பூவுலகு இதழ் மாத இதழாக தொடர்ந்து வெளிவரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். . . ...
‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ 

Click here to read this mailing online.

Your email updates, powered by FeedBlitz

 
Here is a sample subscription for you. Click here to start your FREE subscription


  1. பூவுலகு இதழ் - சந்தா & படைப்பாளர் பயிலரங்கம் விவரம்
  2. ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 25 ஆகலாம்..! - இயற்பியல் விஞ்ஞானியின் அலர்ட்
  3. அழிவின் பாதையில் பேருயிர்!
  4. இ - வேஸ்ட் பயங்கரம்!
  5. துயரத்தின் சாட்சிகள்! - ஃபுகுஷிமாவில் இருந்து... -கவிதா முரளிதரன்
  6. More Recent Articles

பூவுலகு இதழ் - சந்தா & படைப்பாளர் பயிலரங்கம் விவரம்

பூவுலகு இதழ் மாத இதழாக தொடர்ந்து வெளிவரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.



வாசகர்கள், இதழ் குறித்த தங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கரிசனத்துடன் கூடிய தங்கள் விமர்சனங்களே பூவுலகு இதழை அடுத்தக் கட்டத்துக்கு இட்டுச் செல்லும். 

இதழ் உருவாக்கத்திலும் வாசகர்களின், எழுத்தாளர்களின், படைப்பாளிகளின் பங்களிப்பை வரவேற்கிறோம். 

படைப்பில் முன் அனுபவமில்லாதவர்களும் தயக்கமின்றி தங்கள் படைப்பு முயற்சிகளை எங்களுக்கு அனுப்பலாம். அனுபவமுள்ள படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை செப்பனிடுவதோடு, தங்களை தொடர்பு கொண்டு செறிவான படைப்புகளை உருவா்க்குவது குறித்து தக்க ஆலோசனைகளும் வழங்குவர். 

இப்பணிகளில் தேர்ந்தெடு்க்கப்படுபவர்களுக்கு நேரடி ஊடகப் பயிற்சி வரும் ஏப்ரல் மாதத்தில் அளிக்கப்படும். இந்த பயிலரங்கில் சுற்றுச்சூழல் நிபுணர்களும், ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டு கருத்துரைப்பார்கள். இந்த பயிலரங்கில் அனைத்து ஊடகங்களில் பணியாற்றும் இளம் பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டு பயன் பெறலாம். 

உங்கள் படைப்பு ஆர்வத்தை நிரூபிக்கும் படைப்புகளை write4poovulagu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி்க்கு அனுப்பலாம். 

பூவுலகு இதழுக்கான ஆண்டுச் சந்தா ரூ.300/- மட்டுமே.

சந்தா தொகையை Poovulagin Nanbargal என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக "பூவுலகின் நண்பர்கள்", ஏஎம் 77, 14வது முதன்மைச் சாலை, சாந்தி காலனி, அண்ணா நகர், சென்னை - 600 040 என்ற முகவரிக்கு அனுப்பலாம். 

அல்லது Poovulagin Nanbargal, Current Account No. 1154135000004357, Karur Vysya Bank, Anna Nagar, Chennai (IFSC Code: KVBL0001154)என்ற வங்கிக் கணக்கில் செலுத்தலாம். 

ஏற்கனவே சந்தா செலுத்தி இதழ் கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களை info@poovulagu.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். 

சூழலை பாதிக்காத வணிக நிறுவனங்களிடமிருந்தும், சேவைத் துறையினரிடமிருந்தும் பூவுலகு மற்றும் மின்மினி இதழ்களுக்கு விளம்பர உதவிகளும் தேவை.

மேலும் விவரங்களுக்கு 90949 90900 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 


-பூவுலகின் நண்பர்கள்


   

ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 25 ஆகலாம்..! - இயற்பியல் விஞ்ஞானியின் அலர்ட்

ரு பக்கம் இந்தியா அதி தீவிரமாக, அணுசக்தி விநியோக நாடுகள்  குழுவில் (என்.எஸ்.ஜி)  சேர முயற்சித்து வருகிறது. இன்னொரு பக்கம் அணுசக்திக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் செயற்பாட்டாளர்கள், “நிச்சயம் இதனால் எந்தப் பயனும் இல்லை. வளர்ந்த நாடுகளின் காய் நகர்த்தலில் இந்தியா  பரிதாபமாக பலியாடாகப் போகிறது...” என்கிறார்கள்.
இத்தகைய சூழலில், என்.எஸ்.ஜி குறித்து பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த ஒரு நிகழ்வில், இயற்பியலாளர் சுவரத் ராஜூவை சந்தித்தோம். சுவரத், அமெரிக்கா ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். டாடா ஆய்வு மையத்தின் ஒரு பிரிவான அறிவியல் கோட்பாட்டுக்கான சர்வதேச ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார். குவாண்டம் கிராவிட்டி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.  

 
இவை மட்டும் இவர் அடையாளங்கள் அல்ல... அணு உலைகளுக்கு எதிராக தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார்.
அவர் நம்முடனான உரையாடலை இவ்வாறாகத்தான் துவங்கினார்,
“இனி, ஒரு யூனிட் மின்சாரம் ரூ 25 என்று சொன்னார்கள் என்றால், உங்களால் அதை ஒத்துக் கொள்ள முடியுமா...? நான் அணு உலைகளின் பாதுகாப்பைப் பற்றி பேசவில்லை, அதன் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகிறேன். நிச்சயம், இந்த அணு உலைகள் வளர்ச்சியின் குறியீடு அல்ல...” என்று அணு ஆற்றலின் பொருளாதாரம் குறித்துப் பேசியவரிடம், நம் கேள்விகளை முன் வைத்தோம். 

நீங்கள்  அணுசக்தி விநியோக நாடுகள்  குழுவில் இந்தியா சேருவதற்கான முயற்சியை கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள்.  இதுபோன்ற வலுவானக் குழுவில் சேர்ந்தால் இந்தியாவிற்கு நன்மை பயக்கும்தானே... ஏன் எதிர்க்கிறீர்கள்?
நன்மையா...? என்ன நன்மை என்று இதற்காக பேசுபவர்கள் விளக்க முன் வருவார்களா... உண்மையில் இதனால் இந்தியாவிற்கு எந்த நன்மையும் இல்லை. இது அவர்களுக்கு நன்கு தெரியும். நிச்சயம் வளர்ந்த நாடுகள், நம்மிடம் எந்த தொழில்நுட்பத்தையும் பகிர்ந்து கொள்ளாது. 

இந்தியாவில் ஆறு அணு உலைகளை அமைக்க உள்ள வெஸ்டிங்க் ஹவுஸ்  ஒப்பந்தத்தை கடுமையாக சாடுகிறீர்கள்...  அவர்களுக்கு அணு உலை அமைக்க ஒப்பந்தம் அளிப்பது ஊழலுக்கு தான் வழிவகுக்கும் என்கிறீர்கள்... ஏன் என்று விளக்க முடியுமா?
உங்கள் பகுதியில் புதிதாக சாலை போட மாநகராட்சி தீர்மானிக்கிறது. முதலில் என்ன செய்யும்? அந்த பணிக்காக டெண்டர் விடும்தானே... யார் குறைவான தொகையில் ஒப்பந்தம் கோருகிறார்களோ, அவர்களுக்கு அளிக்கும்தானே... அதுதானே சரியான நடைமுறையும் கூட. சில கோடிகளில் போடப்படும் சாலைகளுக்கே இவ்வளவு நடைமுறை இருக்கும்போது, பல்லாயிரம் கோடிகள் பணம் புரளப்போகிற இந்த திட்டத்திற்கு, அதுபோன்ற எந்த ஒப்பந்தத்தையும் அரசு கோரவில்லை. அது எதேச்சதிகாரமாக, தானே முடிவெடுத்து ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கிறது. இது எப்படி சரியான நடைமுறை ஆகும்...?

சரி... இவர்கள் ஒப்பந்தம் அளித்த நிறுவனமாவது தகுதியான நிறுவனமா என்றால், அதுவும் இல்லை. அது அமெரிக்காவில் நஷ்டத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிறுவனம். இதை அணு உலையை ஆதரிப்பவர்கள் கூட ஒத்துக் கொள்வார்கள்.

இப்போது இவர்கள் இந்தியாவில் நிறுவப் போகும் அணு உலை புதிது. இதுபோன்ற அணு உலைகள் உலக நாடுகளில் வேறெங்கும் செயற்பாட்டில் இல்லை. இது போன்ற அணு உலைக்காக, 60 பில்லியன் தொகையை, எந்த ஒப்பந்தமும் கோராமல், நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்திற்கு அளிப்பது நிச்சயம் விவாதத்திற்கு உரியது. 

ஏன் இது குறித்து பெரிதாக  விவாதம் எழவில்லை...? 
நாங்கள் தொடந்து இது குறித்து கேள்வி எழுப்பி வருகிறோம். இந்த நிறுவனம் (வெஸ்டிங் ஹவுஸ்),  அமெரிக்காவின் என்ரான் நிறுவனம் (திவாலான நிறுவனம்) போல ஆக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இதை பா.ஜ.க வும், காங்கிரசும் தொடர்ந்து ஆதரித்து வருகின்றன. 
அணு உலையைப் பற்றி பேசும்போதெல்லாம்,  அணு உலையின் பாதுகாப்பைப் பற்றி மட்டும் பேசுகிறார்களே தவிர, அதன் பின்னால் இருக்கும் இது போன்ற ஊழல் குறித்துப் பேசுவதில்லை... முக்கிய கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. 

இது குறித்து தெரிந்தவர்கள், இதைப் பற்றி பேசாமல் இருப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இதை எதிர்த்தால், தங்களை வளர்ச்சிக்கு எதிராக, மின்சார உற்பத்திக்கு எதிரானவர்களாக சித்தரித்து விடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.  

நீங்கள் தொடர்ந்து அணு ஆயுத பரவலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறீர்கள் அல்லவா...  மக்களுக்கு இது குறித்த விழிப்பு உணர்வு இருக்கிறதா... அதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?
நாங்கள் இது குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். உதயகுமார்,  கூடங்குளத்தில் மக்களை ஒருங்கிணைத்து  வருகிறார். அதுபோல ஜெய்தாப்பூரிலும் இயக்கங்கள் இருக்கின்றன.  இவர்கள், அணு உலை திட்டத்தினால் நேரடியாக பாதிக்கப்படும் மக்களை ஒருங்கிணைத்து, பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் இறுதியில் அரசியல் அழுத்தங்கள் காரணமாக, மக்களால் தொடர்ந்து தங்களது போராட்டத்தை முன்னெடுக்க முடிவதில்லை.      

இன்னொரு பக்கம், மக்களை ஒருங்கிணைக்கும் தலைவர்கள் இந்த பொருளாதாரப் பின்னணி குறித்து பேசினாலும், மக்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. மக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து மட்டும் அச்சப்படுகிறார்களே தவிர, அவர்களும் இதன் பின்னால் உள்ள ஊழல்கள் குறித்து கவலைப்படுவதில்லை. இது புரிந்துகொள்ளக் கூடியதுதான்... மக்கள் பாதுகாப்பே கேள்விக் குறியாகும்போது, மற்ற விஷயங்கள் பின்னால் செல்வதில் வியப்பில்லை.     

ஆனால், அனைத்து மக்களும் இதன் பொருளாதாரம் குறித்து நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், நேரடியாக பாதிக்கப்படப்போவது அவர்கள்தான். வெஸ்டிங் ஹவுஸால் நிறுவப்படப் போகும் AP 1000 செயல்பாட்டிற்கு வந்தால், அதனால் உற்பத்தி செய்யப்படப் போகும் மின்சாரத்தின் ஒரு யூனிட் விலை குறைந்தது ரூ. 25 இருக்கும். என்னதான் மானியம் கொடுத்து, விலையை கட்டுப்படுத்த முயன்றாலும், அது பொருளாதார சீரழிவைத்தான் உண்டாக்கும்.


ஒரு வேளை அந்த உலை சிறப்பாக செயற்பட்டு, நிர்ணயத்த மின்சார இலக்கை உற்பத்தி செய்தால், மின்சார விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா...?
நீங்கள் இன்னும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. இதுபோன்ற உலைகளை நிறுவுவதற்கான முதலீடு என்பது மிக அதிகம். அந்த முதலீட்டிற்கான வட்டி விகிதங்களை கணக்கிட்டு பாருங்கள்... 
மக்கள் பாதுகாப்பு என்பதையெல்லாம் விட்டுவிடுங்கள். அவர்கள் மொழியிலேயே பேசுவோம். 'அணு உலை வளர்சிக்கானது, முன்னேற்றத்திற்கானது' என்கிறார்கள். ஒரு கோடி முதலீடு செய்து, ஒரு ரூபாய் பெறுவதா முன்னேற்றம்...? இது ஏமாற்று வேலை.
இதே தொகையை வேறு ஏதாவது மின்சார திட்டங்களில் செலவிட்டார்கள் என்றால், நிச்சயம் இதை விட அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்து விடமுடியும்.  அணு உலையின் ஆதரவாளர்கள், அதன் எதிர்ப்பாளர்களை  ‘தேசத்துக்கு எதிரானவர்கள்’ (Anti - National) என்று வர்ணிக்கிறார்கள். உண்மையில் தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற பெருந்திட்டங்களை ஆதரிப்பதன் மூலம், அவர்கள்தான் Anti- National ஆக இருக்கிறார்கள்.

இதுபோன்ற பெருந்திட்டங்களில், இவ்வளவு தொகையை செலவிடுவதற்கு பின்னால், ஊழல் ஒரு பிரதான காரணமாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.  

அதை கொஞ்சம் விளக்க முடியுமா...?
வளர்ச்சி என்ற மந்திர சொல் பின்னால் ஒளிந்துகொண்டு, ஒன்றுக்கும் உதவாத திட்டத்துக்காக அரசாங்கத்தின் கருவூலத்திலிருந்து பெரும் பணத்தை எடுத்துச் சென்று, வேறொரு நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் கையில் கொடுப்பதும் ஒரு விதமான ஊழல்தானே...?

இந்த என்.எஸ்.ஜியால் எந்தப் பயனும் இல்லை என்கிறீர்களா...?
வளர்ந்த நாடுகள் மிக தந்திரமாக செயல்படுகின்றன. மன்மோகன் ஆட்சி காலத்தில் இந்தியா, அமெரிக்காவிடம் ஒரு அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. அதற்கு பிரதிபலனாக, இந்தியாவுக்கு  2008 ம் ஆண்டு அணுசக்தி எரிபொருள், தொழில்நுட்ப வணிகத்தில் ஈடுபட உரிமை கிடைத்தது. இதன் காரணமாக, சர்வதேச நாடுகளிலிருந்து யுரேனியத்தை இந்தியாவால் வாங்க முடிந்தது. ஆனால், அதைக் கொண்டு நாம் உற்பத்தி செய்த மின்சாரம், நாட்டின் மொத்த மின்சார உற்பத்தி தேவையில் ஒரு சதவீதம் தான். 

இதன் தொடர்ச்சியாகத்தான் நான் என்.எஸ்.ஜியை பார்க்கிறேன். வறட்டுக் கெளரவத்திற்காக ஒரு குழுவில் இடம்பெற்று என்ன ஆகிவிடப் போகிறது. 'இதில் இடம்பெற்றால் நமக்கு செறியூட்டப்பட்ட யுரேனியம் கிடைக்கும்' என்பது உங்கள் வாதமாக இருந்தால், அது நிச்சயம் நகைப்பிற்குரியதுதான். ஏனென்றால், இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளும் கன நீர் அணு உலைகள். அதற்கு இது பயன்படாது. 

இன்னொரு விஷயம், 2008 ஒப்பந்தமே நமக்கு தொழில்நுட்ப வர்த்தகத்தில் ஈடுபட உரிமைகள் வழங்கி இருக்கிறதே... பின் ஏன் இந்த என். எஸ். ஜி. ? உண்மையில் என். எஸ். ஜி யால் எந்தப் பயனும் இல்லை.

- மு. நியாஸ் அகமது 

 நன்றி: விகடன்.காம்



 

அழிவின் பாதையில் பேருயிர்!

டுத்தடுத்து மரணிக்கும் காட்டு யானைகளைப் பற்றியச் செய்திகள் அத்தனையும் நம்மை அதிர வைக்கின்றன.  இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடி வரை, எண்ணிக்கை ஏழு. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க வேண்டும்.

 `மதுக்கரை மகராஜ்' மரணம் நம் காதுகளை வந்தடையும் முன்னரே, ஓசூர் நெடுஞ்சாலையில் இன்னொரு யானை இறந்துபோனது. அடுத்த நாளே கோவையில் இன்னொரு தாய் யானை, குட்டியைத் தனியாக விட்டுவிட்டு இறந்துவிட்டது என அடுத்தடுத்து மரணச் செய்திகள். 


`காட்டு யானைகள், காடுகளைவிட்டு ஊருக்குள் வருவதால்தான் இறந்து போகின்றன. அவை தன்பாட்டுக்கு காட்டுக்குள் இருந்தால், ஏன் இவ்வளவு பிரச்னை வரப்போகிறது?' வெவ்வேறு தரப்பினரிடம் இருந்தும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் கேள்வி இது. 

காடு என்பது, வேலியிடப்பட்ட மிருகக்காட்சி சாலை அல்ல. அங்கே காட்டு உயிர்களுக்கு கட்டளையிட்டு தடுத்து நிறுத்த முடியாது. நம் காடுகளின் பரப்பளவு, ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டேபோகிறது. உணவுக்காகவும் நீருக்காகவும் காட்டு உயிர்கள் அல்லல்படுகின்றன. இன்னொரு பக்கம் கார்ப்பரேட் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், ஆன்மிக ஆசிரமங்களும் காடுகளையும் மலைகளையும் இயற்கைச் சூழலையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனர். இப்படி ஒரு சூழலில் நாம் கேள்வி எழுப்ப வேண்டியது, காட்டு விலங்குகளையா அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களையா? 

இந்தக் காட்டு ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ச்சியாக அழிப்பது, வெறும் காடுகளை மட்டும் அல்ல; யானைகளின் வாழ்விடங்களையும், வலசைப்பாதைகளையும், வழித்தடங்களையும் தான். யானைகளின் வலசைப்பாதைகள் என்பது, பல ஆயிரம் ஆண்டுகளாக யானைகளின் ஞாபக அடுக்குகளில் புதைந்து கிடக்கும் மரபார்ந்த நினைவுப்பாதை. 

ஒரு காட்டு யானை, ஒவ்வொரு நாளும் சராசரியாக 200 கிலோ உணவையும், 150 லிட்டருக்கும் அதிகமான நீரையும் உட்கொள்ளும். அதை ஒரே இடத்தில் இருந்து பெற முடியாது. எனவே, அது காட்டின் பல பகுதிகளுக்கும் நடந்து கடந்து கண்டு அடையும். அப்படி ஒரு வாழ்விடத்தில் இருந்து இன்னொரு வாழ்விடத்துக்குச் செல்லும் இந்தப் பாதை `யானைகளின் வழித்தடம்' (Corridor) என அழைக்கப்படுகிறது. இந்த மரபுவழிப் பாதைகளை யானைகள் தலைமுறை தலைமுறையாக மறப்பதே இல்லை. 

இந்தியா முழுக்க வன இணைப்புப் பாதைகள் 166-க்கும் அதிகமாக இருந்தன. இதில் நாம் அழித்தது, குடியேறியது, ஆக்கிரமித்தது, ஆட்டையைப்போட்டது எல்லாம் போக, இப்போது எஞ்சி இருப்பது 88தான். இதில் மிக அதிக அளவில் ஆசிய யானைகள் வாழும் பகுதியான தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் 20 பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தப் பாதைகளில் 
15 இணைப்புப் பாதைகள் ஏற்கெனவே மனிதர்களால் சூறையாடப்பட்டு கட்டடங்களாக உயர்ந்து நிற்கின்றன. எஞ்சி இருக்கும் பாதைகளில்தான் காட்டு உயிர்கள் கூட்டம் கூட்டமாகப் பயணிக்கின்றன. இவற்றில் யானை வழித்தடங்கள் எவ்வளவு மிச்சம் இருக்கின்றன. அதில் இன்னமும் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பவை எவ்வளவு என்பது குறித்து, இதுவரை முறையான ஆய்வுகள் எதுவுமே நடத்தப்படவில்லை.  இப்படிப்பட்ட இணைப்புப் பகுதிகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் முக்கியமானது கோவை வட்டாரம்தான். இந்த ஏழு யானைகளில் ஐந்து யானைகள் இங்குதான் இறந்துபோயிருக்கின்றன. 

கோவைக்கும் யானைகளுக்குமான உறவு, மிக நீண்டதும் நெடியதுமான வரலாறு. தெற்கே ஆனைமலைக்கும் வடக்கே கோவையின் காடுகளுக்கும் இடையே உள்ள பாலக்காடு கணவாய் என்பது கேரளா-தமிழக யானை வலசைப்பாதையாக பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்தது. சமீபத்தில் கோவை குமிட்டி பகுதியில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களே இதற்குச் சாட்சியாக விளங்குகின்றன. ஆனால், இன்று அந்த வழிகள் எல்லாம் மனிதர்கள் குடியேறி ஊர்களாகவிட்டன. ஆனைக்கட்டி, வேலந்தாவளம், மாவூத்தம்பதி என யானைகளோடு தொடர்புடைய ஊர் பெயர்கள் கோவை மக்களுக்கும் யானைகளுக்குமான தொடர்பை வெளிப்படுத்தும். கோவையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர்களில் பலர், இப்போதும் காட்டு யானைகளை மரியாதையோடு அழைப்பதைக் காணலாம். ஆனைக்கட்டியை அடுத்துள்ள பல மலைக்கிராமங்களில் யானைகளைப் பற்றி பேசும்போது `பெரியவங்க' `பெரியவரு' என அழைக்கிறார்கள். கோவை மக்களுக்கும் யானைகளுக்குமான அன்பு அந்த அளவுக்கு உள்ளார்ந்தது. தங்கள் வாழ்விடத்துக்காக விரட்டியடித்தாலும், அந்த ஆதி அன்புதான் மதுக்கரை மகராஜின் மரணத்துக்குக் கண்ணீர் சிந்தவும் போஸ்டர் அடிக்கவும் வைத்துள்ளது.
சென்னைக்கு அடுத்ததாக வெகுவேகமாக வளர்ந்துவரும் நகரமாக கோவை முன்னேறியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் அதன் வேகம் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. இது நகர விரிவாக் கத்தைத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டது. 

``கோவையின் மேற்குப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகம் உருவாக ஆரம்பித்துள்ளன. அழகிய மலைச்சாரல், எந்நேரமும் சுத்தமான நீர், அமைதியான சூழல் என மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரியல்எஸ்டேட் நிறுவனங்களால் காட்டை ஒட்டியிருக்கும் நிலங்கள் பந்திவைக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன. அமைதியை நாடும் பணக்காரர்கள் இந்தப் பகுதிகளில் வீடுகள் கட்டிக்கொள்ள எவ்வளவு தொகையும் தரத் தயாராக இருப்பதால், இங்கே பரபரவென வசிப்பிடங்கள் விற்கத் தொடங்கியுள்ளன. உல்லாச ரிசார்ட்டுகள், மனசாந்தி தரும் ஆன்மிக ஆசிரமங்கள், சர்வதேசப் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் என மேற்குத்தொடர்ச்சி மலை சூறையாடப்படுகின்றன. இதில் சிக்கித் தவிப்பவை அப்பாவி காட்டு உயிர்கள்தான்'' என்கிறார் சூழலியல் எழுத்தாளரான கோவை சதாசிவம். இதன் விளைவாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் காட்டு உயிர்களுக்கும் மனிதர் களுக்குமான மோதலும் இந்தப் பகுதிகளில் அதிகரித்துள்ளன. 

கோவையைச் சுற்றியுள்ள மலைகளை அடுத்துள்ள காட்டுப்பகுதிகளை `ரிசர்வ் ஃபாரஸ்ட்' எனப்படும் காப்புக் காட்டுப் பகுதியாக வரையறுத்துள்ளனர். இங்கு `காட்டுப்பகுதி' என்ற ஒரு எல்லைக்கல் நடப்பட்டிருக்கும். இந்த எல்லையில் இருந்து 150 மீட்டர்கள் வரைக்கும் பஃபர் ஜோன் (Buffer zone). இங்கே எந்தக் கட்டடங் களும் கட்டப்படக் கூடாது. இங்கே எந்தவித மாற்றங்களும் செய்யக் கூடாது என்பதுதான் விதி. ஆனால், இந்தப் பகுதிகளில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த விதிகளைக் கடைப்பிடிப்பது இல்லை. இப்படி காப்புக்காட்டு எல்லைக்குள் உருவாக்கப்படும் இந்த வேலிகளில் பலவும் யானைகளின் வழித்தடங்களை மறிக்கின்றன. ``யானைகளின் வலசைப்பாதைகளும் வழித் தடங்களும் தனியார் வசம் உள்ளன. நம்முடைய சட்டங்களில் அவற்றை மீட்பதற்கான வழிகள் எதுவுமே இதுவரை இல்லை. இப்படி ஆக்கிர மிக்கப்பட்ட மனிதர்கள் வாழும் பகுதிகளைக் கடக்கும் யானைகள் தங்களுடைய பாதைகளில் குழப்பமடைந்து திரும்பிச் செல்ல நேருகின்றன. அப்படிச் செல்லும்போது உணவுக்காகவும் நீருக்காகவும் வயல்களுக்குள்ளும் குடியிருப்பு களுக்குள்ளும் நுழைந்துவிடுகின்றன'' என்கிறார் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் காளிதாஸ். 

`ஹாக்கா' - Hill Area Conservation Authority (HACA) என்பது, மலைதலப் பாதுகாப்புக் குழு. மலை அடிவாரப் பகுதிகளில் ஏதேனும் கட்டடங்கள் கட்டவேண்டும் என்றால், இவர்களிடம்தான் அனுமதி பெறவேண்டும். மலைகளுக்கும் காடுகளுக்கும் மிக அருகே இருக்கும் ஒருசில கிராமங்கள் இந்தக் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆனால், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருக்கிற மத அமைப்புகள், ஆன்மிக ஆசிரமங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் பலவும் ஹாக்காவிடம் இதுவரை அனுமதி வாங்கவில்லை. 

``2012-ம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இந்த உத்தரவுக்கு எதிராக பல தனியார் விடுதிகளும் நிறுவனங்களும் உச்ச நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடை பெற்றுவிட்டனர். இப்போது வழக்கு நிலுவையில் உள்ளது'' என்று தங்களுடைய ஆதங்கத்தை நம்மிடம் பதிவு செய்தார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின், வழக்குரைஞர் வெற்றிச்செல்வன். 

கோவையைச் சுற்றியுள்ள விளைநிலங்களில், குடியிருப்புப் பகுதிகளில் யானைகள் நுழைவதால் பெரிய அளவில் பாதிப்பைச் சந்திப்பது விவசாயிகளும் பொதுமக்களும்தான். இதனால் விவசாயிகள் தொடர்ந்து தங்களுடைய பயிர்களுக்காகக் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். அதையும் மீறி யானைகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்வதால் மிகுந்த கோபத்துக்கு ஆளாகின்றனர். அவர்களுடைய கோபத்துக்கான காரணம் யானைகள் மட்டும் அல்ல, இப்படி காட்டு உயிர்களால் பயிர்கள் நாசமாகும்போது, அதற்கான இழப்பீடுகளுக்காக அலைக்கழிக்கும் அரசு அலுவலகங்களும்தான்.  அதனாலேயே தங்களுடைய மின்வேலிகளில் அதிக அளவு மின்சாரத்தைப் பாய்ச்சி யானைகளை விவசாயிகள் தாக்குவதும், மின்தாக்குதலுக்கு ஆளான யானைகள் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துவதும் தொடர்கதையாகிவிட்டன. ஆனால், ஆக்கிரமிப்பு கார்ப்பரேட் நிறுவனங்களோ இதைப் பற்றி எந்தவிதக் கவலைகளும் இல்லாமல் விவசாயி களுக்கும் யானைகளுக்குமான இந்தத் தொடர் மோதலை லாபவெறியோடு வேடிக்கை பார்க்கின்றன. 

கோவைப் பகுதிகளில் யானைகளைக் காவு வாங்கும் இன்னோர் எமன் ரயில் தண்டவாளங்கள். எத்தனையோ காடு, மலைகளை எளிதில் கடக்கும் யானைகளால் தண்டவாளங்களைக் கடக்க முடிவதில்லை. குறிப்பாக, போத்தனூர் - பாலக்காடு ரயில்பாதை வனப்பகுதிக்குள் செல்லக்கூடியது. 

2002-ம் ஆண்டு தொடங்கி 2009-ம் ஆண்டுக்குள் இந்தப் பாதையில் 11 யானைகள் இறந்துள்ளன. 

2008-ம் ஆண்டில் இந்தப் பாதையில் மூன்று யானைகள் இறந்துபோனபோது, குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். அந்தச் சமயத்தில் `ரயில் பாதைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பது, காட்டுப் பகுதிகளுக்குள் செல்லும்போது விளக்கு ஒளிகளைக் கட்டுப்படுத்துதல், வேகத்தைக் குறைத்தல்' எனப் பல விஷயங்களை ரயில்வே நிர்வாகம் செய்வதாக ஒப்புக்கொண்டது. ஆறு ஆண்டுகளாக இங்கே யானைகள் மரணம் தவிர்க்கப்பட்டுவந்த நிலையில், இப்போது இந்தக் கண்காணிப்புகள் குறைந்துவிட்டதால் மீண்டும் மரணங்கள் நிகழ ஆரம்பித்துள்ளன. 

``நம் காடுகளில் யானைகளுக்கான உணவு என என்ன இருக்கிறது? யானைகள் உண்ணும் மூங்கில், உசிலம், வெட்பாலை, மறுக்காரை, வெட்டாலம் என எந்த மரமும் இப்போது பரவலாக இல்லை. முழுக்க அந்நிய தாவரங்கள் நிறைந்து கிடக்கின்றன. யானைகள் உண்ணும் புற்களும் சுத்தமாக இல்லை. மலை அடிவாரங்களில்தான் அவை கிடைக்கின்றன. ஆற்றோரங்களில் இருந்த காடுகள் எல்லாம் அழிந்து விட்டன.  யானைகள் உண்ணுவதற்கான தாவரங்களை வனத்துறை வளர்க்க முன்வர வேண்டும். அவை குடிப்பதற்கான நீரும் தாரளமாக கிடைக்க வேண்டும். இன்று வரை கோவையின் மதுக்கரைக்கும் நரசிபுரத்துக்கும் நீருக்காகவும் உணவுக்காகவும்தான் இந்த யானைகள் வருகின்றன. இப்படி வரும் யானைகளைப் பிடித்துக் கொண்டுபோய் வேறு இடங்களில் விடுவதலோ, பழக்கப்படுத்தி வளர்ப்பு யானைகளாக மாற்றிவிடுவதாலோ பிரச்னை தீர்ந்துவிடும் என வனத்துறையினர் நினைக்கிறார்கள். 

உண்மையில், ஒரு காட்டுயானையைப் பயிற்றுவிக்கப்பட்ட யானையாக மாற்றுவதற்காக பிடித்துச் செல்வதைவிட அவை மயக்க மருந்தினால் இறந்துவிடுவதே மேல் எனத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு நம்முடைய வனத்துறையினர் யானைகளை கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்குகிறார்கள். மாதக்கணக்கில் பட்டினி போட்டு, அவற்றைத் துன்புறுத்தி, அடிமைகளாக மாற்றி, தன் இயல்புக்கு மாறாகப் பழக்குவது எந்த வகையிலும் அறமுள்ள செயலாக இருக்காது. காட்டின் ஆதார உயிர், யானை. அதன் வாழ்விடங்களைச் செழிப்பாக மாற்றுவதும், மேற்குத்தொடர்ச்சி மலையைக் காப்பாற்ற அறிவியல் அறிஞர்களைக்கொண்டு ஆய்வு செய்து தீர்வுகளை நோக்கி முன்னேறுவதும்தான் ஆரோக்கியமான நடவடிக்கையாக இருக்கும்'' என்று குறிப்பிடுகிறார் கோவை சதாசிவம்.

நம்முடைய பாதைகளில் சாலைகளில் யானைகள் குறிக்கிடுவதாக நினைக்கிறோம். ஆனால், உண்மையில் நாம்தான் யானைகளின் வழித்தடங்களில் ரயில்களையும் பேருந்து களையும் இயக்குகிறோம். நாம்தான் யானைகளின் காடுகளில் குடியேறி, கட்டடங்கள் கட்டி அட்டகாசம் பண்ணுகிறோம். ஆக்கிரமிப்புகளை எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாமல், தயவுதாட்சண்யம் இன்றி அகற்றுதலில் தொடங்கி, காட்டு உயிர்களின் வாழ்விடங்களைச் சீரமைத்து, அதில் போதிய உணவும் நீரும் கிடைப்பதற்கான வழிமுறைகளை அதிகரிக்காமல் யானைகளை வெடிவைத்து விரட்டியும், மயக்க மருந்து கொடுத்து இடப்பெயர்த்தும் எந்தவித மாற்றமும் நிகழ்ந்துவிடாது. ஏன் என்றால், ஒரு யானையின் மரணத்தில் நாம் கணிசமான அளவுக்குக் காட்டையும் சேர்த்தே இழக்கிறோம். யானைகளின் அழிவு என்பது, காட்டின் அழிவு. 

தீர்வுகள் என்ன?

இந்தக் காட்டு உயிர் பிரச்னை என்பது, வெறும் வனத்துறை தொடர்பான பிரச்னை கிடையாது. இதில் வருவாய்த் துறை, விவசாயத் துறை, காவல் துறை எனப் பலரும் இணைந்து செயல்பட வேண்டும். 
யானைகளின் உணவாக இல்லா பயிர்களை, வனத்துக்கு அருகில் இருக்கும் விளைநிலங்களில் பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு மாற்று யோசனைகள் தந்து உதவலாம்.

வனப்பகுதிகளில் நீர்நிலைகளை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றோரக் காடுகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளுதல்.

தனியார்களிடம் இருந்து வலசைப்பாதைகளை மீட்டு அவற்றை யானைகள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைப்பது.

குத்தகைக்கு விடப்பட்டுள்ள காபி மற்றும் தேயிலைத் தோட்டங்களை மீட்டு, அங்கே மீண்டும் வனங்கள் அமைப்பது.

யானைகளின் வழித்தடங்களில் மின்வேலி அமைத்து இருந்தால், அதில் மின்சாரத் துறை உதவியோடு அதிக அழுத்த மின்சாரம் பயன்படுத்துவதைத் தடுப்பது.

குப்பைகளால் அழியும் காட்டு உயிர்!

சட்டத்துக்குப் புறம்பாக கோவையைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் தொடர்ச்சியாகக் குப்பைகள் குவிக்கப்படுகின்றன. இது காட்டு உயிர்களின் ஜீரண மண்டலத்தை வெகுவாகப் பாதிக்கக்கூடியது. கூடவே காட்டு உயிர்களுக்கு வெவ்வேறுவிதமான புதிய நோய்களையும் பரப்புகிறது. மிக அண்மையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் குப்பைகளைக் கிளறி தின்றுகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். யானைகளின் மர்ம மரணங்களுக்கு இந்தக் குப்பைகளும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

ஆயிரம் யானைகள்

இந்தியா முழுக்க பல ஆண்டுகளாக நடந்துவந்த யானை வேட்டைகளைத் தடுக்க 1991-ம் ஆண்டில் `புராஜெக்ட் எலிஃபென்ட்ஸ்' என்கிற திட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. வேட்டைத் தடுப்புக் காவலர் பணி நியமனங்களும் அந்தச் சமயத்தில்தான் நடந்தது. இதன் பலனாக, கடந்த ஆண்டுகளில் யானைகள் வேட்டையாடப்படுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் கடந்த பத்து ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. யானைகளின் எண்ணிக்கை உயர்ந்தாலும் இன்னொரு பக்கம் காடுகளின் அளவு குறைவதும், அதிகரித்துள்ள யானைகளுக்குப் போதுமான நீரும் உணவும் கிடைக்காமல்போனதும்தான் யானைகளின் இந்த மனித மோதலுக்குக் காரணமாக உள்ளது.

2001-ம் ஆண்டு தொடங்கி 2015-ம் ஆண்டு வரைக்குமான கால இடைவெளியில் இறந்துபோன யானைகளின் எண்ணிக்கை 1,113. இவற்றில் 1,020 யானைகள் இயற்கையாகவும், 65 யானைகள் மின்வேலிகளில் மின்தாக்குதலுக்கு உள்ளாகியும் இறந்துபோயுள்ளன. இதில் 47 யானைகள் இறந்துபோனது கோவைப் பகுதிகளில். இவற்றில் 28 யானைகள் வேட்டையாடப்பட்டு இறந்துள்ளன. 

-அதிஷா
நன்றி: ஆனந்தவிகடன், 20 ஜூலை 2016

இ - வேஸ்ட் பயங்கரம்!

டைசியாக நீங்கள் ஒரு புதிய மொபைலை வாங்கியது எப்போது, இந்த நொடி உங்கள் வீட்டுக்குள் எத்தனை மொபைல்கள் இருக்கின்றன, அதில் எத்தனை மொபைலை  நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ பயன்படுத்துகிறீர்கள்?

நாம் பயன்படுத்தாத மின்னணுப் பொருட்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் டெரா பைட் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இந்தியா ஓர் ஆண்டுக்கு 18 லட்சம் டன் மின்கழிவுகளைக் கொட்டுகிறது. 2018-ம் ஆண்டில் இது 30 லட்சம் டன்னாக உயரும். அதைவிட அதிர்ச்சித் தகவல்... பல லட்சம் டன் மின் கழிவுகளை மற்ற நாடுகளில் இருந்து, நாம் இறக்குமதி செய்கிறோம். குப்பையை எதற்கு இறக்குமதி செய்யவேண்டும்?

மின்கழிவுகளில் இருந்து உதிரிப்பாகங்களைப் பிரித்தெடுத்து அதை மறுசுழற்சிக்கு உட்படுத்துவது உண்டு. அப்படிச் செய்வதில் பல ஆபத்துகள் இருக்கின்றன. சில சமயம் கதிர்வீச்சுகள்கூட இதில் சாத்தியம். தேவையான பொருட்களைப் பிரித்தெடுத்த பின்னர், எதற்குமே பயன்படாத பொருட்களை மண்ணில்தான் கொட்ட வேண்டும். அது சுற்றுச்சூழலுக்குக் கேடு. அதனால் முன்னேறிய பல நாடுகள்  தங்கள் தேசத்து மின்கழிவுகளை சட்டத்துக்கு விரோதமாக நம் நாட்டுக்குள் கொட்டிவிடுகின்றன. அதைப் பிரித்தெடுக்கும் ஆபத்தான வேலையையும், அந்த மின்கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதகங்களையும் நம் தலையில் சுமத்துகின்றன. `அட்டிரோ’ என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும்தான் முறையாக உரிமம் பெற்று மின்கழிவுகளை இறக்குமதி செய்கிறது. மற்ற எல்லா இறக்குமதிகளுமே இல்லீகல்தான்.

மின்கழிவுகள் என்றதும் ஹாலிவுட் ஸ்டைலில்  பூமியை அழிக்கநினைக்கும் வேற்றுக் கிரகவாசிகளின் சதித்திட்டம் என நினைக்க வேண்டாம். நாம் தூக்கி எறியும் ரிமோட், மொபைல் சார்ஜர்கள், கேபிள்கள் தொடங்கி எல்லா தேவையற்ற மின் மற்றும் மின்னணுப் பொருட்கள்தான் மின் கழிவுகள்.
நாம் உருவாக்கும் மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மின் கழிவுகள்,  டெல்லிக்கு அருகில் இருக்கும் சீலாம்பூர் நகருக்குத்தான் வருகின்றன. இது இந்தியாவில் மின் கழிவுகளைக் கையாளும் மிகப்பெரிய இடம். சிறியதும் பெரியதுமாக 3,000 மின்கழிவுக் கடைகள் இங்கே இருக்கின்றன. உலகம் முழுவதும் உருவாகும் மின் கழிவுகளில் 70 சதவிகிதம் சீலாம்பூருக்குதான் வருகின்றன. இன்னும் முறைப்படுத்தப்படாத இந்தத் தொழிலால் இந்தியா முழுக்க ஒரு லட்சம் பேர் பிழைக்கிறார்கள். அதில் சீலாம்பூரில் மட்டும் 30,000 பேர்.

சீலாம்பூர் பகுதியில் வேலைசெய்வர்களில் பெரும்பாலோர் பதின்ம வயதினர். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லாமல் தினம் 200-300 ரூபாய் வருமானத்துக்கு குழந்தைகளும் இளைஞர்களும் இங்கே வேலைசெய்கிறார்கள். இவர்களின் தலைமுடிகூட தங்கம்போல் மின்னுகின்றன. அதற்குக் காரணம் இந்த நகரின் காற்றில் கலந்திருக்கும் காப்பர். இவர்களின் வேலை, பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் காப்பரைப் பிரித்தெடுப்பது மட்டும்தான். அதன் பின்னர் அவை காட்டுப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதாகச் சொல்கிறார்கள். பெரும்பாலான மின்கழிவுகளில் இருக்கும் பாதரசம், ஈயம், கேட்மியம் போன்றவை விஷத்தன்மை உடையவை. இவற்றை மண்ணில் கொட்டுவதும், பூமிக்குள் புதைப்பதும் சுற்றுச்சூழலுக்குத் தீங்கானது. 

சீலாம்பூரில், குடும்பம் குடும்பமாக சர்க்யூட் போர்டுகளில் இருந்து தங்கத்தையும், காப்பரையும் பிரித்தெடுக்கிறார்கள். ஆம்... அதிர்ஷ்டம் இருந்தால், சில மின்னணுப் பொருட்களில் இருந்து தங்கம்கூட கிடைக்கலாம் என்கிறார்கள். ஒரு மதர்போர்டைப் பார்த்தாலே, அது ஜப்பானில் தயாரித்ததா, சீனாவில் தயாரித்ததா என இந்த ஊர் குழந்தைகள்கூடச் சொல்லிவிடுகிறார்கள். சீனப் பொருட்களைவிட ஜப்பான் பொருட்களில் தங்கமும் நல்ல காப்பரும் கிடைக்கும் என்பது சீலாம்பூர் கண்டுபிடித்த ரகசியம். தங்கத்தையும் காப்பர் கம்பிகளையும் எடுத்த பிறகு ஒட்டுமொத்த யூனிட்டையும் எரிக்கிறார்கள். பிளாஸ்டிக் உருக, எஞ்சியிருக்கும் மெட்டல்களை விற்று காசாக்குகிறார்கள்.

மின்கழிவுகளைக் கையாள்வது எளிது அல்ல. பல குழந்தைகளின் கைகள் தினம் தினம் பிளாஸ்டிக் பொருட்களால் ரத்தத்தைப் பார்க்கின்றன. சில மின்கழிவுகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் உயிரையே பறிக்கலாம். 2010-ம் ஆண்டு சீலாம்பூர் அருகே இருக்கும் மாயபுரி என்ற இடத்தில் நடந்த கதிர்வீச்சு விபத்தில் ஒருவர் இறந்துபோனார். பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்னமும் வேலைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு இந்திய அரசு விதிகளை இறுக்கியிருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது, குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றை அரசு தீவிரமாகக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. முறைப்படுத்தப்பட்ட மின்கழிவு நிறுவனங்கள் நிறைய வந்துவிட்டன. இவர்களால், சாதாரண வியாபாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆபத்தான இந்தத் தொழிலை முறைப்படுத்துவது முக்கியம். அதே சமயம், அதை கார்ப்பரேட் வசம் முழுமையாக ஒப்பட்டைப்பதும் ஆபத்தில் முடியலாம். அடுத்து வரும் ஆண்டு களில் ராட்சச வேகத்தில் வளர விருக்கும் இந்தத் துறையை கூடுதல் கவனத்தோடு அரசு கவனிக்க வேண்டும். மின்கழிவு நிறுவனங்களைச் சீரிய இடைவெளியில் அரசு கண்காணித்து உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வலியுறுத்தப்பட வேண்டும்.

மின்கழிவுகளில் இருந்து தங்கம் கிடைப்பதும் தகரம் கிடைப்பதும் அவரவர் அதிர்ஷ்டம் என்கிறார்கள் சீலாம்பூர்வாசிகள். அரசு என்ன எடுக்கப்போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி!

திக மின்கழிவுகள் கொண்ட இந்திய மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்டிராவுக்கு முதல் இடம். தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நகரங்கள் பட்டியலில் டெல்லி, மும்பை, பெங்களூ ருக்கு அடுத்த இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் மின்கழிவுகளைக் கையாளும் மிகப்பெரிய தொழிற்சாலை உள்ளது. இதைப் போல குறைந்தபட்சம் 10 தொழிற்சாலைகள் தமிழகத்துக்குத் தேவை என்கிறார்கள்!

-கார்க்கிபவா

நன்றி: ஆனந்தவிகடன், 20 ஜூலை 2016
   

துயரத்தின் சாட்சிகள்! - ஃபுகுஷிமாவில் இருந்து... -கவிதா முரளிதரன்

முதலில் பூகம்பம், அதைத் தொடர்ந்து சுனாமி... ஜப்பானை மட்டும் அல்ல, உலகையே உலுக்கிப்போட்ட ஃபுகுஷிமாவில் அணு உலை விபத்து நடந்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. சுனாமிக்குப் பிறகு, அணுமின் நிலையத்தில் தொடர்ச்சியாக கதிரியக்கக் கசிவு ஏற்பட்டது. அதில் இருந்து மக்களைக் காப்பாற்ற, அணு உலையைச் சுற்றியிருந்த கிராமங்களில் இருந்து சுமார் இரண்டு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இன்னமும் ஒரு லட்சம் பேர் தமது இருப்பிடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். சுகேனோ, யொஷிஸவா என்கிற இரண்டு விவசாயிகள், இந்த அணு உலை விபத்தால் பாதிக்கப்பட்ட நேரடி சாட்சியங்கள். ஒரு கருத்தரங்கில் உரையாற்ற சென்னை வந்திருந்தவர்களை ஓய்வு நேரத்தில் சந்தித்தோம்...

விபத்து நடந்த பகுதியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருந்தது யொஷிஸவாவின் வீடு. “சுனாமிக்குப் பிறகு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நான்கு அணு உலைகளில் விபத்து நிகழ்ந்தது. மிகக் கோரமான விபத்து அது. ஏழாவது நாள் அணு உலைகளை இயக்கிவந்த டெப்கோ அலுவலகத்துக்குச் சென்றேன்.  எனது எதிர்ப்பைப் பதிவுசெய்வதும் இழப்பீடு கோருவதும்தான் நோக்கம். அப்போதுகூட இந்த விபத்து எங்களை இவ்வளவு மோசமாகப் பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. நான் மட்டும் அல்ல, ஃபுகுஷிமா மக்கள் யாருக்குமே ஆபத்தின் முழுமையான வீரியம் புரியவில்லை. எங்களுக்கு சொல்லப்படவும் இல்லை. நாங்கள் விபத்துக்குப் பிறகு அணு உலைகளுக்கு அருகில் செல்வதையும் பார்வையிடுவதையும் அணு உலை நிர்வாகம் தடுக்கவில்லை” என்கிறார் யொஷிஸவா.

பல குழப்பங்களுக்குப் பிறகு, இரண்டு மாதங்கள் கழித்து ஃபுகுஷிமா குடிமக்களுக்கு அரசிடம் இருந்து ஓர் உத்தரவு வந்தது. அவர்களிடம் இருந்த ஆடு, மாடுகளைக் கொன்றுவிடுமாறு சொன்னார்கள்.
கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆடு, மாடுகளால் பல  பிரச்னைகள் உண்டாகும் என்பதால், அந்த முடிவு. அரசின் உத்தரவை ஏற்று, பலரும் தாங்கள் வளர்த்த மாடுகளை விஷம்வைத்துக் கொன்றார்கள். சிலர் கொல்ல மனம் இன்றி அப்படியே விட்டுவிட, பல மாடுகள் பட்டினி  கிடந்து இறந்தன. ஆனால், யொஷிஸவா வேறு ஒரு முடிவை எடுத்தார்.

அவர் தனது மாடுகளையும் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட மற்ற மாடுகளையும் வளர்ப்பது என முடிவுசெய்தார். அவரது முடிவுக்கு, மக்களிடம் ஆதரவு பெருகியது. இப்போது யொஷிஸவாவின் பண்ணையில் சுமார் 300 மாடுகள் இருக்கின்றன. `நம்பிக்கை பண்ணை' என அதற்குப் பெயர் வைத்திருக்கிறார். 

“அந்த மாடுகளால் எந்த லாபமும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த மாடுகள் எங்களின் துயரத்தின் சாட்சி. அரசு மாடுகளைக் கொல்லச் சொல்லக் காரணம், தொந்தரவு செய்யும் உண்மைகளை மண் போட்டு மூடிவிட வேண்டும் என்பதே. அதனால்தான் இந்த மாடுகளை வளர்க்கிறேன்” என்கிறார் யொஷிஸவா. 

மிசுவோ சுகேனோவுக்கு 28 வயது. என்ன கேட்டாலும் அவரிடம் இருந்து வருவது ஒற்றைச் சொல் பதில்களே வருகின்றன. ஃபுகுஷிமா பற்றி சொல்ல அவரிடம் தீராத கதைகள் இருக்கின்றன. எல்லாமே, நிலத்தின் மீது நீங்காத பேரன்பு கொண்ட ஒரு தலைமுறை மக்களின் துயரம் தோய்ந்த கதைகள். சுகேனோ, இயற்கை விவசாயி. தலைமுறை தலைமுறையாக அவரது குடும்பத்தின் தொழில் அது.
``நான் பல்கலைக்கழகப் படிப்பு முடித்து வீடு திரும்பி ஒரு வருடம் ஆகியிருந்தது. குடும்பத்தோடு நானும் விவசாயம்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது.'' என நினைவுகூர்கிறார்.  விபத்து நடந்து ஐந்து வருடங்கள் முடிந்த பிறகும், சுகேனோவின் குரலில் நடுக்கம் இன்னும் மிச்சம் இருக்கிறது. இத்தனைக்கும் விபத்து நடந்த இடத்தில் இருந்து இவரது வீடும் நிலமும் 47 கி.மீ தள்ளியிருந்தது. 

“உண்மையைச் சொன்னால் அந்த விபத்தால் எங்களுக்கு நேரடியாக எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், கதிரியக்கம் எங்களது நிலங்களையும் விளைபொருட்களையும் கடுமையாகப் பாதித்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்கிறார்.
சரியான வழிகாட்டுதலோ அறிவுறுத்தல்களோ இல்லாத நிலையில், தங்களுக்கு `சரி' எனத் தோன்றியதை அப்போது விவசாயிகள் செய்தார்கள். பசுமை இல்லத்தை உடனே முழுமையாக மூடிவைக்கும்படி சுகேனோவுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் அவரது அப்பா. 

``விவசாயத்தைப் பொறுத்தவரையில் மண்தான் எல்லாம். அதனால் மண்ணைக் காப்பதுதான் எங்களுக்கு முக்கியமான விஷயமாக இருந்தது. நாங்கள் செய்தது எல்லாம் சரியான விஷயங்கள்தானா என்றுகூட எங்களுக்குத் தெரியாது. ஆனால், ஏதோ ஓர் உந்துதலில் எல்லாம் செய்தோம்” என்கிறார் சுகேனோ.

``கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் நிலை எங்களைவிட மிக மோசமாக இருந்தது. அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டிய தேவை இருந்தது. வீடு திரும்பிய பிறகு நாங்கள் பார்த்த முதல் வேலை, அவர்களுக்காகச் சில பொருட்களைச் சேகரித்து அனுப்பியதுதான்”-அதைத் தொடர்ச்சியாகச் செய்தது, சுகேனோவுக்கு வேறுவிதமான புரிதலையும் நிதானத்தையும் தந்தது.
பெரும்பாலான நேரத்தை தனது நிலத்தைக் காப்பாற்ற முடியுமா என்பது பற்றி ஆய்வு செய்வதிலேயே செலவழித்தார். இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட நிலத்தில் இருந்து, விளைபொருட்களுக்குக் கதிரியக்கம் பரவாமல் தடுக்க பல வழிகள் இருப்பதை தன் ஆய்வு மூலமாகக் கண்டுகொண்டார்.
 
``ஒருகட்டத்தில் நாங்கள் விற்பனைக்கு அனுப்பும் எந்த விளைபொருளிலும் கதிரியக்கமே இல்லை என்ற நிலை உருவானது” என்கிறார் அவர். தனது நிலத்தின் மீதான ஆழமான நம்பிக்கையின் வெற்றியாக அதைப் பார்க்கிறார் சுகேனோ. 

``என்ன விளைவு வரும் எனத் தெரியாத நிலையில் நான் நிலத்தில் விதைகளை விதைத்தேன். விதைகள் எனது மண்ணின் மகத்துவத்தை மீட்டெடுக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு ஆழமாக இருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை” என்கிறார் அவர். ஆனால், அதன் பிறகுதான் அசலான சவால்கள் உருவாகின. ஃபுகுஷிமாவில் உள்ளவர்கள் சுகேனோவை நம்பினார்கள். அதைத் தாண்டி இருந்த மக்கள் நம்புவதற்குத் தயங்கினார்கள். அவர்களிடத்தில் ஃபுகுஷிமாவின் உண்மையையும் குரலையும் எடுத்துரைக்க சுகேனோ உருவாக்கிய அமைப்புதான் `கிபோதானே’ – நம்பிக்கையின் விதைகள்!
இந்த அமைப்பின் மூலம் ஃபுகுஷிமா மக்கள் மிக நேசிக்கும் மண்ணையும் விவசாயத்தையும் பிற பகுதிகளுக்கும் எடுத்துச்செல்வதுதான் சுகேனோவின் திட்டம். வெளியிடங்களில் இருந்து வருபவர்களுக்கு ஃபுகுஷிமாவின் விவசாயத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பயணத் திட்டங்களை வகுப்பது, அவர்களை விவசாய நிலங்களில் உள்ள குடில்களில் தங்கவைத்து இயற்கை விவசாயம் பற்றி நேரடியான அனுபவத்தைத் தருவது என, பல விதங்களிலும் செயல்படுகிறது நம்பிக்கையின் விதைகள் அமைப்பு. 

“எஞ்சியிருக்கும் எங்களது வாழ்க்கையை உங்களிடம் சில உண்மைகளைப் பகிர்ந்தபடி கழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் இந்தியாவுக்கு எல்லாம் வருவோம்; இங்கு இருக்கும் மாணவர்களுடன் உரையாடுவோம் என கனவிலும் நினைத்தது இல்லை” என்று சிரித்தபடியே சொல்கிறார்கள் இருவரும். 
``ஆனால் காலம், ஃபுகுஷிமாவில் இருக்கும் ஒவ்வொருவரையும் சமூகப் பணியாளராக மாற்றியிருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா? ஃபுகுஷிமாவில் நிலத்தையும் தமது ஆடு, மாடுகளையும்விட்டு பிரிய முடியாத 80 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் குழந்தைகளை தைராய்டு கேன்சர் தாக்கத் தொடங்கியிருக்கிறது. எஞ்சியிருப்பவர்கள் உங்களைப் போன்றோரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்.”

`பூவுலகின் நண்பர்கள்' அழைப்பின் பேரில் சென்னை வந்து சென்னைப் பல்கலைக்கழக ஊடகவியல் மாணவர்களுடன் உரையாடிய சுகேனோவும் யொஷிஸவாவும், அது தங்களுக்குள் மிகப் பெரிய நம்பிக்கையை விதைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். 

“கல்லூரியில் படிக்கும்போது இப்படி சமூகத்துக்குப் பயனுள்ள ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும், மாணவர்களுடன் உரையாட வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்தக் கனவு, இப்படி நிறைவேறும் என எதிர்பார்க்கவில்லை” என்கிறார் சுகேனோ.

“அணு விபத்து, எங்களை வெவ்வேறு திசைகளை நோக்கி விரட்டியிருக்கிறது; நாங்கள் நினைத்துப்பார்க்க முடியாத தொலைவுகளைக் கடக்கவைத்திருக்கிறது; தாங்க முடியாது என நினைத்த வலிகளை எதிர்கொள்ள வைத்திருக்கிறது; எங்களது வாழ்க்கையை வரலாறாக்கி இருக்கிறது. இந்த வரலாறில் இருந்து நீங்கள் பாடம் படிக்க வேண்டும். இல்லை என்றால், வரலாறு திரும்பும். அதன் ஒரு வலி மிகுந்த பகுதியாக நீங்கள் மாறக்கூடும்'' - புன்னகையுடன் கைகொடுத்தபடி விடைபெறுகிறார் யொஷிஸவா.

``நீங்கள் ஃபுகுஷிமா வரும்போது சொல்லுங்கள், எங்கள் நிலத்துக்கே உரிய ஸ்ட்ராபெர்ரி ரைஸ் கேக்கை நீங்கள் சாப்பிட வேண்டும். அவ்வளவு சுவையாக இருக்கும். இப்போது யொஷிஸவா வளர்க்கும் மாடுகளோடு எங்களது ரைஸ் கேக்கும் எதிர்ப்பின் குறியீடாக இருக்கிறது. எங்கள் உணவையும் நாங்கள் வளர்த்த மாடுகளையும்கூட போராட்ட ஆயுதங்களாக மாற்றியிருப்பதுதான் அணு விபத்து எங்களுக்கு செய்த நன்மை” என்று சொல்லும்போது சுகேனோவுக்குக் குரல் உடைகிறது. 

ஃபுகுஷிமாவில் அவர்கள் தொடர வேண்டிய பயணம் காத்திருக்கிறது!

-கவிதா முரளிதரன்

நன்றி: ஆனந்தவிகடன், 06 ஏப்ரல் 2016
   

More Recent Articles


You Might Like