுடன் தொடர்புடைய ஆர்வமூட்டும் அவரது கருத்துக்களை இங்கு தருகிறேன்.
அதாவது 'கிரிக்கெட் எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் நடந்து வந்த ஒருவகை மட்டைப்-பந்து விளையாட்டு கடல்கடந்து பிராண்ஸ் வழியாக இங்கிலாந்தை அடைந்திருக்கலாம்.
காரணம் cricket என்பது பிரஞ்சு சொல்லான
criquet என்பதன் திரிபாகும். டச்சுமொழியில் குச்சியை
krick என்றும் பழைய ஆங்கிலத்தில் குச்சியை Cricc என்ற சொல்லால் குறிப்பது வழக்கம். இதன் மற்றொரு பரிணாமம்
”கில்லி-தண்டா” எனப்படும் இந்திய நாட்டுப்புற விளையாட்டிற்கும்
கிரிக்கெட்டிற்கும் உள்ள ஒற்றுமை. இந்த ஒற்றுமையே எளிமையாக இவ்விளையாட்டு
இந்திய மக்களால் புரிந்து அதிலும் கிராம அளவில் உள்ளவர்கள் வரை ஏற்றுக்கொள்ள ஒரு காரணம்
ஆகும். கிரிக்கெட் ஆணிலை பார்வையின்ப அடிப்படையிலான ஒரு ஆண்மைய
விளையாட்டு என்பது மற்றோரு முக்கிய காரணமாகும். அதில் குச்சியை
காத்தல் என்பது ஆண்குறியை காப்பது என்கிற காயடிப்புச் சிக்கலுடன் உறவு கொண்டது.
காயடிப்பு சிக்கல் என்கிற பிராய்டிய கருத்தாக்கத்தின்படி ஆண் குழந்தையானது
பெண் குழந்தையுடன் தன்னை ஒப்பிட்டு தனக்கு ஆண்குறி இருப்பதையும் பெண்ணிற்கு அது இல்லாமல்
இருப்பதையும் வித்தியாசப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்நிலையில்
தனது ஆண்குறியும் கண்டிக்கப்படலாம் என்கிற பதற்றத்திற்கு ஆளாகிறது. இப்பதற்றத்தால் தனது ஆண்குறியை தந்தையிடமிருந்து காக்க சமூக விதிகளை ஏற்று
பெரியவர்களின் விதிமுறைகளை எதிர்க்காமல் பின்பற்றும் மனநிலையை அடைகிறது. தனக்கு உள்ள ஆண்குறி பெண்ணிற்கு இல்லை என்பதால் தான் பெண்ணைவிட உயர்ந்தவனான
ஒரு ஆழ்மனப் படிமம் வந்துவிடுகிறது. இதன் விளைவே பெண்ணை இரண்டாம்
இடத்தில் தனக்கு கீழாக வைத்து கானும் நிலையாகும். மேலே சொன்ன
இந்த ஆணகுறியை இழந்துவிடக் கூடிய பதற்றமே காயடிப்புச் சிக்கல் எனப்படுகிறது.
கிரிக்கெட்டில்
உள்ள ஸ்டெம்ப் என்கிற குச்சி இங்கு ஆட்டக்காரனின் ஆண்குறி மையமாக செயல்படுகிறது. இக்குச்சியை இழத்தல் என்பதே ஆட்டமிழப்பு அதாவது ஆட்டக்காரனின் இருப்பின்மையை
உருவாக்குகிறது. குச்சிதான் அவனது இருப்பு. இது ஒரு லிங்கமையவாத (அதாவது ஆண்குறிமையவாத) ஆழ்மனக் கட்டமைப்பாகும். குச்சியைக் காத்தல் என்பதே ஆட்டத்தின்
பிரதான விதியாகும். இவ்வாறாக குச்சியை இழந்து ஆட்டமிழப்பது என்பது
மற்ற ஆட்ட இழப்பைவிட ஒரு அவமானகரமான ஒன்றாக கருதப்படுவதும் இதனால்தான். குச்சியை இழப்பதனால் ஆட்டக்காரன் ஒரு பெண்ணாக மாற்றப்படுகிறான். இங்கு ஆண்மை தோல்வியடைகிறது. இதே நிலைதான் பார்வையார்களின்
உணர்வு நிலையும். கிரிகெட்டை பார்ப்பது என்பது தனது ஆண்மையை நிரூபித்துக்
கொள்ளும் ஒரு உளவியல் செயல்பாடாக அடையாளம் காணப்படுவதால்தான் வெகுமக்கள் அதன்மீது
தீவிர ஈடுபாடு காட்டுகின்றனர். தனது ஆண்மை தோற்கடிக்கப்பட்டால்
அவர்களுக்கு ஏற்படும் வருத்தம் எதிரியை தாக்கும் மூர்க்கமாக வெளிப்படுகிறது.
கிரிக்கெட் தோல்வி ஆட்டக்காரர்கள் மீதான் தாக்குதலாக மாறுவதற்கு இதுவே
காரணம். இரு நாடுகளுக்கிடையில் நடைபெறும் போட்டி என்பது ஒரு
உயர்வகைப்படத்தப்பட்ட போராக நிகழ்கிறது. (விரிவாக இவ்வாய்வை
படிக்க ஃப்ராய்ட் யூங் லக்கான் -அறிமுகமும் நெறிமுகமும்
- தி.கு. இரவிச்சந்திரன்
நூலைப்பார்க்கவும்.)
கிரிக்கெட்
விளம்பரங்களால் காசை அள்ளித்தரும் ஒன்று. அதனால் அதன் பிரபல்யத்திற்காக எதுவும் செய்யப்படும்.
இதில் இரண்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று இதில்
புரளும் பொருளாதாரம். மற்றொன்று.. இதன்மூலம்
மக்களை சிந்திக்கிவிடாமல் தொடர்ந்து போதையில் ஆழ்த்துவது. மக்களின்
பேச்சுக் களத்தை இதை சுற்றியே பின்னுவது.
அப்படி பின்னுவதால் அணு ஒப்பந்தமோ அல்லது மக்களுக்கு எதிரான
சட்டங்களோ பேசுப் பொருளாக மாறாது. இன்று மக்கள் எதை சிந்திக்க
வேண்டும்? எதை பேச வேண்டும? எப்படி படுக்க
வேண்டும்? எப்படி சிரிக்க வேண்டும்? எதற்கு
சிரிக்க வேண்டும்? இப்படியாக எல்லாக் கூறுகளையும் இந்த ஊடகங்கள்தான்
கட்டமைத்து தந்துள்ளன. சுருக்கமாக மக்களுக்கான தினவாழ்வை
(daily life) இவைதான் தீர்மாணிக்கின்றன. அதனால்
இன்று ஊடகங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர்களது கருத்தியலே ஆதிக்க கருத்தியலாக உள்ளது.
80-சதவீத ஊடகங்கள் யார் கையில் உள்ளது என்பது சொல்லவே வேணடியதில்லை.
உயர்சாதி மற்றும் பார்ப்பனர்கள் கையில்தான் உள்ளது அல்லது உயர்சாதிய
கருத்தியலில் வழி நடத்தப் படுகிறது.
இது மக்களிடம்
உள்ள மலர்ச்சியான பண்புகளை சாகடிக்கும் ஒன்றாக உள்ளது. விளையாட்டின் விதி வெற்றிக்கான உந்துதலே தவிர வெற்றியடைந்தே தீர்வேன் என்கிற
வெறி அல்ல. காரணம் வெற்றி என்பது ஏற்படுத்தும் மகிழ்வு என்பது
மதிப்பு மிக்கதாக கட்டமைக்கப்பட்ட சமூக விதியால் வருவதே. ஒன்றை வெல்லுதல் அல்லது
வெற்றிக்கொள்ளுதல் என்பதும், அது ஏற்படுத்தும் பரவசமும் ஒரு ஆதிக்கச்
சொல்லாடல் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. வெற்றி என்பதை எப்படி
அளவிடுவது? தனக்கு மகிழ்வை தராத வெற்றியின் பொருள் என்ன?
கிரிகெட்டில் கிடைக்கும் வெற்றி என்பது எது? அது
யாருக்கு சாதகாமானது? அதில் யார் பயனடைகிறார்கள்? அதுதரும் மகழ்வின் எச்சமாக நமது மன அமைப்பில் கட்டப்படும் அரசியல் எது?
என்கிற கேள்விகள் எஞ்சியுள்ளன. பிரச்சனை வெற்றி
என்பதை மையமாகக் கொண்ட செயல்கள்தான் மனிதனின்
அடிப்படை வன்முறைக்கு காரணம். வெற்றி என்பது விரைப்புநிலை
உணர்வு. இந்த உணர்வை பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய கிரிகெட் ஆட்டமும்.
சவுத் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேற்கிந்திய
தீவுகள், ஜிம்பாவே மற்றும் கென்யா ஆகியோரின் ஆட்டங்களில் காணலாம்.
இவற்றில் நிறவெறி மதவெறி போன்றவை ஒரு நுண்ணரசியலாக செயல்படுகிறது என்பது
அறிந்ததே. கிரிக்கெட் ஆடப்படும் களத்தை தாண்டி சமூகப்
பரப்பிற்குள் நுழைந்து மக்களின் மனப் பரப்புகளில் ஆட்டத்தை தொடர்ந்து, இன்று தேசத்தை தனது ஆண்மைய ஆடுகளப் பரப்பிற்குள் சுருக்கி வைத்துள்ளது என்றால்
மிகையாகாது.
- ஜமாலன் (13-05-2008) -
jamalan.tamil@gmail.com (
தீராநதியில் வெளிவந்த கட்டுரை) - புலம் பதிப்பகம் வெளியிட்ட எனது ’நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: ஆண்குறி, தந்தை, காயடிப்பச்சிக்கல்
போன்றவை உளவியல்ரீதியான குறியீட்டு அடிப்படையிலான கருத்தாக்கங்களே. அது பெளதீகரீதியான ஆண்குறியையோ நபர்களையோ குறிப்பது அல்ல.
உதவிய கட்டுரைகள்.
1. Tales of Cricket - Asis Nandy - Interview -
http://catalogue.ausport.gov.au
2. Cricket's home moves closer to the money - By Raja M -
http://www.atimes.com
3. Bowling for Democracy - by Orlando Patterson and Jason
Kaufman - The New York Times - May1, 2005.
4. Cricket And Politics In Colonial India - Ramachndra
Guha - 1998-Oxford Univercity Press.
5. The Politics of Cricket and Some Reflections - by Lalita Ramdos -
http://www.sacw.net/2002/lramdasmarch03.html
6. ஃப்ராய்ட் யூங் லக்கான் -அறிமுகமும் நெறிமுகமும் - தி.கு.
இரவிச்சந்திரன்.-
7.China plans to take on the world at the 'noble game' of cricket -
David Eimer-Independent Newspapers.
More Recent Articles
|