ஈழத்து பெண்ணியக் கவிஞர் தில்லையின் விடாய் கவிதைத் தொகுப்பு நூல் தமிழகத்து புத்தகக் கண்காட்சியில், முற்போக்கு எழுத்துகளுக்கான பாரதி பதிப்பகத்தின் ஸ்டாலில் விற்பனையாகின்றது. தமிழ் தி இந்துவினால் கவனிக்கப் பட வேண்டிய சிறந்த நூல்களுக்கான பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. குறிப்பு: பிரதேச மொழி வழக்கில் விடாய் என்றால் தாகம் என்று அர்த்தம்.
ஈழப்போரின் இறுதிக் காலங்களில் புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் அங்கீகரிக்கப் பட்ட அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் கவிஞர் தில்லை வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு இது. இந்த நூலில் உள்ள கவிதைகளை கீழ்க்கண்ட உப பிரிவுகளாக பிரிக்கலாம்:
- 1. உறவுச் சிக்கல்களால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணின் உள்மனக் குமுறல்கள்.
- 2. குழந்தைப் பராயத்தில் ஊர்ப் பெரியவர்களாலும் , நெருங்கிய உறவினர்களாலும் துஸ்பிரயோகம் செய்யப் பட்ட ஒரு சிறுமியின் அவலக் குரல்.
- 3. பிறந்த மண், அதன் தனித்துவமான கலாச்சாரத்தின் மீதான பற்று.
- 4. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் இயலாமையின் வெளிப்பாடு.
- 5. புலம்பெயர்ந்து சென்று, முற்றிலும் அந்நியத்தன்மை கொண்ட ஐரோப்பிய நாடொன்றில், ஒரு மாறுபட்ட புதிய வாழ்க்கையை தொடங்குதல்.
இந்தத் தொகுப்பில் சில கவிதைகள் காப்கா பாணியிலான உள்மனக் குமுறல்களின் வெளிப்படுத்தல்களாக உள்ளன. உண்மையில் ஓர் உளவியல் மருத்துவரிடம் ஆற்றுப்படுத்தல் தேடுவது மாதிரி, கதை, கவிதை போன்ற புனைவு இலக்கியங்களில் வெளிப்படுத்துவதற்கு ஒரு துணிச்சல் தேவை. அது தில்லையிடம் தாராளமாக இருக்கிறது.
தான் பிறந்தவுடனேயே தாயையும், தந்தையும் இழந்து அநாதரவாக கைவிடப்பட்ட வலிகளை, ஒடுக்கப்பட்ட உணர்வுகளை கவிதைகளில் வடித்திருக்கிறார். ஒரு பக்கம் தாய், தந்தையின் அரவணைப்பு கிடைக்காத ஏக்கம், மறுபக்கம் தத்தெடுத்த உறவினர்கள் இழைத்த கொடுமைகளால் ஏற்பட்ட வலி. குழந்தைப் பராயத்தில் ஏற்படும் இதுபோன்ற உளவியல் தாக்கங்கள் பெரியவர்களாக வளர்ந்த பின்னரும் மறைவதில்லை.
பிரான்ஸ் காப்கா என்ற செக்கோஸ்லாவாக்கிய எழுத்தாளர் தனது சொந்த வாழ்வியல் பிரச்சினைகள் பற்றி எழுதிய உளவியல் குறிப்புகள் உலகப் புகழ் பெற்ற இலக்கியமானது மாதிரி, ஈழத்து கவிஞர் தில்லையின் கவிதைகளும் எடுத்த எடுப்பிலேயே பலரால் விரும்பி வாசிக்கப் பட்ட இலக்கியமாகி விட்டது. காப்கா தனது தாய்நாடான செக்கோஸ்லாவாக்கியாவில் ஜெர்மன் மொழி பேசும் யூத சிறுபான்மை இனத்தை சேர்ந்திருந்த படியால் மேலதிகமாக சில துயர அனுபவங்களை பெற்றிருந்தார்.
தில்லையும் இலங்கையில் அதே நிலைமையில் இருந்தவர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. காப்காவின் எழுத்துக்கள் கவலை, வருத்தம், அச்சம், ஆத்திரம், ஆவேசம், ஆதரவின்மை போன்ற கலவைகளாலான சர்லியச இலக்கியப் போக்கை கொண்டிருந்த மாதிரி, தில்லையின் பல கவிதைகள் உள்ளன. இருப்பினும் மேற்குறிப்பிட்ட வகைக்குள் அடங்காத பிற கவிதைகள், வாசகர்களுக்கு இந்த தொகுப்பை வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்குகின்றன.
எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு உரிய மண்வாசனை வீசும் கவிதைகள் தனித்துவமானவை. மேலும் அந்தப் பிரதேசத்தின் கலாச்சாரத்தை மட்டுமல்லாது, அரசியல், சமூக வேறுபாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் "பாரம்பரிய ஈழம்" என்று தற்காலத்தில் அரசியல்மயப் படுத்தப் பட்டிருந்தாலும், அதற்குள் பல முரண்பாடுகளை கொண்டுள்ளது. பேசும் தமிழும் மாறுபடுகின்றது. கிளை மொழிகளையும் வட்டார சொல் வழக்குகளையும் கொண்டுள்ளது.
தில்லை இந்தக் கவிதைத் தொகுப்பில் தான் பிறந்து வளர்ந்த படுவான்கரை பிரதேச வட்டார வழக்கு மொழியில் சில கவிதைகள் எழுதி இருப்பது, ஒரு பாராட்டத்தக்க துணிச்சலான விடயம். ஒரு கவிதை முழுவதும் வட்டார மொழியில் எழுதப் பட்டுள்ளது. பிற கவிதைகளில் அந்தப் பிரதேசத்திற்கு தனித்துவமான சொற்கள் கையாளப் பட்டுள்ளன. இந்தக் கவிதைகளில் ஒட்டுமொத்த படுவான்கரை மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமிதமும் தெரிகின்றது.
இங்கே மேலதிகமாக ஒரு சிறு சமூக- அரசியல் குறிப்பையும் இணைக்க விரும்புகிறேன். இலங்கையின் வட மாகாணத்தில் யாழ் குடாநாடு அபிவிருத்தி அடைந்த அளவிற்கு, வன்னிப் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை. அது எப்போதும் பொருளாதார வசதிகளில் பின்தங்கிய பிரதேசமாக இருந்தது. அதே மாதிரித் தான் கிழக்கு மாகாணத்து நிலைமையும். கிழக்கு கரையோரம் உள்ள எழுவான்கரை பிரதேசம் அபிவிருத்தி அடைந்து காணப்படுகையில், மேற்கில் உள்ள படுவான்கரை இன்றைக்கும் வளர்ச்சி அடையாமல் பின்தங்கிய பிரதேசமாக உள்ளது.
யாழ்ப்பாணம் - வன்னி, எழுவான்கரை - படுவான்கரை, இந்த பிரதேசங்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வு பல மட்டங்களில் எதிரொலிக்கும். ஈழப்போர் காலகட்டத்தில் நடந்த பல குறிப்பிடத்தக்க இராணுவ, அரசியல் மாற்றங்களில், இந்த பிரதேச ஏற்றத்தாழ்வு மறைந்திருந்தது. ஆனால், அதை அன்றும் இன்றும் பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அந்த வகையில் "படுவான்கரை இலக்கியம்" என்று அழைக்கப் படக் கூடிய தில்லையின் விடாய் கவிதைத் தொகுப்பு நூல் சமூகவியல் பார்வையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஹிட்லர் & சீமான், வித்தியாசம் கண்டுபிடிக்கவும்:
ஹிட்லர்: முதலாம் உலகப்போரில் ஜெர்மன் இராணுவம் தோற்றதற்கு காரணம் பெர்லினில் ஆட்சியில் இருந்த சமூக ஜனநாயக் கட்சி(SPD) ஜெர்மனியருக்கு செய்த துரோகம் தான். ஜெர்மனியை ஆள்பவர்கள் யூதர்கள். (உண்மையிலேயே அன்றைய SPD தலைவர்களில் பலர் யூதர்களாக இருந்தனர்.) அதனால் தான் பிரெஞ்சு இராணுவத்தால் ஜெர்மனியர்கள் தோற்கடிக்கப் படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினர். (முதலாம்) உலகப் போரில் நடந்த ஜெர்மன் இனப்படுகொலையின் சூத்திரதாரிகள் SPD, மார்க்சியவாதிகள் மற்றும் யூதர்கள் தான்.
சீமான்: ஈழப் போரில் புலிகள் தோற்றதற்கு காரணம் டெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தமிழருக்கு செய்த துரோகம் தான். தமிழ்நாட்டை ஆள்பவர்கள் தெலுங்கர்கள். (உண்மையிலேயே அன்றைய திராவிடக் கட்சிகளின் தலைவர்களில் பலர் தெலுங்கர்களாக இருந்தனர்.) அதனால் தான் சிறிலங்கா அரச படைகளால் தமிழர்கள் தோற்கடிக்கப் படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஈழப்போரில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு காரணம் காங்கிரஸ், திராவிடவாதிகள், மற்றும் தெலுங்கர்கள் தான்.
*****
- ஹிட்லர் ஜெர்மன் மொழி இனத்தவராக இருந்தாலும், உண்மையில் ஓர் ஆஸ்திரிய நாட்டு பிரஜை. அன்றைய ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தில் பல மொழிகளை பேசும் இனங்கள் இருந்தன. ஹிட்லர் ஒரு ஆஸ்திரிய பிரஜையாக இருந்தாலும், அவருடைய அரசியல் அபிலாஷைகள் முழுவதும் அன்று பிரஷிய ராஜ்ஜியமாக கருதப்பட்ட ஜெர்மனி பற்றியதாக இருந்தது.
- சீமான் தமிழ் மொழி இனத்தவராக இருந்தாலும், உண்மையில் ஓர் இந்தியப் பிரஜை. இன்றைய இந்தியாவில் பல மொழிகளைப் பேசும் இனங்கள் இருக்கின்றன. சீமான் ஓர் இந்தியப் பிரஜையாக இருந்தாலும், அவருடைய அரசியல் அபிலாஷைகள் முழுவதும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர் பற்றியதாக இருக்கின்றது.
- ஹிட்லர் ஆஸ்திரியாவில் இருந்து ஜெர்மனி சென்று, சக்கரவர்த்தியின் இராணுவத்தில் தானாகப் போய்ச் சேர்ந்தார். அவர் யுத்தகளத்தில் நின்றாலும் எந்தவிதமான சண்டையிலும் ஈடுபடவில்லை. போர் நடந்த இடத்திற்கு வெகுதூரம் தள்ளி பங்கருக்குள் இருந்து விட்டு, பிற்காலத்தில் தனது இராணுவ சாகசங்களை பற்றி புளுகிக் கொண்டிருந்தார். அன்று இராணுவ வீரர்களாக இருந்த பலருக்கு ஹிட்லரின் புளுகுகள் எல்லாம் தெரிந்திருந்தன.
- சீமான் இந்தியாவில் இருந்து, இலங்கையில் புலிகளின் பிரதேசத்திற்கு சென்று போர்க்களத்தில் நின்று விட்டு வந்தார். ஆனால் வன்னியில் சீமான் நின்ற இடம் போர் நடந்த இடத்தில் இருந்து வெகு தூரம். எந்தச் சண்டையும் நேரில் காணவில்லை. பிற்காலத்தில் சீமானும் ஈழத்தில் தனது இராணுவ சாகசங்களை பற்றி புளுகிக் கொண்டிருந்தார். முன்னாள் புலிப் போராளிகள் பலருக்கு சீமானின் புளுகுகள் எல்லாம் தெரியும்.
- ஹிட்லர், சீமான் இருவரும் சிறந்த பேச்சாளர்கள். கைகளை உயர்த்தி, நரம்பு புடைக்க, சத்தமிட்டுப் பேசும் குணவியல்பைக் கொண்டவர்கள். இன உணர்வைத் தூண்டும் வகையில் உணர்ச்சிவசமாகப் பேசி மக்களைக் கவரும் வல்லமை பெற்றிருந்தனர்.
- அன்றைய காலகட்டத்தில் ஹிட்லரின் பேச்சுக்களை கேட்டவர்கள், அவரை ஒரு கோமாளி என நினைத்தார்கள். நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரித்தார்கள். அதே மாதிரி, இன்று சீமானின் பேச்சுக்களை கேட்பவர்கள், அவரை ஒரு கோமாளி என நினைக்கின்றனர். நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரிக்கின்றனர்.
- ஜெர்மன் குடியரசில் இரகசியமாக கூட்டம் கூடி வந்த சட்டவிரோத தீவிர ஜெர்மன் தேசியவாத அமைப்புகளுக்குள் ஊடுருவ அனுப்பப் பட்ட ஆள் தான் ஹிட்லர். மியூனிச் நகரில் கூட்டம் ஒன்றுக்கு காவல்துறைக்காக குறிப்பெடுக்க சென்று கொண்டிருந்த ஹிட்லர், பின்னர் அவர்களின் கொள்கைகளால் கவரப் பட்டு அங்கத்தவராக சேர்ந்து கொண்டார். ஆளுமை மிக்க பேச்சுகள் மூலம் பலரை தன்பக்கம் ஈர்த்தார். பெரும்பாலும் மாணவர்கள், இளைஞர்கள் ஹிட்லரால் கவரப் பட்டனர்.
- தடா, பொடா போன்ற அடக்குமுறை சட்டங்களின் விளைவாக, தமிழ்நாட்டில் இரகசியமாக இயங்கிய தீவிர தமிழ்த்தேசிய அமைப்புகளுக்குள் ஊடுருவ அனுப்பப்பட்டவர் தான் சீமான். 2009 ஆண்டளவில் நடந்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் கலந்து கொண்டு, தனது ஆளுமை மிக்க பேச்சுக்கள் மூலம் பலரை ஈர்த்தார். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் சீமானால் கவரப் பட்டனர்.
- அன்று ஜெர்மனியில் இருந்த தீவிர வலதுசாரிக் கட்சிகள் குறிப்பிட்ட அளவு மேட்டுக்குடியினர் ஆதரவை மட்டுமே பெற்றிருந்தனர். அதனால் வளர முடியவில்லை. ஏனெனில் அவர்களது ஆதரவுத்தளமாக இருந்த மத்தியதரவர்க்க, பணக்கார வர்க்கத்தினர் மிகச் சிறுபான்மையினர். ஹிட்லர் ஒரு வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்தார். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுத்து, சாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேசினார். அது வரை காலமும் இடதுசாரிகளால் மட்டுமே பேசப் பட்டு வந்த, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, நலிவடையும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் ஹிட்லரின் பிரச்சார உரைகளில் இடம்பெற்றன. உண்மையிலேயே உலகப்போரில் வென்ற நாடுகள் ஜெர்மனி மீது விதித்த பொருளாதாரத் தடை காரணமாக, அன்று ஏராளமான ஜெர்மன் விவசாயிகள் தற்கொலை செய்திருந்தனர்.
- இன்று தமிழ்நாட்டில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற தீவிர வலதுசாரிக் கட்சிகள், பிராமணர்கள், உயர்சாதியினர், செல்வந்தர்கள் போன்ற மேட்டுக்குடியினர் ஆதரவை மட்டுமே கொண்டுள்ளனர். அதனால் வளர முடியவில்லை. சீமான் சாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேசுகிறார். இது வரை காலமும் இடதுசாரிகளால் மட்டுமே பேசப் பட்டு வந்த, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, நலிவடையும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் சீமானின் பிரச்சார உரைகளில் இடம்பெற்றன. உண்மையிலேயே, பொருளாதாரப் பிரச்சினை காரணமாக ஏராளமான தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
- அன்று ஜெர்மனிக்கு வெளியே பல ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த ஜெர்மன் இனத்தவர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர். ஆஸ்திரியா தவிர செக்கோஸ்லாவாக்கியா, போலந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா என்று பல நாடுகளில் ஜெர்மனியர்கள் வாழ்ந்தனர். அவர்களில் பலர் ஹிட்லரை தமது இனத்தின் மீட்பராக பார்த்தனர். அதனால் நிறையப் பணம் அனுப்பினார்கள்.
- இன்று பல மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் சீமானுக்கு ஆதரவளிக்கின்றனர். இந்தியா, இலங்கைக்கு வெளியே பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல நாடுகளில் வாழும் தமிழர்களில் பலர் சீமானை தமது இனத்தின் மீட்பராக பார்க்கின்றனர். அதனால் நிறையப் பணம் அனுப்புகிறார்கள்.
இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் போர்களுக்கும், மேற்கத்திய பன்னாட்டு வங்கிகளுக்கும் என்ன தொடர்பு?
ஆயுத விற்பனையால் கிடைக்கும் இலாபம்? இனப் பிரச்சனைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்?
இல்லை...
யுத்தம் மூலம் மூன்றாமுலக நாடுகளை கடனாளிகளாக்கி, அவற்றை அடிமைப்படுத்தி வைத்திருத்தல் தான் உண்மையான நோக்கம். வங்கிகளில் நடக்கும் ஊழலை மையமாகக் கொண்டு The International என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜெர்மன், அமெரிக்க, பிரிட்டிஷ் கூட்டுத் தயாரிப்பில் உருவானது.
படத்தின் கதையானது, எண்பதுகளில் நடந்த BCCI வங்கி ஊழலை நினைவுபடுத்தினாலும், சர்வதேச அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு கற்பனையாக எழுதப்பட்டுள்ளது. லக்சம்பேர்க் நாட்டில் தலைமையகத்தை கொண்டுள்ள IBBC வங்கியில் நடக்கும் ஊழல் தான் கதை.
வில்லன்களான வங்கி நிர்வாகிகள், தமக்கு எதிரானவர்களை ஈவிரக்கமின்றி தீர்த்துக் கட்டுகிறார்கள். ஒரு இன்டர்போல் அதிகாரி, கொலைகளுக்கான காரணங்களை ஆராயும் பொழுது தான், IBBC வங்கியின் பின்னணி தெரிய வருகின்றது.
IBBC வங்கி ஆயுதத் தரகர்களை வைத்திருக்கிறது. லைபீரியா போன்ற மூன்றமுலக நாடுகளில், கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்குகின்றது. சீனாவில் தயாரிக்கப் படும் துப்பாக்கிகளை வாங்கி யுத்தங்கள் நடக்கும் நாடுகளுக்கு விற்பனை செய்கின்றது. மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஏவுகணைகளை விற்கின்றது.
உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதக் குழுக்கள், கிரிமினல் கும்பல்களுடன் தொடர்புவைத்திருக்கும் IBBC வங்கிக்கு, அமெரிக்க அரசு, CIA கூட உறுதுணையாக இருக்கின்றன. ஆகையினால், அதற்கு எதிராக சட்டப் படி நடவடிக்கை எடுப்பது இயலாத காரியம்.
திரைப்படத்தின் முடிவில், இஸ்தான்புல் நகரில் வங்கியாளர்களின் கூட்டம் நடைபெறுகின்றது. அப்போது லக்சம்பேர்க் தலைமையக நிர்வாகியை கதாநாயகன் பின்தொடர்கிறான். இதற்கிடையே, வங்கி அனுப்பிய கொலைகாரனால் படுகொலை செய்யப்பட்ட இத்தாலி அரசியல்வாதி ஒருவரின் மகன், தலைமை நிர்வாகியை சுட்டுக் கொல்கிறான்.
அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
1870 ம் ஆண்டு நடந்த பிரான்ஸ், ஜெர்மன் யுத்தத்தின் பின் விளைவாக கம்யூன் உருவானது. பிரான்ஸ் நாட்டின் சக்கவர்த்தி மூன்றாம் நெப்போலியன், அவரது படையினரால் சிறைப் பிடிக்கப் பட்டிருந்தார். அன்று பிரஷியன் என அழைக்கப்பட்ட ஜெர்மன் படைகள் பாரிஸ் நகரை சுற்றி வளைத்தன. மன்னராட்சி சரணடைந்த படியால், செப்டம்பர் 4 ம் தேதி குடியரசு பிரகடனப் படுத்தப் பட்டது. அதற்கு பாரிஸ் உழைக்கும் வர்க்க மக்களின் அழுத்தமும் ஒரு காரணம்.
ஜெர்மன் படையினரால் சுற்றிவளைக்கப் பட்டிருந்த பாரிஸ் நகரில் பல மாத கால பட்டினிக்கு பின்னர் தொழிலாளர்கள் புதிய குடியரசை ஒரு ஜனநாயகக் கம்யூனாக மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். ஆனால் அதுகுறித்து பூர்ஷுவா குடியரசு அக்கறைப் படவில்லை . 22 ஜனவரி நடந்த தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் கடுமையாக அடக்கப் பட்டது.
28 ஜனவரி, பிரான்சின் குடியரசும் ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது. பிரெஞ்சுப் படையினரிடமிருந்த ஆயுதங்கள் களையப் பட்டன. ஆனால் தொழிலாளர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்த பாரிஸ் இராணுவப் பிரிவு ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தது.
18 மார்ச், வெர்சேய் நகரில் இருந்து இயங்கிய பிரெஞ்சு பூர்ஷுவா அரசு தனது இராணுவத்தை அனுப்பி பாரிஸ் பிரிவின் ஆயுதங்களை களையுமாறு உத்தரவிட்டது. ஆனால் அங்கு ஒரு மோதல் நிலையை எதிர்கொண்ட படையினர் பாரிஸ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய மறுத்தனர். அந்தக் கணத்தில் இருந்து ஆயுதமேந்திய தொழிலாளர்கள் பாரிஸ் நகரின் அரசு அதிகாரத்தை தமது கைகளில் எடுத்துக் கொண்டனர்.
வெற்றிகரமான தொழிலாளர் புரட்சிக்கு பாரிஸ் கம்யூன் ஓர் உதாரணம். சர்வதேச சோஷலிச இயக்கங்களை பொறுத்த வரையில், பாரிஸ் தொழிலாளர்கள் தமது முதலாளித்துவ, மன்னராட்சி ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான துணிகரமான எழுச்சியை நடத்திக் காட்டினார்கள். இதைத் தான் கார்ல் மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்று சொன்னார். அதாவது உண்மையான பெரும்பான்மை மக்களின் ஜனநாயகம். மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த சிறுபான்மையினரின் ஆட்சிக்கு மாறாக, பெரும்பான்மையான சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.
பாரிஸ் கம்யூன் ஒரு குறுகிய காலம் மட்டுமே நீடித்த போதிலும் அன்று அது பல முற்போக்கான திட்டங்களை நடைமுறைப் படுத்தியது. உதாரணத்திற்கு இரவு வேலைகளும், சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்துவதும் இரத்து செய்யப் பட்டன. கல்வித்துறையில் கத்தோலிக்க திருச் சபை கொண்டிருந்த இரும்புப் பிடி துண்டிக்கப் பட்டது. அத்துடன் பெண்களும் கம்யூன் உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தனர்.
அனைத்து மக்களுக்குமான பொது வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர்கள் கம்யூன் நிர்வாகத்தை நடத்தினார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் அகற்றப் படலாம். மேலும் அவர்களது வேலைக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு சமமான ஊதியம் வழங்கப் பட்டது. போலிஸ், இராணுவம் இல்லாதொழிக்கப் பட்டு, ஆயுதபாணிகளான மக்கள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர்.
கம்யூன் நிர்வாகம் குறித்து கார்ல் மார்க்ஸ் எழுதியதாவது:
" மூன்று அல்லது ஆறு வருடங்களுக்கொரு தடவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தவும், அடக்குவதற்கும் அதிகார வர்க்கத்தை சேர்ந்த எவரை அனுப்பலாம் என்பதற்குப் பதிலாக, பொதுவான வாக்குரிமை கம்யூன் ஒருங்கமைத்த மக்களுக்கு சேவையாற்றும்."
பழைய முதலாளித்துவ அரசை அகற்றி விட்டு அதனை உழைக்கும் வர்க்கத்தின் தன்னாட்சி அதிகாரமாக மாற்றியமைப்பதில் கம்யூன் மிகப் பெரிய அடியெடுத்து வைத்துள்ளது. இருப்பினும் அது இந்த விடயத்தில் நீண்ட தூரம் செல்லாத படியால், அதுவே வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாகியது. உதாரணத்திற்கு முதலாளித்துவ பணப் பரிவர்த்தனையை நிறுத்தும் நோக்கில் தேசிய வங்கியை கம்யூன் பொறுப்பெடுத்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அது மட்டுமல்ல, கம்யூன் எதிர்ப்பாளர்களுக்கும் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தது. அவர்கள் எந்த விதத் தடையும் இல்லாமல் கம்யூனைக் கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபட முடிந்தது. அதே நேரம் கம்யூன் தொழிலாளர்கள், நாட்டுப்புறங்களில் இருந்து முற்றாகத் துண்டிக்கப் பட்டிருந்தனர். அங்கே வாழ்ந்த விவசாயிகள் அவர்களது கூட்டாளிகள் என்பது மட்டுமல்லாது ஒரே ஆளும் வர்க்கத்தினரால் ஒடுக்கப்பட்டு வந்தனர்.
இதற்கிடையே, யுத்த சூழ்நிலை நிலவிய போதிலும் ஜெர்மன், பிரெஞ்சு ஆளும் வர்க்கங்கள் தமக்கிடையிலான பகைமையை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்தன. இல்லாவிட்டால் அவர்களுக்கு பொதுவான வர்க்க எதிரியான பாரிஸ் கம்யூன் இலகுவாக தோற்கடிக்க முடியாது எனக் கண்டு கொண்டனர். வேர்செயில் இருந்த பிரெஞ்சு அரசு புதிய இராணுவத்தை உருவாக்குவதற்கு உதவியாக, அதுவரை காலமும் ஜெர்மன் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பிரெஞ்சுப் படையினர் ஜெர்மன் சக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப் பட்டனர்.
மே மாதம் 21 ம் தேதி, கம்யூன் கட்டுப்பாட்டில் இருந்த பாரிஸ் நகரைக் கைப்பற்றுவதற்காக புதிய பிரெஞ்சு இராணுவம் படையெடுத்து வந்தது. அப்போதும் பாரிஸ் நகரை சுற்றிவளைத்து நின்று கொண்டிருந்த ஜெர்மன் படையினர், அவர்களுக்கு வழிவிட்டனர். அடுத்து வந்த எட்டு நாட்களும், கம்யூன்வாதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பிரெஞ்சுப் படையினர் ஏராளமான தொழிலாளர்களை கொன்று குவித்தனர்.
1871ம் ஆண்டு மே மாதம் 28 ம் தேதி, பாரிஸ் கம்யூன் ஒரு துயர முடிவுக்கு வந்தது. அங்கு ஓர் இனப்படுகொலை நடந்தது மட்டுமல்ல, பாரிஸ் கம்யூன் இருந்தமைக்கான தடயங்கள் அனைத்தும் அழிக்கப் பட்டன. இன்று எஞ்சியிருப்பது நிராயுதபாணிகளான கம்யூன்வாதிகளை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய ஒரு மதில் சுவர் மாத்திரமே. அந்த இடம் இன்றும் சுடுகாடாகவே காட்சியளிக்கிறது.
இந்தக் கட்டுரை காணொளிப் பதிவாக யூடியூப் தளத்தில் உள்ளது:

இது தொடர்பான முன்னைய பதிவு:
பாரிஸ் கம்யூன் : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் புரட்சி